Wednesday, March 5, 2014

தொன்மையான குடிமல்லம் லிங்கம்-2200 ஆண்டுகள் பழமையானது

2200  ஆண்டுகள் பழமையான  குடிமல்லம் பரசுராமேஸ்வரர் ஆலய லிங்கம்
குடிமல்லம் லிங்கம்.- ஆங்கரை கிருஷ்ணன்.   avgkrishnan@gmail.com

Click the image to open in full size.
    உலகம் முழுதும் இறைவனை வழிபடுவதில் தொன்மையானது லிங்கவழிபாடு ஆகும். தற்போதைய நிலையில் மிகவும் பழமையான லிங்கங்கள் என்பது
1. ஆந்திரா குடிமல்லம் பரசுராமேஸ்வரர் ஆலய லிங்கமும்                                                     2. “பிடா” எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டு லக்னோ அருங்காட்சியகத்தில் உள்ள பஞ்சமுக லிங்கம் ஆகும்.
நாம் முதலில் குடிமல்லம் லிங்கம் பற்றி விரிவாகக் காண்போம்.   ஆந்திர மாநிலத்தில் குடிமல்லம் என்ற ஊரில் உள்ள பரசுராமேசுவரர் கோவிலில் வழிபடப் பெறுகிறது. இவ்வூர் சென்னைக்கு அருகே காளஹஸ்தியிலிருந்து 21 கி.மீ., தொலைவிலும், ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு தென் கிழக்கே 11 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூருக்கு சற்று தொலைவில் சுவர்ணமுகி ஆறு ஓடுகிறது.
 
Click the image to open in full size. Click the image to open in full size. 
Click the image to open in full size.
Click the image to open in full size.  
குடிமல்லம் பரசுராமேசுவரர் கோவில் மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் போற்றி பாதுகாக்கப்படுகிறது. `குடி’ என்றால் தெலுங்கில் `கோவில்’ என்பது பொருள். இக்கோவிலை 1903ம் ஆண்டு கல்வெட்டு அறிஞர் வெங்கய்யா ஆய்வு செய்து இதன் சிறப்பினை எடுத்துக் கூறினார். இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகளின் வரலாற்றுச் சிறப்பினை தொல்பொருள் ஆய்வு அறிஞர் கோபிநாதராவ் எடுத்துரைத்தார்.
தொன்மைச் சிறப்புமிக்க பரசுராமேசுவரர் கோவில், குடிமல்லம் சிவபெருமானை லிங்க வடிவிலே கண்டு போற்றி வழிபடுகிறோம். மிகவும் தொன்மையான அற்புத வடிவம் கொண்ட சிவலிங்கம், இக்கோவிலில் 1973ம் ஆண்டு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டபோது வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப் பொருட்கள், கல்வெட்டுகள் ஆகியவை கிடைத்தன. இக்கோவிலின் தொன்மைச் சிறப்பினை ஆய்வாளர் ஐ.கே.சர்மா என்பவர் தமது `சைவ சமய கட்டடக்கலை வளர்ச்சி’ என்ற ஆங்கில நூலில் ஆய்வுக்கட்டுரையாக எழுதியுள்ளார். இனி இக்கோவிலை காண்போம்!
 
