Wednesday, April 5, 2023

திருவள்ளுவமாலை

திருக்குறளும் திருவள்ளுவமாலையும்
திருக்குறள் தமிழ் யாப்பு இலக்கணம் நன்கு வளர்ச்சி அடைந்த பின்னர், பல புதிய சொற்கள் என நெகிழ்ச்சி பெற்ற இடைக் காலத்தில் இயற்றப்பட்ட மிக முக்கியமான நூல் ஆகும்.


சங்க இலக்கியம் என்பது மனித வாழ்வை :
அகம் என வீட்டின் உள்ளே என்ற நோக்கில் தலைவன் - தலைவன் காதல், இல்லற வாழ்வினைப் பாடுவதாகவும்,
புறம் என வீட்டின் வெளியே என்ற நோக்கில் போர், அரசாட்சி பற்றிய பாடல்களாகவும் அமைந்துள்ளது.
திருவள்ளுவர் இந்திய தத்துவ ஞான மரபில் வாழ்வின் உறுதிப் பொருட்களாக "அறம்- பொருள்- இன்பம்" என முப்பால் என திருக்குறளை மெய்யியல் நூலாக இயற்றினார்
திருவள்ளுவமாலையின் சில பாடல்கள் குறள் இயற்றிய அடுத்த நூற்றாண்டிலும் பல சற்றே பிற்காலத்திலும் இயற்றப்பட்டவை. உதாரணமாக சில பாடல்கள் குறள் இயற்றிய அடுத்த நூற்றாண்டில் எழுந்த மணக்குடவர் உரைபடியாக இயல் பிரிப்பை கூறுகிறது, மற்றவை பரிமேலழகர் பிரிப்பை கூறுகிறதனால் 14ம் நூற்றாண்டு எனலாம்

1

அசரீரி
திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோடு
உருத்தகு நற்பலகை ஒக்கஇருக்க
உருத்திர சன்மர் எனஉரைத்து வானில்
ஒருக்கஓ என்றதுஓர் சொல்

'அருள்திரு' என்று அழைக்கப்படும் தகுதியுடைய (அதாவது தெய்வம் என்பதாம்) தெய்வத் திருவள்ளுவரோடு, சங்கப்பலகையில் உருத்திரசன்மர் ஒருவரே ஏறியிருந்திடுக என்று ஓர் சொல், வானத்திலிருந்து '' என்று இரைத்து (ஆரவாரத்தோடு) எழுந்து ஒலித்தது.

2

நாமகள்
நாடா முதல்நான் மறைநான் முகன்நாவில்
பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன்கூடாரை
எள்ளிய வென்றி இலங்கிலைவேல் மாறபின்
வள்ளுவன் வாயதுஎன் வாக்கு                              மாறனே(பாண்டிய மன்னனே) படைப்புக்கால முதலிலே நான், நான்முகனுடைய நாவில் இருந்து நான்மறைகளை- நான்குவேதங்களை- பாடினேன். பின் இடைக்காலத்திலே பாரதம் எனும் ஐந்தாம் வேதத்தினை அருளினேன். அதன்பின் கடைசியாக இப்பொழுது தமிழ்வேதமாகிய திருக்குறளை வள்ளுவனின் வாய்மொழி மூலம் என்வாக்காக (வேதவாக்காக) உலகுக்கு நான் உரைத்தேன்

3

இறையனார்
என்றும் புலராது யாணர்நாள் செல்லுகினும்
நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க்குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்                       இறையனார் (சிவபெருமான்) கூறிய பாடல்.

இங்குத் தெய்வப்புலவரின் பாடலைக் கற்பகமரத்தின் தெய்வமலர் என்று அதனுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றார்.

கற்பகப்பூ என்றும் வாடாதது;அதுபோல் அவர் வாய்ச்சொல்லான திருக்குறளும் என்றும் வாடாதது,அதாவது புதியது, புத்தழகு உடையது.

நெடுங்காலம் சென்றாலும் கற்பகப்பூ தன்னழகு கெடாது நின்று மலர்ந்து தேன் சொரியும் தன்மையை உடையது. திருக்குறளும் காலத்தால் அழியாதது; தன்னழகு கெடாதது என்றும் பொருந்தும் கருத்துக்களை உடையது; இனிய சுவையான மருந்தனைய கருத்துக்களைத்தரும் தன்மைகொண்டது.

குறையில்லாத சிவந்த தளி்ர்களை(கொழுந்துகளை) உடையது கற்பகத்தரு (தரு=மரம்)அதுபோல் செஞ்சொற்களைக்கொண்டது திருக்குறள்.

கற்பகமலர் தெய்வத்திருமலர். திருக்குறளும் தெய்வத் திருக்குறள்.

4

உக்கிரப் பெருவழுதியார்
நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்தநூல்முறையை
வந்திக்க சென்னிவாய் வாழ்த்துகநல் நெஞ்சம்
சிந்திக்க கேட்க செவி                                   

இங்கு வள்ளுவப்பெருமானைப் படைப்புக்கடவுளான பிரம்மனாகக் கூறுகின்றார் உக்கிரப் பெருவழுதியார்.

