Sunday, March 2, 2025

கோவில் கல்வெட்டுச் செய்தியை -சான்றாகக் கொண்டு உயர்நீதிமன்றத் தீர்ப்பு

 " கல்வெட்டு வழி - தீர்ப்பு "

இது ஒரு வித்தியாசமான வழக்கு என்பதை விட சிறப்பான தீர்ப்பு என்று சொல்லலாம். ஒரு கோவில் கல்வெட்டுச் செய்தியை மூலச் சான்றாகக் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது இதுவே முதன்முறையாக இருக்கலாம்.
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
DATED: 25.02.2020
CORAM
THE HON'BLE MR.JUSTICE S.M.SUBRAMANIAM
A.S.No.573 of 2009 and M.P.No.1 of 2009 and C.M.P.No.11631 of 2019..
Balkis Natciar vs Arulmigu Adheeswarar Thirukoil
on 25 February, 2020..
வழக்கின் விபரம்.
புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கீழகாசாகுடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள சோழர்கால சிவன் கோவில். இறைவனின் பெயர் ஆதிஸ்வரர்.
கல்வெட்டுகளில் காயக்குடி திருவாதிஸ்வரமுடையார் என்றழைக்கப்படுகிறார்.
கோவிலுக்குச் சொந்தமான சுமார் 1643
குழி அளவுள்ள நிலம் தங்களுக்கே சொந்தம் என்று பல்கீஷ்நாச்சியார்
உள்ளிட்ட 13 பேர் உரிமை கோரினார்கள்.
2009 ஆம் ஆண்டு காரைக்கால் விசாரனை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள்.பிறகு 2019 ஆம் ஆண்டு இவ்வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டது.
பல்கீஷ் நாச்சியார் Vs ஆதிபுரிஸ்வரர்
A.S no 573 of 2009.
வழக்கு விசாரனை தொடங்கியது.
இந்தக் குறிப்பிட்ட நிலம் பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் எமது முன்னோர்களுக்கு வழங்கப்பட்டது. பட்டா செய்து கொடுத்துள்ள நிலமாகும். பட்டா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் உள்ளது. வருவாய்த்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. இதன் பாகப்பிரிவினையும் எங்களுக்குள் நடந்துள்ளது. ஆகவே இந்நிலங்கள் முழுக்க முழுக்க எங்களுக்குச் சொந்தமாகும். இந்நிலத்தை உரிமை கொண்டாடும் கோவிலுக்கு எந்த ஒரு ஆவணமும் இல்லை. ஆகவே நிலத்தை எங்களிடம் ஒப்படைக்கவேண்டும்.
இவ்வாறாக பல்கீஷ் நாச்சியார் தரப்பு தங்கள் வாதத்தை முன்வைத்தது.
அவர்கள் கூறியதைப்போலவே நிலத்தை உரிமை கொள்ள கோவில் நிர்வாகத்திடம் எந்த ஒரு ஆவணங்களும் இல்லை.
ஆனால்..
கோவிலில் ஒரு கல்வெட்டு உள்ளது. அந்தக் கல்வெட்டில் உள்ள செய்தியின் படி நிலம் இக்கோவிலுக்கு சொந்தமானது.
இதுவே கோவில் தரப்பு வாதம்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
S.M. சுப்ரமணியம் அமர்வில் வழக்கு விசாரனைக்கு வருகிறது.
இரு தரப்பு வாதங்களும் தொடர்ந்தன...
பட்டா உள்ளிட்ட அனைத்துப் பத்திரங்களின் வழி இந்த நிலம் தங்களுக்கே சொந்தம் என்று பல்கீஷ் நாச்சியார் தரப்பும்..
கோவிலில் உள்ள கல்வெட்டு செய்தியின்படி நிலம் கோவிலுக்கே சொந்தம் என்று கோவில் தரப்பும் ..
தங்கள் வாதங்களை எடுத்துவைத்தன.