கிழக்கு நோக்கிய திருக்கோவில். கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்ற அமைப்புகளை உடையதாக விளங்குகிறது. தொண்டை நாட்டுப் பகுதிக்கே உரிய தூங்கானை வடிவில் (கஜபிருஷ்டம்) கருவறை அமைந்துள்ளது. கருவறையின் பின்பகுதி வட்டவடிவமாக அமைந்திருக்கும். கருவறையின் தேவகோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பெருமாள், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வ வடிவங்கள் அமைந்துள்ளன. இவற்றில் தட்சிணாமூர்த்தி வடிவம் சிறப்பானது. தமது மேலிரு கரங்களில் அட்சமாலையும், கெண்டியையும் தாங்கியிருக்கிறார். இடதுமேற்கரத்தில் கெண்டியைத் (கமண்டலம்) தாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவிலில் நுழைந்து செல்லும்போது மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஒன்றுக்கொன்று சற்று பள்ளமாக அமைந்திருப்பதால் `குடிபள்ளம்’ எனவும் இப்பகுதியில் அழைக்கின்றனர். கோவிலில் அம்மன் `ஆனந்தவல்லி’ என்ற பெயருடன் தனிச்சன்னிதியில் அங்குசம் – பாசம், அபய – வரத கரங்களுடன் கருணை பொங்கும் முகப்பொலிவுடன் அருள்மழை பொழிகிறாள். திருச்சுற்றில் பரிவார கோவில்கள் உள்ளன. இவற்றில் வடகிழக்கில் காணப்படும் சூரியன் திருமேனி தொன்மையானதாகும். நுழைவு வாயிலில், மேல் கோபுரம் இல்லாமல் தட்டையாக உள்ளது.
இக்கோவிலில் 25க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பிற்கால பல்லவ மன்னர்கள், பான அரசர்கள் சோழமன்னர்கள், யாதவராயர்கள் இக்கோவிலைப் போற்றி சிறப்பான வழிபாட்டிற்கு தானமளித்ததைக் கல்வெட்டுகளின் மூலம் அறிகிறோம். கல்வெட்டுகளில் இவ்வூர் திருவிப்பிரம்பேடு பேரம்பேடு என அழைக்கப்படுகிறது.
   இங்கு கோவில் கொண்டுள்ள இறைவன் பரசுராமேசுவரமுடைய நாயனார் என்றும் பரசுராம மகாதேவர் எனவும் அழைக்கப்படுகிறார். முதலாம் ராஜராஜசோழனால் இக்கோவிலில், விளக்கு எரிக்கவும், இறைவனுக்கு அபிஷேகம் செய்ய கிணறு அமைக்கவும் தானம் அளிக்கப்பட்டது. விக்கிரம சோழன் காலத்தில் இக்கோவில் திருப்பணி செய்யப் பெற்று மீண்டும் கட்டப்பட்டன என்பதை அறிய முடிகிறது. கருவறையில் மிகவும் அற்புதமான சிவலிங்க வடிவம் வழிபடப் பெறுவதைக் காணலாம்.
அருகிலுள்ள திருப்பதி மலைத்தொடரில் காணப்படும் மிக மென்மையான சிவப்பு நிற எரிமலைக் கல்லால் இந்த லிங்கம் செய்யப்பட்டுள்ளது. இக்கல்லினைப் பளபளப்பாக மெருகேற்றி, மூலஸ்தானத்தில் தரையில் எழுச்சியுற்றுக் காணப்படும் பாறையைக் செவ்வக வடிவில் செதுக்கி, நடுவில் குழிவாகக் குடைந்து பிண்டிகையை (பீடத்தை) உருவாக்கியுள்ளது. லிங்கம் இப்பிண்டிகையில் பொருத்தப் பட்டுள்ளது. இந்த லிங்கம் 5 அடி உயரமுள்ளது.
லிங்கம் மேலே சற்று விட்டு 7கோணமாக செதுக்கப்பட்டு, முன்புறப் ப்குதியில் சிவபெருமானின் அழகிய உருவம் செதுக்கப் பட்டுள்ளது. சிவபெருமான் மனித உருவில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டு கரங்கள்.  வலது கரத்தில் உயிரற்ற ஆட்டினை தலைகீழாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். இடது கரத்தில் வாய் குறுகிய குடுவையைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். இடது தோளின் மீது `பரசு’ எனும் கோடரியை சாய்த்து வைத்துக் கொண்டிருக்கும் கோலத்தில் காணலாம். சிவனது தலை முடியமைப்பு சடையாக இன்றி நீண்ட புரி குழல்களாலான கற்றைகளாக உள்ளது. இக்குழற்  கற்றைகளையே, தலையைச் சுற்றிலும் தலைப்பாகை அணிவது போல் அலங்கதித்துக் கொண்டுள்ளார்.