நான்முகத்தோனாகிய பிரம்மதேவனே தன்னை மறைத்துக்கொண்டு இவ்வுலகில் வள்ளுவனாய்த்தோன்றி நான்கு வேதங்களின் பொரு்ள்களை அறம், பொருள் இன்பம் எனும் மூன்றுபொருள்களாக இவ்வுலகுக்குத் தந்தான். இந்த நூலாகிய திருமுறையை என் தலைவணங்கட்டும்; என் வாய் வாழ்த்தட்டும்; என் நெஞ்சம் சிந்திக்க அதாவது, தியானிக்கட்டும்; என் செவியானது கேட்டுக்கொண்டே இருக்கட்டும்.

5

கபிலர்
தினையளவு போதாச் சிறுபுல் நீர்கண்ட
பனையளவு காட்டும் படித்தால்மனையளகு
வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி

(அளகு= பறவை; வள்ளை= பெண்கள், நெல் குற்றும்போது பாடும் உலக்கைப்பாட்டு வள்ளைப்பாட்டு; வெள்ளை- வெண்பா)

கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது? என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோலாம் என்க.

6

பரணர்
மாலும் குறளாய் வளர்ந்துஇரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்தளந்தான்வாலறிவின்
வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவவெல்லாம் அளந்தார் ஓர்ந்து

இப்பாடலில் வள்ளுவப்பெருமானைக் காக்குங் கடவுளாகிய திருமால் எனக் கூறுகின்றார் பரணர். திருமால் வாமன அவதாரத்தில், திரிவிக்கிரம அவதாரத்தில் குறளனாய்த் தோன்றிப் பின் வளர்ந்து தன்னுடைய திருவடிகள் இரண்டால், இந்த உலகம் எல்லாவற்றையும் அளந்தான். அதேபோல் வள்ளுவரும் தன்னுடைய மெய்யறிவினால், தம் குறள்வெண்பா அடிகள் இரண்டைக்கொண்டு இந்த உலகத்தாரால் நினைக்கப் பட்டவற்றையெல்லாம் ஆராய்ந்து அளந்தார்; அதாவது அதுபற்றித்தெளிவான கருத்தை விளக்கமாகக் கூறியருளினார் என்பதாம்.

இங்கு வள்ளுவப்பெருமானைக் காக்கும் கடவுளாகிய திருமால் என்றும், அவரை அவதாரம் என்றும் கூறுகின்றார்.

7

நக்கீரர்
தானே முழுதுணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்
ஆனா அறம்முதலா அந்நான்கும்ஏனோர்க்கு
ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழிஉலகு என்ஆற்றும் மற்று

தாமே எல்லாவற்றையும் அறிந்து, குளிர்ந்த தமிழால் ஆன குறள் வெண்பாவினால் நீங்காத அறம் முதலான நான்கினையும்- அதாவது, அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கினையும்- அதனை அறியாதார்க்கு முறையாக உரைத்த வள்ளுவப் பேராசானுக்கும், உயிர்காக்கும் நீரை மழையாகப் பொழியும் மேகத்திற்கும் இந்த உலகம் என்ன கைம்மாறினைச் செய்யமுடியும், எதுவும் செய்ய முடியாது. ஆகையால், அவரும் அம்மேகமும் இந்த உலகும் வாழ்க எனவாழ்த்தி வணங்குவோம்!

8

மாமூலனார்

அறம்பொருள் இன்பம்வீ டென்னுமந் நான்கின்
திறந்தெரிந்து செப்பிய தேவைமறந்தேயும்
வள்ளுவன் என்பான் ஓர்பேதை அவன்வாய்ச்சொல்
கொள்ளார் அறிவுடையார்                                  

அறம் பொருள் இன்பம் வீடு என்னும் அந்த நான்கு உறுதிப்பொருள்களின் தன்மையைத் தெரிந்து தெளிவாகச் சொல்லியருளிய தெய்வத்தை, மறந்துபோயாகிலும் அவரை மனிதனாகக் கருதிவள்ளுவன் என்று கூறினால் அவ்வாறு கூறுபவன் ஒரு பேதை (முட்டாள்) ஆவான். அறிவுடையார் அவன் கூற்றை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். (வள்ளுவர் தெய்வப்பிறவி கீதை உரைத்த 'கண்ணன்' போன்று ஓர்அவதாரம்! மூடர்கள் வேண்டுமானால் அவரை 'மனிதன்' என்று பெயரிட்டு அழைக்கலாம் என்பது கருத்து.)

9

கல்லாடர்
ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறுஎனின்
அன்றென்ப ஆறு சமயத்தார்நன்றுஎன
எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி

உலகில் உள்ளவை ஆறு சமயங்கள். அவ்வறுவகை மதத்தினரும், பொருள் ஒன்று என ஒருவர் கூறினால், மற்றொருவர் அதனை மறுத்து, ஒன்று இல்லை வேறு என்று கூறுவார்கள். பிறிதொருவர் வேறு என்று கூறினால், இல்லை அதுவன்று என்பார்கள்! இவ்வாறு தாம் கூறும் கருத்தில் ஒருவரோடு ஒருவர் முரண்பட்டு நிற்பர் ஆறுவகைச்சமயத்தார். ஆனால், எவ்வகைச் சமயத்தாரும் வள்ளுவனார் முப்பாலில் மொழிந்தவற்றை, முரண்படாமல், நன்று என மனமிசைந்து ஒத்துக்கொள்வார்கள். அப்படிப்பட்ட சிறப்புடையது அருங்குறள் என்பதாம். அதாவது, அனைத்துச் சமயத்தினரும் ஏற்றுப் போற்றுவது திருக்குறள் என்பதாம்.