கோவிலில் உள்ள கல்வெட்டுச் செய்தியை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிபதி உத்ரவிடுகிறார்.
காசக்குடி ஆதிஷ்வரர் கோவில் கல்வெட்டு.
தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி 7.
எண் 1024 & 1025.
A.r.e.no 392/1902 &
393 / 1902.
கல்வெட்டில் உள்ள நிலங்களின் அளவு மற்றும் நிலங்களின் எல்லைகள் ஆகியவை மிகத் தெளிவாகக் குறிக்கப்பட்டு
அந்நிலம் கோவிலுக்குத் தானமாக வழங்கப்பட்ட செய்தியை கல்வெட்டடு பதிவு செய்கிறது. தற்கால பத்திரம், பட்டா உள்ளிட்ட ஆவணங்களில் காணப்படும் விபரங்களை விட மிகத்துல்லியமாக
கல்வெட்டில் விபரங்கள் எழுதப்பட்டிருந்தது.
கல்வெட்டுச் செய்தி...
இரண்டாம் ராஜராஜ சோழனின்
11 ஆம் ஆட்சியாண்டு.
(கி.பி.1157). இந்நிலச்கள் நிலங்கள் கோவிலுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்டன.
சிவன் கோவில் தேவதான இறையிலி நிலங்களின் எல்லைகளாக ..
உதயச்சந்திர வாய்க்காலுக்குத் தெற்கு மேலைத்தெருவில் கீழ்ச்சிறகில் திருநந்தவனம் நிலம் ..
கடலாடு பெருவழி தெற்கு கீழத்தெருவுக்கு கிழக்கு 321 - 1/2 குழி.
மேலும் 179- 1/4 குழி நிலம் திருக்குறிப்புத்தொண்டர் விளாகத்திற்கும்..
1143 குழி நிலம் திருஞான சம்பந்தர்விளாகத்திற்கும் வழங்கப்பட்டது.
எந்தெந்த நிலப்பகுதி. எவ்வளவு அளவு. எல்லைகள் விபரம் முதலியன மிகத்துல்லியமாகக் குறிக்கப்பட்டு அந்நிலங்கள் கோவிலுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட செய்தியை கல்வெட்டு உறுதி செய்தது.
இக்கல்வெட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
25.02.2020 அன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
பல்கீஷ் நாச்சியார் தரப்பு வைத்திருக்கும் பட்டா ஆவணத்தை முழுமையான ஆவணச் சான்றாக ஏற்க இயலாது
கல்வெட்டுகளில் கூறப்பட்டத் தரவுகள் தெளிவாக அந்நிலம் கோவிலுக்குச் சொந்தமானது என்பதை உறுதி செய்வதால்..
கோவில் நிலங்கள் எந்த ஒரு சூழலிலும் தனியார் ஏகபோக பாத்தியதை அனுபவிக்க இயலாது என்பதாலும்
மேற்படி நிலங்கள் கோவில் வசம் ஒப்படைக்கப்படவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
Judgment copy என்னும் தீர்ப்பு அறிக்கையில் கோவில் கல்வெட்டு விபரங்கள் முழுவதையும் நீதிபதி எழுதுகிறார்.
தொல்லியல்துறை பதிவு செய்த கல்லெட்டு ஆவணத்தையும் தீர்ப்பு அறிக்கையில் பதிவு செய்கிறார்.
கல்வெட்டு சாசனத் தரவுகளின் அடிப்படையிலேதான் இத்தீர்ப்பு வழங்கப்படுகிறது.
நீதிமன்ற தீர்ப்பு ஒன்றில் கல்வெட்டு சாசன விபரங்கள் முழுமையாக பதிவு செய்யப்பட்டது இதுவே முதல்முறையாக இருக்கக்கூடும்.
கல்வெட்டின் மீது நீதிமன்ற உத்தரவு முத்திரை இடப்பட்டது ஒரு வரலாற்றுச் சிறப்பாகும்.
