Monday, November 30, 2015

சகிப்புத்தன்மையின்மை! -ஜெயமோகன்

சகிப்புத்தன்மையின்மை!

1
http://www.jeyamohan.in/81384#.VlzuP9IrLIW
என் வாழ்க்கையில் அதிகாரம் என்றால் என்ன என்று நான் கண்கூடாக அறிந்தது 1994 ல் சம்ஸ்கிருதி சம்மான் விருதுக்காக டெல்லி சென்று அங்கே இந்தியா இண்டர்நேஷனல் செண்டரில் இரண்டுநாள் தங்கியிருந்தபோதுதான். அதற்கு முன்னரே இரு அமைச்சகங்களில் எனக்கு அறிமுகமுண்டு, செய்தித்தொடர்பு துறை மற்றும் கலாச்சாரத்துறை. ஆனால் அதிகாரம் தங்கத்தாம்பாளத்தில் பரிமாறப்பட்டிருப்பதை அங்கேதான் பார்த்தேன்.
பெரிய வளாகத்தினுள் அமைதியான சொகுசான பங்களா. புல்வெளிகள். உயர்தர உணவுகள். குடிவகைகள். ஓசையின்றி வெண்புகைபோல நடமாடும் பரிசாரகர்கள்.மேலுதடு அசையாமல் பேசப்படும் வெண்ணை ஆங்கிலம். நாசூக்காக கூந்தல் திருத்தும் உதட்டுச்சாயப் பெண்களின் நிரந்தரமாக வளைந்த புருவங்கள். ஓசையே இல்லாமல் ஆனால் சைகைகளும் முகபாவனைகளும் உரக்க ஒலிக்க கைவிரித்து கட்டித்தழுவி அளிக்கப்படும் வரவேற்புகள்.
அதன்பின் நான் பல நட்சத்திர விடுதிகளில் தங்கியிருக்கிறேன். ஆனால் இந்தியா இண்டர்நேஷனல் செண்டரின் அந்த ஆடம்பரத்தையும் சொகுசையும் எங்கும் கண்டதில்லை. இந்தியாவில் கலைகளையும், சுதந்திர சிந்தனையையும் வளர்க்கும்பொருட்டு இந்திய அரசின் நிதியுதவியால் உருவான சுதந்திர அமைப்பு அது. அப்போது டாக்டர் கரன்சிங் அதன் தலைவராக இருந்தார் என நினைவு. அவரை அங்கே மாலையில் பார்த்தேன்.
நான் ஆங்கில இதழ்களில் அதுவரை வாசித்தறிந்த அத்தனை முக்கியமான அறிவுஜீவிகளையும் அங்கே பார்த்தேன். யூ.ஆர். அனந்தமூர்த்தி கிட்டத்தட்ட நான்காண்டுகாலமாக அங்கே நிரந்தரமாக தங்கியிருந்தார். கிரீஷ் கர்நாட் சிலநாட்களாக தங்கியிருந்தார். பிரதிஷ் நந்தி போன்ற இதழாளர்கள் மகரந்த் பரஞ்ச்பே போன்ற சிந்தனையாளர்கள். ஷோபா டே போன்ற எழுத்தாளர்கள். எங்குபார்த்தாலும் பெரிய தலைகள்.
அன்று நான் மலைத்துப்போனது உண்மை.கிரிஷ் கர்நாடை கண்டு அருண்மொழி ஓடிப்போய் அறிமுகம் செய்துகொண்டு குதூகலித்தாள். நயன்தாரா ஷெகல் தினமும் அங்கே மதுவருந்த வருவதுண்டு, அன்றும் பார்த்தேன். அன்று என்னுடன் சம்ஸ்கிருதி சம்மான் வாங்கிய இருவர், ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் அனாமிகா ஹக்ஸர் அங்கே வழக்கமாக வருபவர்கள் என்பதை கண்டேன்
முரட்டு கல்கத்தா ஜிப்பாவும் கோலாப்பூர் சப்பலும் அணிந்தவர்கள். குட்டிக்கண்ணாடி போட்டவர்கள். காதி புடவை கட்டி தூவெண்நரை படரவிட்ட பெண்கள். ஒருவர் கபிலா வாத்ஸ்யாயன் என்றார்கள். பபுல் ஜெயகர் வருவார் என்றார்கள். எங்கே பார்த்தாலும் இலக்கியப்பேச்சுக்கள். கலைவிவாதங்கள்.
Ve.sa-front-page