10

சீத்தலைச் சாத்தனார்

மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்
மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும்மும்மாவும்
தாமுடைய மன்னர் தடமுடிமேல் தாரன்றோ
பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்

சேர, சோழ, பாண்டியர்கள் மூன்று மலைகளைக் கொண்டவர்கள். (அவை சேரனுக்குக் கொல்லிமலையும், சோழனுக்கு நேரிமலையும், பாண்டியனுக்குப் பொதிகை மலையும் ஆம்) அவர்கள் முந்நாடு உடையவர்கள். (சேரனுக்குச்சேரநாடு சோழனுக்குச் சோணாடு, பாண்டியனுக்குப் பாண்டிநாடு) அவர்கள் மூன்று ஆறு உடையவர்கள்.(சேரனது ஆன்பொருநை, சோழனது காவிரி, பாண்டியனது வையை). அவர்கள் மூன்று தலைநகரங்கள் கொண்டவர்கள். சேரருக்குக் கருவூராம் வஞ்சி, சோழருக்கு உறையூர், பாண்டியருக்கு மதுரை) அவர்கள் மூன்று முரசுகளை உடையவர்கள்.(அவை மங்கல முரசு, வெற்றி முரசு, கொடை முரசு). அவர்கள் மூன்று தமிழ் உடையவர்கள். (அவை இயல் இசை நாடகம் என்பனவாம்.) அவர்கள் முக்கொடி உடையவர்கள் (சேரனுக்கு விற்கொடி, சோழனுக்குப் புலிக்கொடி, பாண்டியருக்கு மீன் கொடி). அவர்கள் மூன்று குதிரைகள் கொண்டவர்கள். (சேரனின் குதிரை, கனவட்டம், சோழனின் புரவி, பாடலம், பாண்டியர் பரி, கோரம் என்பனவாம்). இத்தகைய சிறப்புகளைக் கொண்ட(மும்மலை, முந்நாடு, முந்நதி, முப்பதி, மும்முரசு, முத்தமிழ், முக்கொடி, மும்மா) சேர சோழ பாண்டியர் ஆகிய மூன்று மன்னர்களின் பெருமை மிக்கமுடிமேல் அணிகின்ற மாலை எது தெரியுமா? அதுதான் மூன்று பால்களையுடைய(அறம், பொருள், காமம்) திருக்குறள் எனும் தமிழ்ப் பாமாலை என்கின்றார், மூன்றுமன்னர்களையும் நன்குஅறிந்த சீத்தலைச் சாத்தனார்.

11

மருத்துவன் தாமோதரனார்
சீந்திநீர்க் கண்டம் தெறிசுக்குத் தேன்அளாய்
மோந்தபின் யார்க்கும் தலைக்குத்தில்காந்தி
மலைக்குத்தும் மால்யானை வள்ளுவர் முப்பாலால்
தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு

தன்பகை எனக்கோபித்து வெகு்ண்டு, மலையைக் குத்துகின்ற பெரிய களிறு போலுள்ள மன்னனே! சீந்திநீர்ச் சருக்கரையையும் சிதைக்கப்பட்ட சுக்கையும், தேனோடு கலந்து மோந்தபின்னால், தலைக்குத்து அதாவது தலைவலி உடையோர் யாராயினும் அவர்க்குத் தலைவலி தீர்ந்து போகும். திருவள்ளுவர் அருளிய திருக்குறளினாலே சீத்தலைச் சாத்தனார்க்குத் தலைக்குத்து/ தலைவலி தீர்ந்து போனது அதாவது இல்லாமல் போயிற்று

12

நாகன் தேவனார்
தாளார் மலர்ப்பொய்கை தாம்குடைவார் தண்ணீரை
வேளாது ஒழிதல் வியப்பன்றுவாளாதாம்
அப்பால் ஒருபாவை ஆய்பவோ வள்ளுவனார்
முப்பால் மொழிமூழ்கு வார்

நாளம் எனப்படும் தண்டோடு பொருந்திய தாமரைமலர்களை உடைய பொய்கையில்/ குளத்தில் மூழ்கி நீராடுவார் வேறு தண்ணீரை விரும்பாது போதல் வியப்பன்று/ஆச்சரியமன்று. அதுபோல வள்ளுவனாரின் முப்பால் எனும் திருக்குறள் நூலில் தோய்ந்தவர்/ மூழ்கியவர் அதற்கு அப்பால் வேறொரு பாவினை/ பாட்டை விரும்புவார்களா? விரும்ப மாட்டார்கள். இதுவே உண்மையில் வியப்பைத்தருவதாம்.