கன்னக் கதுப்பெலும்புகள் உயர்ந்தும், மூக்கு சற்றே சப்பையாகவும், நெற்றி குறுகலாகவும், கண்கள் சற்றே பிதுங்கியும் அமைந்துள்ளது. கண்கள் சற்றே சரிந்து பார்க்கிறது. இது வேத றியில் “விருபாக்ஷன்” எனும் சிவநாமத்திற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. சிவனின் காதுகள் துளையிடப்பட்டுள்ள வடிகாதுகளாக, தோள்களைத் தொடும் வகையில் தொங்குகின்றன.
அத்துளைகளில் குண்டலங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இரு கைகளிலும், முழங்கைக்கு மேலே அங்கதா எனப்படும் அழகிய தோள்வளைகளும் மணிகட்டுக்கு மெலே பல வடிவங்களில் செய்யப் பட்ட ஐந்து ஐந்து வளையலகளும் அணிந்துள்ளார். சிற்பத்தை நுணுக்கமாக நோக்கினால், சிவன்  மிக மெல்லியதான நெய்யப்பட்ட இடையாடைஉடுத்தியுள்ளது தெரியும். ஆயினும் உள்ளுருப்புகள் தெரிவதாக உள்ளது, ஆனால் தினசரி பூஜையில் மேலாடை சார்த்தியே தரிசனம் தரப்படும்.
தலையில் ஜடாபாரமாக முடி அலங்காரம். காதுகளில் பத்ர குண்டலங்கள். மலர்ந்த முகத்துடன் காட்சி தருகிறார். சிவன் அபஸ்மார புருஷனின் அல்லது அரக்கனின் தோள்கள் மீது தன் கால்களை விரித்து ஊன்றி நிற்கிறார். கூன் விழுந்து குறுகிக் காட்சியளிக்கும்  அபஸ்மார புருஷனோ, தன்னுடைய கால்களுக்கருகில் கைகளை ஊன்றி அமர்ந்துள்ளான். அவருடைய காலின் கீழே யக்ஷன் காலை மடக்கி அமர்ந்து, குனிந்த நிலையில் இறைவனைத் தாங்கிக் கொண்டிருக்கிறான். அவனது தலைமுடி ஜடாமகுடம் போலவும், கழுத்தில் மணிமாலையும் காட்சியளிக்கின்றன. குள்ளமான தடித்த உடலுடன் காணப்படும் இவனுடைய காதுகள் படர்ந்து கூர்மையாகவும் உள்ளது. இருப்பினும் இவனது முகத்தில் ஒருவித இளிப்பு காணப்படுவதால் இவன் மகிழ்ச்சியாகவே இருக்கிறான் எனத் தெரிகிறது.
நின்ற உருவத்திற்கு மேல் சிவலிங்கத்தின் உருண்டையான ருத்ரபாகம். பின்புறம் பட்டையான வடிவமைப்பு காணப்படுகிறது. சிவலிங்கத்திற்கு பொதுவாக அடிப்பகுதியில் ஆவுடையார் காண்பிக்கப் பெறும். இக்கோவிலில், சிவலிங்க வடிவத்தின் சதுரவடிவமான கீழ்பகுதி (பிரம்மபாகம்) வட்டக்கற்களால் ஆன பீடத்தில் சொருகி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு `அர்க்கபீடம்’ என்பது பெயர். கருவறையின் மேல் உள்ள விமானத்தின் பின்பகுதி அரைவட்டமாக உள்ளது. இதுவும் லிங்க வடிவமாக காட்சி அளிப்பதால், `லிங்க கீர்த்தி விமானம்’ என அழைக்கின்றனர்.
கருவறையில் வழிபடப்பெறும் சிவலிங்க வடிவம் மிகவும் தொன்மையான வடிவமாக அறிஞர்களால் கருதப்படுகிறது. இக்கோவிலைச் சீரமைக்கும்போது கோவிலில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கோவில் பிற்கால பல்லவர் காலம் முதல் கி.பி., 14ம் நூற்றாண்டு வரை தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் அடைந்து வழிபாடுகள் நடைபெற்று வந்துள்ளதை அறிய முடிந்தது. ஆய்வின்போது சிவப்பு வண்ண பூச்சு பூசப்பட்ட பானை ஓடுகள், கறுப்பு – சிவப்பு பானை ஓடுகள் கிடைத்தன. மேலும் லிங்கத்தைச் சுற்றி வேலைப்பாடு மிக்க கருங்கற்களால்ஆன வேலி போன்று அமைக்கப்பட்டுள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதை `சிலா வேதிகலிங்கம்’ எனக் குறிப்பிடுகின்றனர்.
இங்கு நடைபெற்ற ஆய்வின் போது கிடைத்த தொல் பொருட்கள், மண் அடுக்குகள் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது குடிமல்லம் கோவிலில் காணப்படும் சிவனது வடிவம் கி.மு., 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனவும், மிகவும் தொன்மையான வடிவம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சைவ சமயத்தில் பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், பைரவம் என்ற பிரிவுகள் உண்டு.`பாசுபதம்’ தொன்மையான வழிபாடாகும். குடிமல்லம் கோவிலில் காணப்படும் வடிவத்தின் வழிபாடு பாசுபத சித்தாந்த வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது எனக் கருதப்படுகிறது.