1157 ஆம் ஆண்டு கல்வெட்டு ஆவணத்தின்படி 2020 இவ் தனது நிலத்தை மீட்கிறார் காயக்குடி ஈஸ்வரர்.
------------------------------
அன்புடன்..
மா.மாரிராஜன்.
வழக்கு விபரங்கள் கொடுத்து உதவிய ஆனந்தன் வழக்கறிஞருக்கு நன்றி.

" மீட்கப்பட்டத் தமிழ் கல்வெட்டுகளின் வரலாறு "

ஏறக்குறைய..
1887 ஆம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் இருந்தக் கல்வெட்டுகள் படியெடுக்கும் பணிகளை ஆங்கிலேயர்கள் தொடங்கினார்கள்.. இவர்களால் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் மைப்படிகள் அனைத்தும் முதலில் ஊட்டியிலும், பிறகு சென்னையிலும் பாதுகாக்கப்பட்டு...
இறுதியில் மைசூர் தொல்லியல்துறை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டது..
சுமார் 60000 கல்வெட்டுப் படிகளில் ..
மிகக் குறைந்த அளவே வெளியிடப்பட்டது ..
மீதமுள்ள தமிழ் கல்வெட்டுகளை வெளியிடவேண்டும் என்பது பல வருட கோரிக்கை..
இந்த சூழலில் மைசூரில் உள்ள தமிழ்க் கல்வெட்டுப்படிகள் போதிய பராமரிப்பின்றி அழிந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டும் எழும்பியது..
மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் சென்னைக்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர முயற்சி மேற்கொள்ளப்பட்டது..
இதற்கான முதல் முயற்சியை தமிழ் மரபு அறக்கட்டளை மேற்கொண்டது..
தமிழ் மரபு அறக்கட்டளையின் நிர்வாகக்குழு கூட்டத்தில் வழக்குத் தொடர்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அறக்கட்டளையின் நிறுனர் சுபாஷிணி , செயலார், தேமொழி,
வழக்கறிஞர் கௌதமசன்னா, லழக்கறிஞர் காந்தி பாலசுப்ரமணியன்..
குழுவினர் கூட்டத்தில்
வழக்குத் தொடர முடிவு செய்யப்பட்டது..
உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு.N.r.இளங்கோ அவர்கள் எந்தக் கட்டணமும் பெறாமல் ஆஜராக முன்வந்தார்.
திரு.கௌதமசன்னா மற்றும்
திரு.P.மணிமாறன்
இருவரையும் மனுதாராகக் கொண்டு வழக்குத் தொடரப்பட்டது..
வழக்கு எண்...
W.p.(md) no 20678 / 2019.
இவ்வழக்கில் வாதிட்டவர்..
சீனியர் வழக்கறிஞர்
திரு.N.r. இளங்கோ...
இதே கோரிக்கையை கொண்டு மேலும் ஒரு வழக்கை தாக்கல் செய்தவர்..
திரு. இளஞ்செழியன்.
17399 / 2020
வாதிட்டவர்..
சீனியர் வழக்கறிஞர்
திரு.சித்தார்த்த விஷ்ணு..
தமிழகரசு சார்பில்
வழக்கறிஞர்
திரு.வீரகதிரவன் மற்றும் வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் ஆஜரானார்கள்.
தொல்லியல் துறை சார்பில்..
மூத்த வழக்கறிஞர்
திருமதி. விக்டோரியா கௌரி ஆஜரானார்.
மனுதாரர்கள் இருவர் சார்பாக நிறைவு வாதத்தை மூத்த வழக்கறிஞர்
திரு.N.r.இளங்கோ எடுத்துரைத்தார்..
ஏறக்குறைய 266 பக்க வரலாற்றுத் தரவுகளுடன் கூடிய ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வாதம் செய்தார் இளங்கோ..
மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை தமிழகம் கொண்டுவருவதன் அவசியத்தை மிகத் தெளிவாக சான்றுகளுடன் எடுத்துரைத்தார்..