13

அரிசில்கிழார்
பரந்த பொருள் எல்லாம் பாரறிய வேறு
தெரிந்து திறந்தொறும் சேரச்சுருங்கிய
சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்
வல்லார்ஆர் வள்ளுவர்அல் லால்

விரிவுபட்டுக் கிடக்கும் வெவ்வேறு பொருள்களையெல்லாம் ஒழுங்காகக் கூறுபடுத்திச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலில் வள்ளுவரன்றி வேறு யார்?

14

பொன்முடியார்
கான்நின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன்
கூநின்று அளந்த குறளென்பநூல்முறையான்
வான்நின்று மண்ணின்று அளந்ததே வள்ளுவனார்
தாம்நின்று அளந்த குறள்

மாலையணிந்த அரசே! முன்பு காசிபன் தந்த குறள் மண்ணில் நின்று உலகத்தை அளந்தது; இன்று திருவள்ளுவர் தந்த குறள் மண்ணிலும் விண்ணிலும் நின்று உலகத்தையளந்தது.

15

கோதமனார்
ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி யுரைத்துஏட்டின் புறத்தெழுதார்ஏட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று

பிராமணர் நால்வேதங்களையும் ஏட்டில் எழுதினால் அவற்றின் வலிமை கெடுமென்று வாய்ப் பாடமாகவே சொல்லிக் காத்துவருவர்; திருவள்ளுவரின் திருக்குறளையோ ஏட்டிலெழுதினாலும் எவர் படித்தாலும் அதன் வலிமை குறைவதில்லை

16

1நத்தத்தனார்
ஆயிரத்து முன்னூற்று முப்பது அருங்குறளும்
பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின்போயொருத்தர்
வாய்கேட்க நூலுளவோ மன்னுதமிழ்ப் புலவ
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்

ஒருவர் திருக்குறள் முழுவதையுங் கற்றபின், பிறருக்கு ஆசிரியராகிக் கற்பிக்கலாம். ஆனால், ஒருவரிடம் மாணவரா யமர்ந்து கற்க நூலில்லை.

17

முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
உள்ளுதல் உள்ளி உரைத்தல் உரைத்ததனைத்
தெள்ளுதல் அன்றே செயற்பாலவள்ளுவனார்
முப்பாலின் மிக்க மொழியுண்டு எனப்பகர்வார்
எப்பா வலரினும் இல்

திருக்குறளினுஞ் சிறந்தநூல் ஒன்றுண்டென்று எப்புலவருஞ் சொல்லார். ஆதலால் நாம் செய்யவேண்டியது அதை யுள்ளஞ்செறாது உரைத்துத் தெளிதலே.

18

ஆசிரியர் நல்லந்துவனார்
சாற்றிய பல்கலையும் தப்பா அருமறையும்
போற்றி உரைத்த பொருள் எல்லாம்தோற்றவே
முப்பால் மொழிந்த முதற்பா வலரொப்பார்
எப்பா வலரினும் இல்

எல்லாக் கலைநூற்பொருள்களையும் எடுத்துக்கூறும் திருக்குறளை யியற்றிய, திருவள்ளுவரை யொத்த புலவர் ஒருவருமில்லை.

19

கீரந்தையார்
தப்பா முதற்பாவால் தாம்மாண்ட பாடலினால்
முப்பாலின் நாற்பால் மொழிந்தவர்எப்பாலும்
வைவைத்த கூர்வேல் வழுதி மனம்மகிழத்
தெய்வத் திருவள் ளுவர்

பாண்டியன் மனமகிழ நாற்பொருளையும் முப்பாலிற் குறள் வெண்பாவாற் கூறியவர் தெய்வப் புலமைத் திருவள்ளுவரே

20

சிறுமேதாவியார்
வீடொன்று பாயிரம் நான்கு விளங்கறம்
நாடிய முப்பத்துமூன்று ஒன்றூழ்கூடுபொருள்
எள்ளில் எழுபது இருபதிற்றைந் தின்பம்
வள்ளுவர் சொன்ன வகை

திருக்குறள் அதிகாரத்தொகை:பாயிரம் நான்கு; அறத்துப்பால் முப்பத்து மூன்று; ஊழ் ஒன்று; பொருட்பால் எழுபது; இன்பத்துப்பால் இருபத்தைந்து.

21

நல்கூர் வேள்வியார்
உப்பக்கம் நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்சென்பஇப்பக்கம்
மாதானுபங்கி மறுவுஇல் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற்கு அச்சு

வட மதுரைக்குக் கண்ணனை நிலைக்களமாகக் கூறுவர்; வைகை மதுரையான தென்மதுரைக்குத் திருவள்ளுவர் நிலைக்களமாவார்

22

தொடித்தலை விழுத்தண்டினார்
அறம்நான்கு அறிபொருள் ஏழொன்று காமத்
திறம்மூன்று எனப்பகுதி செய்துபெறல்அறிய
நாலும் மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார்
போலும் ஒழிந்த பொருள்

அறத்தைப் பாயிரம், இல்லறம், துறவறம், ஊழ் என நான்காகவும், பொருளை அரசு. அமைச்சு, அரண், கூழ், படை, நட்பு, குடி என ஏழாகவும், இன்பத்தை ஆண்பாற் கூற்று, பெண்பாற்கூற்று, இருபாற்கூற்று என மூன்றாகவும் வகுத்து, நாற்பொருளையுங் கூறிய திருவள்ளுவரே வேருபொருளிருப்பினும் அதையறிவார் போலும்! நாடு அரணுள் அடக்கப்பட்டது.