குடிமல்லம் லிங்கத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள்ள சிவன் உருவத்திற்கும் – சாஞ்சி ஸ்தூபத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள்ள யஷன் உருவத்திற்கும் மிக நெருக்கமான உருவ ஒற்றுமை உள்ளதை அறிஞர் பெருமக்களும் ஏற்கின்றனர். முகம், காதுகள், தோள்கள் ஆகியனவற்றில் மட்டுமின்றி – காதணிகள், கையணிகள், கழுத்து மாலை ஆகிய அணிகலன்களின் வேலைப்பாடு, உடை உடித்தியிருக்கும் பாங்கு குறிப்பாகக் குஞ்சம் போன்ற மடிப்புகள் கால்களுக்கு இடையில் கட்டப்பட்டுருக்கும் விதம் ஆகிய இத்தனை அம்சங்களிலும் இவ்விரு உருவங்களும் ஒரே மாதிரியில் அமைந்துள்ளன. கி.மு., 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த உஜ்ஜெயினியில் கிடைத்த தாமிர காசுகளில் குடிமல்ல லிங்க உருவம் உள்ளது.

இக்கோயில் பற்றிய ஒரு அதிசய நிகழ்வு உள்ளூர் மக்கள் கூறுவது: 60 ண்டுகட்கு ஒருமுறை பரசுராமேஷ்வரர் உள்ள கருவறையுள் வெள்ள நீர் நிறைந்து அடுத்த நாள் வடிவது. டிசம்பர்-4, 2005 அன்று நீர் வந்து சில நிமிடங்களில் வடிந்ததாம். 1995ல் இது போல் நிகழ்வு இருந்ததாக உள்ளூரின் பெரியவர்கள் மூலம் அறியலாம். நிலத்தடி நீர் 300அடிக்கு கீழ் இருக்க இது அதிசயம் என் அகழ்வுத்துறையும் ஏற்கிறது.