அந்த ஆடம்பரம் என்னை அச்சுறுத்தியது, உயர் அறிவுஜீவித்தனம் அன்னியமாக்கியது. மறுநாள் என்னைக் கண்ட வெங்கட் சாமிநாதன் அதை உடனே ஊகித்துக்கொண்டார். ‘யோவ் இதிலே முக்காவாசிப்பேர் சரியான காக்காக்கூட்டம். டெல்லியோட அதிகாரமையங்களை அண்டிப்பொழைக்கிற ஸ்நாப்ஸ். பலபேர் வெறும் பவர் புரோக்கர்கள். நீ மதிக்கிறமாதிரி உண்மையான ஆர்ட்டிஸ்ட் ஒண்ணுரெண்டு இருக்கலாம். அவனும் இங்க இருந்திட்டிருக்கமாட்டான். ஒடீருவான்”
“இவங்கதான் அத்தனை கல்ச்சுரல் விஷயங்களையும் தீர்மானிக்கிறாங்க. உலகத்தில உள்ள அத்தனை விஷயங்களப்பத்தியும் ஒருமணிநேரம் அழகான ஆங்கிலத்திலே சரியான ஜார்கன் எல்லாம் போட்டு பேசமுடியும். ஆனா அறுபத்தி ஒண்ணாம்நிமிஷம் முதல் சாயம்போக ஆரம்பிச்சிரும். ஒரெளவும் தெரியாது. பெரும்பாலும் பழைய பெருங்காய டப்பா” வெங்கட் சாமிநாதன் சொன்னார்
“அத்தனைபேரும் ஆளுக்கு நாலஞ்சு டிரஸ்ட் வச்சிருப்பாங்க. செர்வீஸ் ஆர்கனைசேஷன் , கல்ச்சுரல் ஆர்கனைசேஷன்னு இருக்கும். கான்ஃபரன்ஸிலே இருந்து கான்ஃபரன்ஸுக்கு பறந்திட்டிருப்பாங்க.கவர்மெண்ட் பங்களாவில ஒரே ஒருமுறை ஒரு நிகழ்ச்சிக்காக தங்க எடம்குடுத்தாப்போரும், கெளப்பவே முடியாது. டெல்லியிலே மட்டும் எப்டியும் அஞ்சாயிரம் பங்களாக்களை ஆக்ரமிச்சு வச்சிட்டிருக்குது இந்தக்கூட்டம்” சாமிநாதன் சொன்னார் “இதே மாதிரி இன்னொரு அதிகாரமையம் இருக்கு ஜே.என்.யூ. அங்கியும் இதே கதைதான்”
“கவர்மெண்ட் இவங்களை கெளப்பிவிடமுடியாதா?” என்றேன். “பொதுவா கவர்ன்மெண்ட் அப்டி நினைக்கிறதில்லை. ஏன்னா இந்தக்கூட்டம் நேரு காலம் முதலே வந்து ஒட்டிக்கிட்டது. ஒருத்தரை ஒருத்தர் சப்போர்ட் பண்ணுவாங்க. அப்பப்ப சில ஐ.ஏ.எஸ் காரங்க முயற்சி பண்ணினாலும் அங்க போய் இங்கபோய் காலை கைப்பிடிச்சு கெஞ்சி கூத்தாடி தப்பிச்சிருவாங்க”
“அதோட இன்னொண்ணும் இருக்கு” என வெங்கட் சாமிநாதன் சொன்னார். “இவங்க வெறும் ஒட்டுண்ணிகள் மட்டும் இல்ல. இவங்களுக்கே பெரிய பவர் ஒண்ணு உண்டு. பெரும்பாலானவங்க முற்போக்கு இடதுசாரி ஆளுங்க. பாத்தேல்ல?’ நான் வியந்து “ஆமா” என்றேன்.
“உலகம் முழுக்க செமினார்கள் வழியா அறியப்பட்டவங்க. இந்தியாவிலே எது நடந்தாலும் உலகப்பத்திரிகைக்காரங்க இவங்ககிட்டதான் கேப்பாங்க. காங்கிரஸ் கவர்மெண்டுக்கு ஒரு லெஃப்டிஸ்ட் முகமூடிய உண்டுபண்ணி குடுக்கிறதே இவங்கதான். அப்டிப்பாத்தா இவங்களுக்கு செலவழிக்கிற தொகை ரொம்ப கம்மி” என்றார் வெ.சா “இவங்க இந்தியாமேலே உக்காந்திட்டிருக்கிற வேதாளங்க. யாராலயும் எதுவும் செய்யமுடியாது. இந்தியாவில எது சிந்தனை எது கலைன்னு தீர்மானிக்கிறவங்க”