23

வெள்ளி வீதியார்
செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றேசெய்யா
அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை
இதற்குரியர் அல்லாதார் இல்

ஒருவராலும் இயற்றப் படாத வேதமும் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளும் கூறும் பொருள் ஒன்றே. இவற்றுள் முன்னது பிராமணர்க்கே யுரியது; பின்னதோ எல்லார்க்கும் பொதுவாம்.

24

மாங்குடி மருதனார்                                                ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித்தீதற்றோர்
உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு

திருவள்ளுவரின் திருவாய்மொழி, படிப்பதற் கெளிதாயும் பொருளுணர்தற் கரிதாயுமுள்ள மந்திரநூலாக விளங்கி, தூயவறிஞர் நினைக்குந்தோறும் அவருள்ளத்தை யுருக்கும்.

25

எறிச்சலூர் மலாடனார்
பாயிரம் நான்குஇல் லறம்இருபான் பன்மூன்றே
தூய துறவறம்ஒன் றுஊழாகஆய
அறத்துப்பால் நால்வகையா ஆய்ந்துரைத்தார் நூலின்
திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து

திருவள்ளுவர் நன்றாக ஆய்ந்து பாயிரம் நான்கதி காரமும் இல்லறவியல் இருபததிகாரமும் துறவறவியல் பதின்மூன்றதிகாரமும் ஊழ் ஓரதிகாரமுமாக, அறத்துப்பாலை நால்வகையாக வகுத்துரைத்தார்.

26

போத்தியார்
அரசியல் ஐயைந்து அமைச்சியல் ஈரைந்து
உருவல் அரண்இரண்டு ஒன்றுஒண்கூழ்இருவியல்
திண்படை நட்புப் பதினேழ்குடி பதின்மூன்று
எண்பொருள் ஏழாம் இவை

திருக்குறளின் பொருட்பால், அரசியல் இருபத்தைந் ததிகாரமும், அமைச்சியல் பத்ததிகாரமும், அரணியல் ஈரதிகாரமும் பொருளியல் ஓரதிகாரமும், படையியல் ஈரதிகாரமும் நட்பியல் பதினேழதிகாரமும்; குடியியல் பதின்மூன்றதிகாரமுமாக ஏழுபகுதிகளையுடையதாம்.

27

மோசிகீரனார்
ஆண்பால் ஏழ்ஆ றிரண்டுபெண்பால் அடுத்தன்பு
பூண்பால் இருபால்ஓர் ஆறாகமாண்பாய
காமத்தின் பக்கம்ஒரு மூன்றாகக் கட்டுரைத்தார்
நாமத்தின் வள்ளுவனார் நன்கு

திருவள்ளுவர் ஆண்பாற்கூற்று ஏழதிகாரமும் பெண்பாற் கூற்றுப் பன்னீரதிகாரமும் இருபாற் கூற்று ஆறதிகாரமுமாக, இன்பத்துப்பாலை மூன்றாக வகுத்துரைத்தார்.

28

காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
ஐயாரும் நூறும் அதிகாரம் மூன்றுமாம்
மெய்யாய வேதப் பொருள்விளங்கப்பொய்யாது
தந்தான் உலகிற்குத் தான்வள் ளுவனாகி
அந்தாமரை மேல் அயன்

நான்முகன் திருவள்ளுவனாகி வடமொழி வேதப் பொருளைத் தமிழில் 133 அதிகாரமாக விளக்கிக் கூறினான்.

29

மதுரைத் தமிழ்நாகனார்
எல்லாப் பொருளும் இதன்பால்உள இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால்சொல்லால்
பரந்த பாவால் என்பயன் வள்ளுவனார்
சுரந்தபா வையத் துணை

எல்லாப் பொருளும் இதன்கண் உள. இதில் இல்லாத பொருள் ஒன்றுமில்லை. ஆதலால், உலகத்தார்க்கு இவ்வொரு நூலே போதுமானதாம்.

30

பாரதம் பாடிய பெருந்தேவனார்
எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும்முப்பாற்குப்
பாரதஞ் சீராம கதைமனுப் பண்டைமறை
நேர்வனமற் றில்லை நிகர்

எல்லாப்பொருளையும் எல்லாரும் உள்ளவாறறியுமாறு திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட்குப், பாரதம், இராமாயணம் மனுதருமசாத்திரம், நால் வேதம் ஆகிய நான்கே ஒப்பாம்.