லிங்கத்தில் உள்ள சிவன் வடிவில் கோடரி எனும் பரசு உள்ளமையால் இவர் பரசுராமேஷ்வரர் எனப்படுகிறார். வேதங்களின் உருத்திரன் எனும்படி வேடனுருவில் சிவனுள்ளதால் வைதிகலிஙம் என்கின்றனர். இன்னுமொரு சாரார் கூறும் கதை- தன் தந்தை ஜமதக்னி முனிவர் ஆணைப்படி தன் தாயைக் கொன்ற பரசுராமர், அப்பாவம் நீங்க இங்கே வந்து தவம் செய்திட, அருகிலுள்ள சுனையில் தினம் ஒரு பூ மட்டும் மலரும், அதற்கு காவலாக சித்திரசேனன் எனும் யக்ஷ்னை நியமித்தார். பிரம்மாவின் பக்தானான சித்திரசேனன் ஒரு நாள் வலில் தானே வேட்டைக்கு பரசுராமர் சென்று இருந்தபோது தானெ மலரைக் கொய்து பூஜை செய்திட, விபரமறிந்த பரசுராமர் போர் தொடுக்க, 14 ஆண்டுகள் போர் நட்ந்தும் யாருக்கும் வெற்றி இல்லை, சிவபெருமான் இருவரையும் தன்னும் ஏற்றுக் கொண்டார். மூல லிங்கம் -சிவன்; பரசுராமர்- விஷ்ணு அவதாரம், யஷன் பிரம்மாவினம்சம்- எனவே மும்மூர்த்திகளும் உள்ள லிங்கமும் கும்.

லிங்கம் தரையை விட பள்ளத்தில் உள்ளது. தெலுங்கு மொழியில் குடி எனில் கோவில்; பள்ளத்தில் குடி கொண்டுள்ளதால் குடிபள்ளம். கல்வெட்டுகளில் இக்கோவில் விப்பிரமேடு என அழைக்கப்பட்டுள்ளது. சாதவாகனர்களின் காலத்தின் பல பொருட்கள் (வ.கா.1-2 நூற்றாண்டு) புதைபொருள் ஆய்வில் கிடைத்துள்ளது. மதுரா அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் ஒரு சிற்பத்தில் முதல் நுற்றாண்டினதில் குடிமல்லம் லிங்கம் போல் செதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து வசதிகள் இல்லாத காலகட்டத்தில் தென் நாட்டின் உருவம் வடநாடு செல்ல ஓரிரு நூற்றாண்டுகள் நிச்சயம் ஆகும் என்கையில் குடிமல்லம் சிவலிங்கம் வ.கா.மு.500 வாக்கிலானது என பல வரலாற்றாசிரியர்கள் ஏற்கின்றனர்.