நான் பலமுறை இந்தியா இண்டர்நேஷனல் செண்டருக்கும் அதைப்போல டெல்லியில் உள்ள நாலைந்து கலாச்சார மையங்களுக்கும் சென்றிருக்கிறேன். மலையாள இதழாளர்களுடன். அவர்களுக்கு வதந்தி பொறுக்கிச் செய்தியாக்க உகந்த இடங்கள் இவை. அந்திக்குப்பின் மது தலைக்கு ஏறும்போது ரகசியங்களே இல்லை
ஆனால் இவர்கள் எழுதித்தள்ளும் ஆங்கிலநாளிதழின் நடுப்பக்கக் கட்டுரைகளை அரிய ஞானச்செல்வங்களாக கருதி அவற்றின் அடிப்படையில் அரசியல் பண்பாட்டு விவாதங்கள் செய்பவர்கள் மேல் எப்போதுமே ஒரு பரிதாபம் எனக்குண்டு. உண்மையான அரசியலை ஒருபோதும் அவர்கள் அறிவதில்லை. எளிய பற்றுநிலைகளின் அடிப்படையில் முடிவுகள் எடுத்து கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறார்கள், அவ்வளவுதான்.
முன்பு இதைப்பற்றி எழுதியபோது ஃபர்கா தத் ஒரு பவர் புரோக்கர் அன்றி வேறல்ல என எழுதினேன். என் நண்பர்களே எப்படி அப்படி ஒரு முற்போக்குப் போராளியைப்பற்றி எழுதலாம் என என்னிடம் சண்டையிட்டனர்.நல்லவேளை சிலநாட்களிலேயே அந்தம்மாள் டாட்டாவிடம் பேசிய தரகுவேலையின் விவகாரங்கள் நீரா ராடியா டேப் வழியாக வெளிவந்தன.
[என்னாயிற்று அந்த வழக்கு என எவருக்கேனும் தெரியுமா? ஃபர்கா தத்தை அவரது முற்போக்கு பீடத்திலிருந்து ஒருமாதம்கூட கீழிறக்க அந்த அப்பட்டமான வெளிப்படுத்தல்களால் இயலவில்லை. டெல்லியின் வல்லமை அப்படிப்பட்டது]
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக அந்த அதிகார வளையம் மீது கை வைக்கப்பட்டிருக்கிறது. கீழ்மட்டத்தில் இதற்கான எச்சரிக்கைகள் ஆறுமாதமாக அனுப்பப் பட்டிருக்கின்றன. சென்றவாரம் அமைச்சகம் நோட்டீஸ் அனுப்ப முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் சகிப்புத்தன்மை சடாரெனக் குறைந்து அறிவுஜீவிகள் கொந்தளித்தெழுந்ததன் உள்விவகாரம் இதுதான் போலும்.
JatinDas
உதாரணமாக நடிகை நந்திதா தாஸின் தந்தை ஓவியர் ஜதீன் தாஸ் டெல்லியின் மிகமிக முக்கியமான பகுதியில் அரசு பங்களாவை பல ஆண்டுக்காலமாக இலவசமாக பயன்படுத்திவருகிறார். அவரை வெளியேற்ற நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது அரசு. நந்திதா தஸ் சகிப்புத்தன்மை குறைந்துவருவதாக கொந்தளித்து நாளிதழ்களில் எழுதுவதும் தொலைக்காட்சிகளில் பேசுவதும் வேறெதற்காக? சகிப்புத்தன்மைக்கான தற்கொலைப்படைப்போராட்டம் மேலும் வலுப்பெறவே வாய்ப்பு
மோடி தவறான இடத்தில் கையை வைத்துவிட்டார் என்றே நான் நினைக்கிறேன். உலக மீடியாவில் இந்தியாவை சீரழிக்க இவர்களால் முடியும். இங்கு ரத்த ஆறு ஓடுவதாக ஒரு சித்திரத்தை மிக எளிதாக உருவாக்குவார்கள். தொழில்துறைத்தயக்கங்களை உருவாக்கவும் சுற்றுலாத்துறையை அழிக்கவும் இவர்களால் முடியும். இவர்களுக்கு இந்தியாவில் இன்று மாற்றே இல்லை என்பதே உண்மை. இவர்களை சகித்துக்கொள்வதே இன்று இந்தியாவுக்கு இன்றியமையாதது. மோதியின் சகிப்பின்மை ஆபத்து.