வழக்கிற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் வழக்கறிஞர் திரு.காந்தி பாலசுப்ரமணியன் அவர்கள் சேகரித்துக் கொடுத்தார்..
வழக்கிற்குத் தேவையான ஆவணங்களை
மா.மாரிராஜன், திருச்சி பார்த்தி, ஆறகளுர் வெங்கடேசன், பத்திரிகையாளர் சஃபிமுன்னா, வழக்கறிஞர்கள் அருண் மற்றும் திலக்குமார் ஆகியோர் கொடுத்தனர்..
தீர்ப்பும் சாதகமாகவே வந்தது...
மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுப்படிகள் அனைத்தையும் சென்னைக்கு இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது..
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை நீதியரசர்கள்..
திரு.கிருபாகரன் மற்றும் திரு.துரைச்சாமி
அமர்வு வழங்கியது..
நீதிமன்றத் தீர்ப்பில்..
தமிழ் மொழியின் சிறப்பு.. பழமை.. தமிழ் வழிக் கல்வியின் அவசியம்.. பெற்றோர்களுக்கு அறிவுரை..
தொல்லியல் துறையின் குளறுபடி .. அனைத்தையும் மேற்கோள் காட்டி தீர்ப்பு வழங்கப்பட்டது..
தீர்ப்பின் முழு விபரம்..
எளிய தமிழில்....
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே ... என்று ஆரம்பித்தனர் நீதியரசர்கள்...
---------------------------------------
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றி மூத்தக்குடி..
தமிழ் மொழி இளமையானது மற்றும் மிகப்பழமையானது. பழங்காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை தமிழ் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
உலகத்தின் முதல் மொழி என்று கூற இயலாது என்றாலும் உலகத்தின் மிகப்பழமையான மொழிகளில் தமிழும் ஒன்று என நிச்சயமாகக் கூறலாம்..
தமிழ் மொழியானது
கி.மு. 409 - 508 வரை காலக்கணிப்பை உறுதி செய்து அறிவியல் பூர்வமாக கரிமபகுப்பாய்வு மூலம் கீழடி உறுதி செய்தது.
இந்தியாவின் மிகப்பழமையான மொழியாக மௌரிய பேரரசர் அசோகர் கால பிராக்ருத மொழி எழுத்தே கி.மு. 268 -232 என்று இதுவரை நம்பப்பட்டது. ஆனால், தமிழ் மொழி பிராக்ருதத்தைக் காட்டிலும் பழமையானது என்று நிறுவப்பட்டது.
இந்நீதிமன்றம் 22.03.2021 அன்று ஒரு வழக்கில் தீர்ப்பு கூறியபோது கொடுத்த மேற்கோளை மீண்டும் நினைவுகூறுகிறோம்.
" தமிழ் மொழி பழமையானது. சமஸ்க்ருதத்தை விட பழமையானது. என்னால் வணக்கம் மட்டுமே தமிழில் சொல்லமுடிகிறது. இதற்கு மேல் செல்லமுடியாதது வருத்தம் அளிக்கிறது "
இவ்வாறக பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டார்.
பிப்பரவரி 2018 இல் டெல்லியில் நடந்த மாணவர்கள் விழாவில் குறிப்பிட்டார். இது மோடி அவர்களின் கருத்து மட்டுமல்ல. உலக மொழியியல் ஆய்வாளர்களின் கருத்தும் ஆகும்..
2500 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் பழமையான மொழியாகும்..
அசோகரின் பிராக்ருதத்தை முந்திச் சென்று.. இந்தியாவின் பழமையான மொழி தமிழ் ஆகும்..
கீழடி எழுத்துக்கள் தமிழின் பழமையை மட்டுமல்ல... பழங்காலந்தொட்டே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றவர்கள் என்றும் கூறுகிறது.. 2600 ஆண்டுகளாக தமிழ் மொழி பேசப்பட்டும் எழுதப்பட்டும் .. தலைமுறைகளை கடந்து வந்துள்ளது.