பழமையான சிவ லிங்க வடிவங்கள் - குடிமல்லம்

http://poetryinstone.in/lang/ta/2013/03/06/iconography-of-an-early-siva-lingam-gudimallam.html
டிசம்பர் மாதம் 2009 ஆம் ஆண்டு நானும் அரவிந்தும் ஒரு சுவாரசியமான பயணம் மேற்கொண்டோம். கார் போன போக்கில் சென்ற எங்களுக்கு பல சிதிலமடைந்த கோயில்கள் சோர்வூட்டின. அப்படி பல பக்தி ஷேத்ராடனங்களின் வரைபடத்தில் கூட இல்லாத கோவில்களில் ஒன்று புதுக்கோட்டை மூவர் கோயில் அருகில் இருக்கும் முசுகுந்தன் கோயில். செழுமையான பச்சை வயல்களுக்கு நடுவில் அமைந்த ஒரு அமைதியான கிராம சூழலில், அரை அடி ஆழ சேற்றில் முட்டி வரை இறங்கி கடினப்பட்டு சிற்பங்கள் எதுவுமே இல்லாத ஒரு தூண் மண்டபத்தை அடைந்தோம். இதற்கா இவ்வளவு சிரமப்பட்டோம் என்று நினைத்துக்கொண்டே உள்ளே சென்றோம். அந்த தூண்களின் வகைபடுத்தல், யாரோ சிக்கலான ஒரு புதிரை சேர்க்க முயற்சி செய்தது போல வெவ்வேறு கால, இடம் , பாணி என்று பல வித்தியாசமான தூண்களை ஒன்று சேர்த்து அமைத்திருப்பது புரிந்தது.
உள்ளே கருவறையானது இருட்டாகவும் ஈரமாகவும், எலிகள் நிறைந்தும் இருந்தது. அத்துடன் புகைப்பட கருவியின் ப்ளாஷ் தேவையான ஒளியை தர இயலவில்லை. இது போன்ற வசதியற்ற சூழலிலும், வெற்று வயிறிலும் என்னடா இப்படி புகைப்படம் எடுக்க கூட முடியவில்லையே என்று இப்படி அப்படி காமெராவை காட்டி கிளிக் செய்தபோது - அர்த்தமண்டபத்தின் ஒரு பகுதியை ஒளியேற்றியது. பார்ப்பதற்கு கனமான தூண் போன்ற ஒன்று ஒரு மணல் மூட்டையின் மீது இருப்பதாக புகைப்பட கருவியில் தெரிந்தது. மீண்டும் அருகில் சென்று இருட்டில் காமெராவை காட்டி படம் எடுத்தால் அங்கே..
muchukunda_linga
அங்கு வீற்றிருப்பது. பிரம்மாண்டமான ஒரு சிவலிங்கம்.
linga_muchukunda
size
மேன்மை ஸ்தபதி ஸ்ரீ உமாபதி ஆச்சார்யாவை அப்போது தான் சந்தித்து எனது அறியாமையால் ஒரு கேள்வி கேட்டு இருந்தேன் “அவரை பொறுத்த வரை சிற்ப வேலையில் எந்த உருவம் மிகவும் கடினமானது என்று”. உடனடியாக சற்றும் எதிர்பாராத பதில் வந்தது = “சிவலிங்கம்”. அவர் அப்போது தான் சிவலிங்க படிமவியலில் (Iconography) இரண்டு நாட்கள் அமர்வு நடத்தியதாக தெரிவித்தார். அவர் எங்களை கிண்டல் செய்கிறாரோ என்று சந்தேகம் வந்தது. சாதாரணமான ஒரு சிவலிங்கம் செய்வதில் என்ன சிரமம் இருக்க போகிறது! இந்த “சாதரணமான” உருவத்தின் மீது ஒரு பதிவை எழுதுவதற்கான துணிவை திரட்டி முடிவெடுக்க எனக்கு நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளது.
முதலில் ஹிந்து படிமவியலில் சர்ச்சைக்குரிய பாடம் இது என்பதால் நான் சிறிது துணிந்தும் கவனமாகவும் எழுத வேண்டியதாக இருக்கிறது. இந்தியா மட்டும் அல்லாது தென்மேற்கு ஆசிய நாடுகளில் - அதாவது மத்திய வியெட்னாம், கம்போடியா போன்ற நாடுகளிலும் பிரசித்தி பெற்று விளங்கும் இந்த உருவத்தில் அப்படி என்ன சிறப்பு? அதுவும் 6ஆம் 7ஆம் நூற்றாண்டுகளிலேயே இவை அங்கு பரவ காரணம் என்ன ! என்ன நம்ப முடியவில்லையா?
நான்கு அடி உயரத்தில் கம்பீரமாக நின்று அருங்காட்சியகத்தை அலங்கரிக்கும் அந்த கற்தூண்? அருகில் சென்று நோக்கினால் தெரிகிறது - இது தூண் இல்லை சிவலிங்கம் என்றும், இந்த இடம் இந்திய அருங்காட்சியகம் இல்லை - ஹோ சீ மின்ஹ் , வியெட்னாம் அருங்காட்சியகத்தில் உள்ள 6ஆம் நூற்றாண்டு “பு நான்” காலத்தியது.
linga_vietnam
இது சிவலிங்கம் போன்று வியெட்னாமில் இருக்கும் ஒரு உருவம் அல்ல. ஆகம சாஸ்திரத்தின்படியும் படிமவியல் சட்டப்படியும், துல்லியமாக செதுக்கப்பட்ட சிவலிங்கமே. இங்கு நாம் பார்க்கும் லிங்கம் நம் ஊரில் கோவில்களில் உள்ள லிங்கம் போலவே ஆவுடை எனும் பீடத்துடன் தான் இருக்கிறது. மேலும், லிங்கத்தில் மூன்று பாகங்கள் இருக்கிறது. சதுரமாக இருக்கும் அடிப்பாகம் ப்ரஹ்ம பாகதயும், நடுவில் இருக்கும் எண்கோணமான பகுதி விஷ்ணு பாகத்தையும், உருளையாக இருக்கும் மேல் பகுதி ருத்ர பாகத்தையும் குறிக்கிறது. கீழே வட்டமாகவும் மேலே முட்டை வடிவத்திலும், நடுவில் துளையுடனும் இருக்கும் ஆவுடையுடன் சேர்க்கும் பொது ப்ரஹ்ம பாகம் ஆவுடையின் கீழேயும், விஷ்ணு பாகம் ஆவுடையின் உள்ளேயும், ருத்ர பாகம் ஆவுடையின் மேலே பார்க்க கூடிய வகையிலும் இருக்கும். இதன் அளவு, விகிதம் மற்றும் ப்ரஹ்ம சூத்திரத்தின் வரிகள் எழுதபட்டிருக்கும் நுணுக்கங்களைஆய்வு செய்ய சுவாரசியமாக இருக்கும் போதிலும், இந்த லிங்கத்தின் ப்ரஹ்ம பாகத்தின் மேலே ஒரு முகம் செதுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற லிங்கங்கள் முகலிங்கம் என்பார்கள். பொதுவாக வட இந்தியாவில் இதை போல வடிவங்களை நாம் பார்க்க இயலும் ( ஆனால் அங்கே முகம் இன்னும் பெரிதாக இருக்கும் ), வட ஆந்திராவில் பஞ்ச ஆராம லிங்கங்கள் இப்படிப்பட்டவைதான் (சாமல்கோட், திராட்சாராமம், பீமாவரம், அமராவதி போன்ற தலங்கள்)
இந்து படிமவியல் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு முதன்மை நூலாய் இருக்கும் திரு கோபிநாத் ராவ் அவர்களின் Elements of Hindu Iconography நூலிலிருந்து இந்த அறிய உருவத்தையும், அணிகலன்களை பற்றியும் வடிவமைப்பை பற்றியும் ஆராய சில படங்களை உபயோக படுத்துகிறேன்.
ornamentation_gopinath_rao
.