கி.மு. 3-ம் நூற்றாண்டு - சங்ககால மன்னர் அதியமான் பெயர் பொறித்த நாணயம்

 சங்ககால மன்னர் அதியமான் பெயர் பொறித்த நாணயம்; நாணயவியல் கழக தலைவர் ‘தினமலர்’ இரா.கிருஷ்ணமூர்த்தி கண்டுபிடிப்பு
http://www.dailythanthi.com/News/State/2015/11/29042806/Ancient-coins-with-Adhiyaman-names-discovered.vpfசென்னை, 

சங்ககால மன்னர் அதியமான் பெயர் பொறித்த கி.மு. 3-ம் நூற்றாண்டு நாணயத்தை, நாணயவியல் கழக தலைவர் தினமலர் இரா.கிருஷ்ணமூர்த்தி கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து இரா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சங்க இலக்கியம்

அதியமான் நெடுமான் அஞ்சி, சங்ககால குறுநில மன்னன். அதியமானின் ஊர் தகடூர். இப்போது அவ்வூரின் பெயர் தர்மபுரி. அதியமான் குறித்து புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றினை போன்ற சங்க இலக்கியங்களில் பல புலவர்கள் பாடியுள்ளனர்.

அதியமான் மழவர் இனத்தை சேர்ந்தவன். குதிரைகளைக் கொண்ட மழவர், குறும்படை மழவர், கடுங்கண் மழவர், செங்கண் மழவர், கல்லா மழவர், போர்த்திறன் கொண்ட மழவர் என்று சங்க இலக்கிய பாடல்கள் மூலம் அறிகிறோம். அதியமானின் முன்னோர், முற்றிலும் நீரால் சூழப்பட்ட பகுதிகளிலிருந்து வந்ததாகக் கருதப்படுகின்றனர்.

அலெக்சாண்டர் படையெடுப்பு

தற்போது பாகிஸ்தானில் ஓடும் ஜீலம், சீனாப், ரவி ஆகிய நதிகளின் இடைப்பட்ட மிக வளமான பகுதியை ‘மாலவாஸ்’ என்ற பழங்குடியினர், தொண்மை காலத்தில் ஆட்சி செய்திருக்கின்றனர். அவர்கள் மிக போர் குணம் கொண்டவர்கள். 

கிரேக்க பேரரசன் அலெக்சாண்டர் படையெடுத்தபோது, இந்த பழங்குடியினர் போரில் தோல்வியுற்று, தங்கள் நாட்டைவிட்டு, ராஜஸ்தான் வழியாக மத்திய இந்தியாவிற்கும் பின் பிற பகுதிகளுக்கும் குடிபெயர்ந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கும், அதியமானின் முன்னோர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். ஆனால், அதை நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் எதுவும் தற்போது இல்லை.

வணிகரிடம் நாணயம்

சங்ககால சேர, சோழ, பாண்டியர் மலையமான் நாணயங்கள், கடந்த 30 ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. அதியமான் பெயர் பொறித்த நாணயத்தை கண்டுபிடித்து வெளியிட்டேன். அதே ஆண்டில் கோவையைச் சேர்ந்த ஒரு வணிகரிடம், சில நாணயங்களை வாங்கி ஆய்வு செய்தபோது, ஒரு சில செம்பு நாணயங்களில், காரீயத்தால் மேல் பூச்சு பூசப்பட்டு, நாணயங்கள் தெளிவில்லாமல் இருந்தன.