31

உருத்திர சன்மகண்ணர்
மணற்கிளைக்க நீர்ஊறும் மைந்தர்கள் வாய்வைத்து
உணச்சுரக்கும் தாய்முலை ஒண்பால்பிணக்குஇலா
வாய்மொழி வள்ளுவர் முப்பால்மதிப் புலவோர்க்கு
ஆய்தொறும் ஊறும் அறிவு

நீர்நிலை யடுத்த மணலைத் தோண்டுந்தோறும் நீரூறும். குழந்தை வாய்வைத் துறிஞ்சுந்தோறும் தாய்முலை சுரக்கும். அவைபோல், திருக்குறளை ஆராயுந்தோறும் அறிவு பெருகும்.

32

பெருஞ்சித்திரனார்
ஏதம்இல் வள்ளுவர் இன்குறள் வெண்பாவினால்
ஓதிய ஒண்பொருள் எல்லாம் உரைத்ததனால்
தாதுஅவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த
வேதமே மேதக் கன

மாலையணிந்த பாண்டிய வேந்தே! திருவள்ளுவர் வேதங்களின் சிறந்த பொருளை யெல்லாம் குறள்வெண்பாவாற் கூறிவிட்டமையால், இவற்றுள் எவை மேம்பட்டவை?

33

நரிவெரூஉத் தலையார்
இன்பம் பொருள்அறம் வீடுஎன்னும் இந்நான்கும்
முன்பு அறியச்சொன்ன முதுமொழிநூல்மன்பதைகட்கு
உள்ள அரிதென்று அவைவள் ளுவர்உலகம்
கொள்ள மொழிந்தார் குறள்

நாற்பொருளையும் மக்கட்கு அறிவிக்கும்படி இயற்றப்பட்ட நால் வேதங்கள் அவரால் உணர்தற்கு அரியதாயிருந்ததனால், அவற்றை யெளிதா யுணருமாறு திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.

34

மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழார்
புலவர் திருவள்ளுவர் அன்றிப் பூமேல்
சிலவர் புலவர் எனச்செப்பல்நிலவு
பிறங்குஒளி மாமலைக்கும் பெயர்மாலை மற்றும்
கறங்குஇருள் மாலைக்கும் பெயர்

திருவள்ளுவரையும் பிற புலவரையும் புலவரென்று சமமாகச் சொல்லுதல், முழுமதி மாலையையும் காருவா அமாவாசை மாலையையும் மாலையென்றே ஒரே சொல்லாற் குறிப்பது போலும்.

35

மதுரை அறுவைவணிகன் இளவேட்டனார்
இன்பமும் துன்பமும் என்னும் இவைஇரண்டும்
மன்பதைக்கு எல்லாம் மனம்மகிழஅன்பொழியாது
உள்ளி உணர உரைத்தாரே ஓதுசீர்
வள்ளுவர் வாயுறை வாழ்த்து

மக்களெல்லாரும் தமக்கு வரும் இன்பதுன்பக்கரணியங்களை யறிந்து துன்பத்தினின்று தப்பி யின்புறும்பொருட்டு, திருவள்ளுவர் திருக்குறளை வாயுறை வாழ்த்தாகப்பாடினார். வாயுறை வாழ்த்தாவது, முன்பு வெறுப்பை விளைப்பினும் பின்பு நலம் பயக்கும் நன் மருந்துபோற் பயன்படும் அறிவுரை வாயுறுத்தும் மருந்து.

36

கவிசாகரப் பெருந்தேவனார்
பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புநதம்
ஆவிற்கு அருமுனியா ஆனைக்கு அகரும்பல்
தேவில் திருமால் எனச்சிறந்த தென்பவே
பாவிற்கு வள்ளுவர்வெண் பா

பூவிற்குத் தாமரையும், பொன்னிற்கு நாவற் சாறமும், ஆவிற்குக் காமதேனுவும் யானைக்கு ஐராவதமும், தேவிற்குத் திருமாலும், நூலிற்குத் திருக்குறளும் சிறந்தனவாம்.

37

மதுரைப்பெருமருதனார்
அறம்முப்பத் தெட்டு பொருள்எழுபது இன்பத்
திறம்இருபத் தைந்தால் தெளியமுறைமையால்
வேதவிழுப் பொருளை வெண்குறளால் வள்ளுவனார்
ஓதஅழக் கற்றது உலகு

திருவள்ளுவர், அறத்தை முப்பத்தெட் டதிகாரங்களாகவும் பொருளை எழுபததிகாரங்களாகவும் இன்பத்தை இருபத்தைந் ததிகாரங்களாகவும் வகுத்து, வேதப் பொருளைக் குறள் வெண்பாவாற் கோவைபடக் கூறியதால், உலகம் தீயொழுக்கத்தினின்றும் தீர்ந்தது.

38

கோவூர்க் கிழார்
அறம்முதல் நான்கும் அகலிடத்தோர் எல்லாம்
திறமுறத் தேர்ந்து தெளியக்குறள்வெண்பாப்
பன்னிய வள்ளுவனார் பால்முறைநேர் ஒவ்வாதே
முன்னை முதுவோர் மொழி

நாற்பொருளையும் மக்கள் ஆய்ந்து தெளிதற்பொருட்டுத் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட்கு முந்துநூல் ஒன்றும் நிகராகாது.