இத்தனை சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியை இன்றைய மாணவர் சமுதாயம் புறக்கணித்து ஆங்கில வழியை நாடுவதும் ... இதற்கு பெற்றோர் ஆதரவு இருப்பதும் எங்களுக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது.. இதே போல் தாய்மொழி புறக்கணிப்பு வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
இந்தியாவில் கண்டறியப்பட்டக் கல்வெட்டுகளில் மிகப்பழமையானதாக தமிழ் கல்வெட்டுகளே எனத்தெரிகிறது. தொல்லியல் துறை அளவீட்டின்படி அதிக எண்ணிக்கையில் இருப்பது தமிழ் கல்வெட்டுகளே என்பதும் உறுதியாகிறது. இக்கல்வெட்டுகள் அக்கால மக்களின் வரலாறு, நிர்வாகம், வாழ்வியல், வணிகம், போன்றத் தகவல்களைத் தருகிறது. கல்வெட்டுகளும் ஓலைச்சுவடிகளும் வரலாற்று மூலங்களாகும்.
இந்த தமிழ் கல்வெட்டுகள் மற்றும் மைப்படிகள் பாதுகாப்பு குறித்தே இவ்வழக்குத் தொடரப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள கல்வெட்டுகள் ஆங்கிலேயர்களால் கண்டறியப்பட்டன. காடு, மலை என்று அலைந்து திரிந்த அவர்கள் மிகக் கடினமான சூழலில் இக்கல்வெட்டுகளைக் கண்டறிந்து அதனை பதிவு செய்தார்கள்.
இப்பதிவுகள் அனைத்தும் மைசூரில் உள்ள Asi அலுவலகத்தில் வைக்கப்பட்டன.
மைசூரில் உள்ள கல்வெட்டுப்படிகளில் குறிப்பாக தமிழ் கல்வெட்டுகள் சரியாக பராமரிப்பின்றி இருப்பதாக மனுதாரர் குறிப்பிடுகிறார்.. கல்வெட்டுகள் அழியும் அபாயத்தில் உள்ளதாகவும் அச்சப்படுகிறார்..
Damaged , Destroyed and found to be missing.
இதற்கு தீர்வு கேட்டே இவ்வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
Petition (md) no 20768 of 2019.
மற்றும்..
Md no 17399 Of 2020.
கல்வெட்டுகளை மைசூரிலிருந்து தமிழ்நாட்டுக்கு. இடமாற்றம் செய்து பாதுகாத்து மின்னாக்கம் செய்ய வேண்டும். இதற்கு போதிய கல்வெட்டு ஆய்வாளர்களை Asi பணி நியமனம் செய்யவேண்டும். என்பது மனுதாரர் கோரிக்கை..
எதிர் தரப்பில் தொல்லியல் துறை தாக்கல் செய்த
Counter - affidavit மூலம் தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கையே அதிகம் என்று தெரிகிறது. ஆனால் இக்கல்வெட்டுகளின் எண்ணிக்கையை தொல்லியல்துறை துல்லியமாக தரவில்லை..
21.02.2018 இல்..
தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கை 38000.
சமஸ்க்ருத கல்வெட்டுகளின் எண்ணிக்கை 11000.
என்ற விபரத்தைக் கொடுத்தது.
ஆனால்..
21.டிசம்பர் 2020 இல் தமிழ் கல்வெட்டுகளின் என்னிக்கை 28,276.
சமஸ்க்ருதக் கல்வெட்டுகளின் எண்ணிக்கை 17001..
என்ற விபரத்தைக் கொடுத்தது.. இது பேரதிர்ச்சியாக உள்ளது.
தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறைந்தது.?
14.07.2021 இல்...
டெல்லியில் உள்ள இந்தியத் தொல்லியல்துறை கலாச்சார அமைச்சகம் கொடுத்த அறிக்கையின்படி கல்வெட்டுகளின் எண்ணிக்கை தோராயமாக 74000.