காரீயத்தை அகற்ற வேண்டுமானால் லேசாகத் தீயில் காட்டவேண்டும். அப்போது அந்த காரீயப் பூச்சு இளகிவிடும். அவ்வாறு இளகிய நிலையில் இருக்கும்போது, அந்த பூச்சை சுரண்டி அகற்றவேண்டும். தீயில் காட்டும்போது சில நேரங்களில் நாணயம் வெடித்து துண்டு துண்டாகிவிடும். இந்த இடர்பாடுகளுக்கு இடையில், பல நாட்கள் சுத்தம் செய்தபின், நான் சுத்தம் செய்த நாணயம் செம்பினால் செய்யப்பட்டது என்பதை அறிந்தேன்.

நாணயத்தின் அமைப்பு 

நாணயத்தின் முன்புறம் யானை வலப்பக்கம் நோக்கி நிற்கிறது. அதன் முன் ஒரு கொடிக்கம்பம் உள்ளது. நாணயத்தின் மேல் விளிம்பின் இடப்பக்கத்தில் ஒரு ‘சுவஸ்திக்’ சின்னமும், இடப்பக்கத்தில் ஒரு ‘சுவஸ்திக்’ சின்னமும், அதன் அருகில் ‘டவுரின்’ சின்னமும் உள்ளது. யானையின் மேல் பகுதியில் அதியமான் என்ற பெயரில், நான்கு எழுத்துகள், பிராமி எழுத்து முறையிலும், ஓர் எழுத்து தமிழ்- பிராமி முறையிலும் உள்ளன.

பின்புறம் நாணயத்தின் அடிப்பகுதியில், ஆறு ஒன்று அச்சாகியுள்ளது. தேய்ந்த நிலையில் இருப்பதால், முழுமையாகத் தெரியவில்லை. ஆற்றில் இரண்டு மீன்கள் இருக்கின்றன. 

நாணயத்தின் மத்தியில் குதிரை ஒன்று வலப்பக்கம் நோக்கி நின்று கொண்டிருக்கிறது. குதிரையின் முன்பகுதியில், போர் வீரன் ஒருவன் நின்று கொண்டிருக்கிறான். போர் வீரனின் ஒரு கையில் கேடயமும், மறு கையில் வாள் போன்ற ஆயுதத்தையும் வைத்திருக்கிறான். போர் வீரன் தன் தலையில் அணிந்திருக்கும் தொப்பி போன்ற கவசத்தில், கிரேக்கப் போர் வீரர்கள் அணியும் அலங்கார முடி அமைப்பு உள்ளது. இந்த நாணயத்தின் காலம் கி.மு. 3-ம் நூற்றாண்டாகக் கருதலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