39

உறையூர் முதுகூற்றனார்
தேவிற் சிறந்ததிரு வள்ளுவர் குறள்வெண்
பாவிற் சிறந்திடும்முப் பால்பகரார்நாவிற்கு
உயலில்லை சொற்சுவை ஓர்வில்லை மற்றும்
செயலில்லை என்னும் திரு

தெய்வப் புலமைத் திருவள்ளுவரின் திருக்குறளை ஓதாதவரின் நாவிற்கு இன்சொற் சொலவில்லை; உடம்பிற்கு நல்வினையில்லை என்று கருதித் திருமகள் அவரிடஞ் சேரான்.

40

இழிகண் பெருங்கண்ணனார்
இம்மை மறுமை இரண்டும் எழுமைக்கும்
செம்மை நெறியின் தெளிவுபெறமும்மையின்
வீடவற்றின் நான்கின் விதிவழங்க வள்ளுவனார்
பாடினர் இன்குறள்வெண் பா

இம்மை மறுமைக்கும் எழுபிறப்பிற்கும் பயன்படவும் நாற்பொருளும் நடைபெறவும், திருவள்ளுவர் திருக்குறளியற்றினர்.

41

செயிர்க் காவிரியார் மகனார் சாத்தனார்
ஆவனவும் ஆகாதனவும் அறிவுடையார்
யாவரும் வல்லார் எடுத்தியம்பத்தேவர்
திருவள்ளுவர் தாமும் செப்பியவே செய்வார்
பொருவில் ஒழுக்கம் பூண்டார்

மக்களுக்கு வேண்டியவற்றையும் வேண்டாத வற்றையும் அறிஞரும் எடுத்துச் சொல்லுமாறு, திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட் கூற்றுக்களையே, ஒழுக்கத்தில் உயர்ந்தோர் கடைப்பிடிப்பர்.

42

செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார்
வேதப்பொருளை விரகால் விரித்துலகோர்
ஓதத் தமிழால் உரைசெய்தார்ஆதலால்
உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு

திருவள்ளுவர் ஆரிய வேதப்பொருளைத் தமிழுலகம் அறிதற்பொருட்டுத் தமிழில் விரித்துரைத்தார். ஆதலால், திருக்குறளில் மக்கள் கருதும்பொருள்களெல்லாம் உள்ளன.

43

வண்ணக்கஞ் சாத்தனார்
ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனினிது
சீரியது என்றொன்றைச் செப்பரிதால்ஆரியம்
வேதம் உடைத்து தமிழ்திரு வள்ளுவனார்
ஓது குறட்பா உடைத்து

வடமொழியையும் தென்மொழியையும் ஒப்பு நோக்கி இது சிறந்தது என்று ஒன்றைச் சொல்ல முடியாது. வடமொழியில் வேதமுள்ளது; தென்மொழியில் திருக்குறள் உள்ளது. ஆதலால், இரண்டும் சமமே.

44

களத்தூர்க் கிழார்
ஒருவர் இருகுறளே முப்பாலின் ஓதும்
தர்மம் முதல்நான்கும் சாலும்அருமறைகள்
ஐந்தும் சமயநூல் ஆறும்நம் வள்ளுவனார்
புந்தி மொழிந்த பொருள்

இருக்குமுதல் பாரதம் ஈறான வேதங்கள் ஐந்தும் வேதவழிப்பட்ட சாத்திரங்கள் ஆறும், திருவள்ளுவர் நூலிலடங்கும்; ஆதலால் ஒருவர் உய்வதற்கு, ஓரெதுகையும் ஈரெதுகையுமாகிய இருவகைக் குறளாலு மமைந்த முப்பாலிற் சொல்லப்பட்ட நாற்பொருளையும் அறிந்தாற் போதும்.

45

நச்சுமனார்
எழுத்துஅசை சீரடி சொற்பொருள் யாப்பு
வழுக்கில் வனப்பு அணிவண்ணம்இழுக்கின்றி
என்றெவர் செய்தன எல்லாம் இயம்பின
இன்றிவர் இன்குறள்வெண் பா

எழுத்து முதல் வண்ணம் ஈறாகச் சொல்லப்பட்ட எல்லாம் அழகாக எவ்வெக்காலத்தில் எவ்வெவராற் சொல்லப்பட்டனவோ, அவையெல்லாம் இக்காலத்து இத்திருவள்ளுவரால் இயற்றப்பட்ட இனிய குறள் வெண்பாக்களிற் சொல்லப்பட்டுள்ளன.

46

அக்காரக்கனி நச்சுமனார்
கலைநிரம்பிக் காண்டற்கு இனிதாகிக் கண்ணின்
நிலைநிரம்பும் நீர்மைய தேனும்தொலைவுஇலா
வான்ஊர் மதியம் தனக்குண்டோ வள்ளுவர்முப்
பால்நூல் நயத்தின் பயன்

மதியமும் முழுமதியும் முப்பால் நூலும் முறையே பதினாறுகலைகளாலும் அறுபத்துநான்கு கலைகளாலும் நிறைந்து காண்பதற்கும் ஆராய்தற்கும் இனிதாகி, புறக் கண்ணிற்குத் தண்மையும் அகக்கண்ணிற்குப் பண்பும் உடைத்தாயினும், முப்பால் நூலால் விளையும் பயன் மதியினிடத்துண்டோ?