RTI கொடுத்த 38000 தமிழ் கல்வெட்டுகளில்..
28, 276 என்று ஏன் குறைத்து காட்டப்பட்டது..?
அதேபோல் 11000 சமஸ்க்ருத கல்வெட்டுகள் எப்படி 17001 ஆக அதிகரிக்கப்பட்டது..?
தொல்லியல்துறை தொடர்ந்து முரண்பாடான
( Contradictory) தகவல்களையே நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது..
தமிழ் கல்வெட்டுகள் மைசூரில் இருந்தால் அவை பாதுகாக்கப்படாது என்ற மனுதாரர் வாதத்தை நீதிமன்றம் ஏற்கிறது. தமிழ் கல்வெட்டுகள் பராமரிப்பின்றி அழிக்கப்படுவதாக மனுதாரர்கள் ஆதாரத்துடன் குற்றம் சாட்டுகிறார்கள்..
சமீபத்திய தொல்லியல்துறை வெளியீடான..
தென்னிந்தியக் கல்வெட்டுத்தொகுதி 41.
( S.i.i.vol.41)
No 271( Are.488 of 1905)
272, 273, 274,275,276,277, 426,427,428,429,430.
இக்கல்வெட்டுகள் அனைத்தும் காணாமல் போய்விட்டதாக தொல்லியல்துறையே அறிவித்துள்ளது..
மேலும் பல கல்வெட்டுகளின் நிலை இப்படித்தான் உள்ளது..
சரியான பராமரிப்பும் பாதுகாப்பும் இன்றி ஏராளமான தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகள் அழிந்துபோனதை உறுதி செய்கிறோம். அடுத்த தலைமுறைக்கு இக்கல்வெட்டுகளைக் கொண்டு செல்ல தொல்லியல் துறை தவறிவிட்டது.
கல்வெட்டுகளின் மைப்படிகளை மின்னாக்கம் செய்யும் முயற்சியாக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துடன் தொல்லியல் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தும் இப்பணி கைவிடப்பட்டது.
2005 - 2006 ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கையும் வெளியிடவில்லை. கண்டறியப்பட்ட படிமங்களை காலக்கணிப்பும் செய்யவில்லை. இதுகுறித்து மனுதாரர் காமராஜ் அவர்கள் தொடர்ந்த வழக்கு..
W.p.no.13096 2012.
ஆதிச்சநல்லூர் ஆய்வாளர் திரு.சத்தியமூர்த்தி அவர்கள் .. ஆதிச்சநல்லூர் படிமங்களை காலக்கணிப்பு செய்யவோ, ஆய்வறிக்கை வெளியிடவோ மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்று வாக்குமூலம் அளித்தார்.
எனவே மாநில அரசுக்கு இந்நீதிமன்றம் கோரிக்கை வைத்தது.
ஆதிச்ச நல்லூர் படிமங்களை காலக்கணிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தோம்.
இவ்வாறான பல காரணங்களால்...
மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகள் , செப்பேடுகளின் பதிவுகள் மற்றும் அனைத்து தமிழ் தொல்லியல் ஆவணங்கள் அனைத்தும் ..
மைசூரிலிருந்து சென்னைக்கு இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கிறோம்.
அரபி மற்றும் பர்சியன் மொழிக் கல்வெட்டுகளின் அலுவலகம் நாக்பூரில் உள்ளது. சமஸ்க்ருத மொழிக் கல்வெட்டுகள் அலுவலம் லக்னோவில் உள்ளது.. இந்தோ - ஆரிய மொழியான சமஸ்க்ருதத்துக்கே தனிப்பிரிவு அலுவலகம் இருக்கும்போது... எண்ணிக்கையில் அதிகம் உள்ள தமிழ் மொழிக் கல்வெட்டு அலுவலகம் இல்லை...
அதை திராவிட மொழிக் கல்வெட்டுகளுடன் ஏன் இணைத்து வைத்துள்ளீர்கள்..?