guimallam_linga
reverse
அந்த தண்டு ஏன் ஏழு பட்டைகளை கொண்டுள்ளது என்பதும் நாம் ஆய்வு மேற்கொள்ள வேண்டிய ஒன்றே.

6 comments:

  1. மிகவுல் தெளிவாக பல விபரங்களோடு தரப்பட்டுள்ளது.

    //குடிமல்லம் லிங்கத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள்ள சிவன் உருவத்திற்கும் – சாஞ்சி ஸ்தூபத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள்ள யஷன் உருவத்திற்கும் மிக நெருக்கமான உருவ ஒற்றுமை உள்ளதை அறிஞர் பெருமக்களும் ஏற்கின்றனர். //
    //கி.மு., 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த உஜ்ஜெயினியில் கிடைத்த தாமிர காசுகளில் குடிமல்ல லிங்க உருவம் உள்ளது.//

    மிக நிச்சயமாய் இவை குடிமல்லம் சிவலிங்கத்தை பொ.மு. 500 முன்னர் என்பதை நிருபிக்கும்

    ReplyDelete
  2. மிக நல்ல கட்டுரை. பார்த்தது போன்றே இருந்தது.
    நன்றி.

    ReplyDelete
  3. http://realnest-slokas.blogspot.in/2012/01/blog-post_4583.html

    ReplyDelete
  4. https://agharam.wordpress.com/2018/09/08/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0/

    ReplyDelete