முந்து தமிழ் வட்டெழுத்துடன் மூத்த பிள்ளையார் சிற்பம் கண்டுபிடிப்பு

முந்து தமிழ் வட்டெழுத்துடன் மூத்த பிள்ளையார் சிற்பம் கண்டுபிடிப்பு

First Published : 04 October 2015 01:03 AM IST http://www.dinamani.com/tamilnadu/2015/10/04/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9/article3061448.ece
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஆலகிராமத்தில் எமதண்டீஸ்வரர் கோயிலில் அரிய வட்டெழுத்து பொறிப்புகளுடன் கூடிய பிள்ளையார் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே காலத்தால் முற்பட்ட கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விநாயகர் சிற்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலகிராமத்து முந்துத் தமிழ் வட்டெழுத்து கற்சிற்பம்: தமிழக வரலாற்றில் கிடைக்கப் பெற்ற பிள்ளையார் சிற்பப் பட்டியலில் மேலும் ஒரு முத்தாய்ப்பாக திண்டிவனம் வட்டம் ஆலகிராமத்தில் எமதண்டீஸ்வரர் கோயிலில் அரிய வட்டெழுத்து பொறிப்புகளுடன் கூடிய பிள்ளையார், லகுலீசுவரர், முருகன் சிற்பங்களை கல்வெட்டு ஆய்வாளர்கள் சி. வீரராகவன், மங்கையர்க்கரசி, வீ.ஆர்.சசிதரன் ஆகியோர் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர்.
லகுலீசுவரர், முருகன் சிற்பங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
மூத்த பிள்ளையார் சிற்பம்: இந்த ஊர் சிவன் ஆலயத்தில் திருப்பணி நடைபெற்று வருகிறது. கருவறையில் தெற்கு வெளிப்புற அதிட்டானத்தில் பிள்ளையார் புடைப்புச் சிற்பம் ஒன்று சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மூத்த பிள்ளையார் சிற்பம் 75 செ.மீ. உயரமும், 40 செ.மீ. அகலத்தில் உள்ள நீண்ட சதுர பரப்பில் புடைப்பாக வெட்டப்பட்டுள்ளது.
பரியங்க ஆசனத்தில் அமர்ந்துள்ள மூத்த பிள்ளையார், இரண்டு கரங்களைக் கொண்டுள்ளார். வலது கரத்தில் தடியை ஆயுதமாகவும், இடது கரத்தில் ஒடித்த தந்தத்தையும், இடையில் ஆடையும், காலில் தண்டையும், மார்பில் புரிநூலும், மேற்கைகளில் (தோளில்) கடகமும், முன்கையில் காப்பும் கட்டப்பட்டுள்ளன. தலையை அலங்கரிக்கும் மகுடம், பூக்கூடையை கவிழ்த்த நிலையில் காட்டப்பட்டுள்ளது.
"பிள்ளையார்பட்டி'க்கு முந்தையது...புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆலகிராம மூத்த பிள்ளையார் அமர்ந்திருக்கும் பீடத்தில் , மூன்று வரிகளில் கல்லெழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இந்த் எழுத்தின் அமைதி, பூலாங்குறிச்சி கல்லெழுத்தின் அமைதிக்கு பின்னும், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குடைவரை கோயிலில் உள்ள கல்லெழுத்து அமைதிக்கு முந்தையதும் ஆகும். அதாவது, கி.பி. 4-ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாகும்.
கி.பி. 5-ஆம் நூற்றாண்டு...விழுப்புரம் மாவட்டம், அரசலாபுரத்தில் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட "கோழி நினைவு' கல்லில் உள்ள கல்லெழுத்தும் செஞ்சி அருகே திருநாதர் குன்றில் உள்ள நிசீதிகை கல்லெழுத்தும், அவலூர்பேட்டை அருகே உள்ள பறையன்பட்டு பாறை மீது வெட்டப்பட்ட நிசீதிகை கல்லெழுத்தும், பெருமுக்கல் கீறல்வரைவுகள் அருகே உள்ள கல்லெழுத்துகள் யாவும் கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும்.
மேற்கூறப்பட்ட கல்வெட்டு பாடங்களுடன் ஆலகிராமத்து மூத்த பிள்ளையார் பீடத்தில் உள்ள எழுத்துகள் ஒப்புநோக்க இதன் காலம் கி.பி. 5-ஆம் நூற்றாண்டுக்கு உரியதாகும் என இந்தக் கல்வெட்டு பாடத்தைப் பார்வையிட்டும், வாசித்தும் "தினமணி' முன்னாள் ஆசிரியரும் கல்வெட்டு ஆய்வாளருமான ஐராவதம் மகாதேவன் கூறினார்.
ஆலகிராமத்து மூத்த பிள்ளையார் சிற்பத்தில் உள்ள கல்லெழுத்து பாடம் "பிரமிறை பன்னூரு சேவிக --------மகன் -------- கிழார் கோன் ----------கொடுவித்து' இந்தக் கல்வெட்டு வாசகம், இந்தப் பிள்ளையாரை செதுக்கிய சிற்பியைப் பற்றிய கருத்தினைக் கூறுகிறது. கி.பி. 5-ஆம் நூற்றாண்டு முந்து தமிழ் வட்டெழுத்துகளுடன் காணப்படும் ஆலகிராம மூத்த பிள்ளையார் இந்திய வரலாற்றுக்கு ஒரு புதிய வரவாகும். ஆய்வில் கண்டறியப்பட்ட முந்து தமிழ் வட்டெழுத்து பொறிப்புகளுடன் கூடிய ஆலகிராமத்து மூத்த பிள்ளையார் சிற்பமே, தமிழகத்தில் உள்ள விநாயகர் சிற்பங்களில் முதன்மையானதாகும் என்று ஐராவதம் மகாதேவன் கூறினார்.