தமிழ் மொழிக்
கல்வெட்டுகளுக்கும் தனி அலுவலகம் வேண்டும். சென்னைப்பிரிவு..
Epigraphy branch tamil என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்..
இங்கு தமிழ் மொழியின் அனைத்துத் தொல்லியல் ஆவணங்களும் பாதுகாக்கப்பட
வேண்டும்.
போதுமான கல்வெட்டியல் பிரிவு ஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட
வேண்டும்.. இதையே பேராசியர் இராஜவேலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் பரிந்துரை செய்கிறது.
மேற்கண்ட காரணங்கள்.. மற்றும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம்..
Article 51 - A
Constitution of india 1949..
மற்றும் Article 49 /1949
மேலும்..
உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி...
இந்த உத்தரவை பிறப்பிக்கிறோம்...
இந்த உத்திரவு பிறப்பிக்கப்படும் தேதியிலிருந்து 6 மாத காலத்திற்குள்..
" மைசூரில் இருக்கும் அனைத்துத் தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகள் அனைத்தும் சென்னைக்கு மாற்றப்படவேண்டும்..
அவ்வாறு மாற்றப்படுவதால் கீழ்கண்ட நன்மைகள் இருக்கும் என்று நீதிமன்றம் கருதுகிறது..
ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்று மாணர்களுக்கு சென்னையில் மைப்படி இருப்பதுதான் வசதி.
மைசூரில் இருப்பது தூரம் மற்றும் செலவு.
மைசூர் செல்லுதல்..தங்குதல் என்று வீண் அலைச்சல் மற்றும் தேவையற்ற செலவும் ஏற்படுகிறது.
ஓய்வு பெற்ற முதுநிலை
தமிழகத் தொல்லியல் ஆய்வாளர்கள் அனைவரும்- சென்னையில்தான் உள்ளனர். இவர்கள் ஆய்வு வசதியாக இருக்க சென்னைதான் பொருத்தமாக இருக்கும்.
60 சதவீதம் தமிழ்க் கல்வெட்டுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இப்பணியை மேற்கொள்வதற்கு சென்னைதான் சரியான இடம்.
தமிழகத்தில் உள்ள 50,000 கோவில்களில் உள்ள கல்வெட்டுகள் பல்வேறு காரணங்களால் சிதைவுற்றன.. இவற்றில் உள்ள செய்திகளை அறிய மைப்படிகள்தான் ஒரே தரவு. இவைகள் 1887 முதல் படியெடுக்கப்பட்டுள்ளன.. இவைகள் அனைத்தும் தமிழ் கல்வெட்டுகள் என்பதால் .. இவைகள் தமிழகத்தில்தான் இருக்கவேண்டும்..
ஆகவே...
சென்னையில் தமிழ் கல்வெட்டியல் பிரிவு தொடங்கவேண்டும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழகரசு ஏற்பாடு செய்யவேண்டும். மைசூரில் உள்ள அனைத்து தமிழ் கல்வெட்டு மைப்படிகள் மற்றும் அனைத்து தமிழ் ஆவணங்களும் சென்னைக்கு இடமாற்றம் செய்யவேண்டும். இவைகள் வெளியிடப்பட
வேண்டும். போதுமான கல்வெட்டியல் ஆய்வாளர்கள் பணிநியமனம் செய்தல் வேண்டும். போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவேண்டும்..
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டத் தேதியிலிருந்து 6 மாத காலத்திற்குள் இப்பணிகள் நிறைவு பெறவேண்டும்...
W.p.( md) no 20678 of 2019 and 17399 of 2020.
N.KIRUBAKARAN...J
and
M. DURAISAMY....J
----+----------------------------
தீர்ப்பின் நகலைப் பெற இணைப்பு .. முதல் பின்னூட்டத்தில்...
அன்புடன்..
மா.மாரிராஜன்..

No comments:

Post a Comment