47

நப்பாலத்தனார்
அறம்தகளி ஆன்ற பொருள்திரி இன்பு
சிறந்தநெய் செஞ்சொல் தீதண்டுகுறும்பாவா
வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
உள்ளிருள் நீக்கும் விளக்கு

திருவள்ளுவர் அறத்தை அகலாகவும், பொருளைத் திரியாகவும் இன்பத்தை நெய்யாகவும், சொல்லை நெருப்பாகவும், குறட்பாவைத் தண்டாகவும் கொண்டு, உலகத்தோரின் அகவிருளை நீக்கும் விளக்கேற்றினார்.

48

குலபதி நயனார்
உள்ளக் கமலம் மலர்த்தி உளத்துஉள்ள
தள்ளற்கு அரிய இருள் தள்ளுதலால்வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரும் ஒக்கும்எனக்
கொள்ளத் தகுங்குணத்தைக் கொண்டு

நெஞ்சத் தாமரையை விரியச் செய்து அகவிருளை நீக்குந் திருக்குறளும், நீர்த்தாமரையை விரியச் செய்து புறவிருளை நீக்கும் கதிரவனும், குணத்தால் ஒக்குமென்று கொள்ளத்தகும்.

49

தேனிக்குடிக் கீரனார்
பொய்ப்பால பொய்யேயாய்ப் போயின பொய்அல்லா
மெயப்பால மெய்யாய் விளங்கினவேமுப்பாலின்
தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால்
வையத்து வாழ்வார் மனத்து

பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத

மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே-முப்பாலில்

தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால்

வையத்து வாழ்வார் மனத்து.

50

கொடிஞாழல் மாணிபூதனார்
அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின்
திறன்தெரிந்தேம் வீடு தெளிந்தேம்மறன்எறிந்த
வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயால்
கேளா தனவெல்லாம் கேட்டு

பகைவென்ற பாண்டிய! திருவள்ளுவர் வாயினின்று, இதற்குமுன் கேட்டிராதவையெல்லாம் கேட்டு நாற்பொருளின் இயல்பையும் நன்றாய் அறிந்தேம்.

51

கவுணியனார்
சிந்தைக்கு இனிய செவிக்கினிய வாய்க்கினிய
வந்த இருவினைக்கு மாமருந்துமுந்திய
நன்நெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார்
பன்னிய இன்குறள்வெண் பா

நாம் நல்லொழுக்க வழியை அறிதற்பொருட்டுப் புலமை மிக்க திருவள்ளுவர் இயற்றிய இனிய குறள்வெண்பாக்கள் ஆராய்ந்தால் மனத்திற்கும் கேட்டாற் செவிக்கும் ஓதினால் நாவிற்கும் இன்பந்தருவன; தொன்றுதொட்டு வரும் இருவினைகளாகிய நோய்கட்குச் சிறந்த மருந்தாவன.

52

மதுரைப் பாலாசிரியனார்
வெள்ளி வியாழம் விளங்குஇரவி வெண்திங்கள்
பொள்என நீக்கும் புறஇருளைதெள்ளிய
வள்ளுவர் இன்குறள் வெண்பா அகிலத்தோர்
உள்இருள் நீக்கும் ஒளி

வெள்ளி வியாழன் கதிரவன் திங்கள் என்பன புறவிருளை நீக்கும் ஒளிகளாம். அவைபோலத் திருவள்ளுவரின் இனிய குறள் வெண்பா அகவிருள் நீக்கும் ஒளியாம்.

53

ஆலங்குடி வங்கனார்
வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்கும்
தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால்தெள்ளமுதம்
உண்டறிவார் தேவர் உலகடைய உண்ணுமால்
வண்தமிழின் முப்பால் மகிழ்ந்து

திருவள்ளுவர் பாட்டின் தீஞ்சுவைக்குத் தெள்ளமுதமும் ஒவ்வாது. தெள்ளமுதைத் தேவர் மட்டும் உண்டு சுவைப்பர்; முப்பாலமுதையோ உலகத்தாரனைவரும் உண்டு சுவைப்பர்.

54

இடைக்காடர்
கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்

திருக்குறளின் சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமும் நோக்கின், ஒவ்வொரு குறளும், கடுகின் நடுவில் துளைசெய்து அதில் எழுகடல் நீரையும் பாய்ச்சி, மேலும் அது அளவிற் குறுகும் வண்ணம் சற்றுத் தறித்துவைத்தாற் போன்றதாம்.

55

ஔவையார்
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்

திருக்குறளின் சொற்சுருக்கத்தையும் பொருட்பெருக்கத்தையும் நோக்கின், ஒவ்வொரு குறளும், கடுகினும் மிக நுண்ணிய அணுவைத் துளையிட்டு அதில் எழுகடல் நீரையும் பாய்ச்சி, மேலும் அது அளவிற் குறுகும் வண்ணம் சற்றுத் தறித்து வைத்தாற் போன்றதாம்.

 

 


No comments:

Post a Comment