Wednesday, October 9, 2024

பண்டைத் தமிழ் இலக்கியத்தில் ஆயுத பூஜை வழிபாடு

 உலகைப் படைத்த பரம்பொருளை (பிரம்மத்தை) ஆதிபகவன் எனக் காட்டிய வள்ளுவர் அடுத்து வான் சிறப்பு என இறைவன் வெளிப்பாடாக மழையைப் போற்றுவார், ஒவ்வொருவர் உள்ளேயும் பஞ்ச பூதங்கள் உள்ளது என்கிறார். அதே போலே நம் கல்வி, தொழில் கருவிகளை தூய்மை செய்து வணங்கும் ஆயுத பூஜை நடைமுறையின் வரலாற்றைக் காண்போம்


சங்க இலக்கியம்  பதிற்றுப்பத்து 66 

"தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின்
தார் புரிந்து அன்ன வாள் உடை விழவின்
போர் படு மள்ளர் போந்தொடு தொடுத்த
கடவுள் வாகை துய் வீ ஏய்ப்ப" -            பதிற்றுப்பத்து 66
தோலால் ஆன கேடயங்களின் மேல் எழுந்துநிற்கும் பரந்து ஒளிவீசுகின்ற வேலையுடைய,
மாலைகள் முறுக்கிக்கொள்வதைப் போல சுழல்கின்ற வாள்களை உடைய விழாவையுடைய,
போரை மேற்கொள்ளும் வீரர்கள் பனங்குருத்தோடு சேர்ந்து தொடுத்த
கொற்றவை வாழும் வாகை மரத்தின் உச்சியில் பஞ்சினைக் கொண்ட பூவைப் போலப்

என்று வாளுக்கு விழா எடுத்த செய்தியை கபிலர் நேரடியாக குறிப்பிடுகிறார்.

ஆயுத பூஜை அல்லது சரஸ்வதி பூஜை என்பது நவராத்திரி விழாவின் அங்கமான ஓர் இந்து சமய பண்டிகையாகும். இது இந்து நாட்காட்டியின்படி புரட்டாசி மாதம் வளர்பிறை நவமியிலும் பொது நாட்காட்டியின்படி செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப் படுகிறது. 

பாட்டுத் தொகை நூல்கள் பின்பான தொல்காப்பியத்தில் 

சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும்
நடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும் 10
மாணார் சுட்டிய வாள் மங்கலமும்
மன் எயில் அழித்த மண்ணுமங்கலமும்
பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்
பெற்ற பின்னரும் பெரு வளன் ஏத்தி
நடை-வயின் தோன்றிய இரு வகை விடையும் 15

என்ற வரிகளில் மாணார் என்ற சொல்லுக்கு போர் பயிற்சி பெறும் மாணவர், வெற்றி பெற்றவர் என்றும் அதில் குறிப்பாக நச்சினார்க்கினியர் பகைவரை வெற்றி கொண்ட வாளை வாழ்த்தி செய்யப்படும் சிறப்பு செயல் முறைகளை, அதாவது ஆயுத பூஜையையே குறிப்பிடுகிறார்.

சிலப்பதிகாரத்தில் .
'கலையமர் செல்வி கடனுணின் அல்லது
சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள்
மட்டுண் வாழ்க்கை வேண்டுதி ராயின்
கட்டுண் மாக்கள் கடந்தரும் எனவாங்கு
இட்டுத் தலையெண்ணும் எயின ரல்லது'

பொருள்:- போருக்கு எடுத்துச்செல்லும் ஆயுதங்களை கொற்றவை முன்பு வைத்து வழிபட்டு எடுத்துச்செல்ல வேண்டும், கொற்றவைக்குச் செய்யவேண்டிய வழிபாட்டு முறைகளை செய்யவில்லையெனில் அவள் உங்கள் வில்லுக்கு வெற்றியைத் தரமாட்டாள் என்று இளங்கோவடிகள் கூறுகிறார்.

12ம் திருமுறையில் சேக்கிழார் பெருமான்,

மற்றவர் அணைய இப்பால் வளநகர் அதனில் மன்னும்
கொற்றவர் வளவர் தங்கள் குலப் புகழ்ச் சோழனார் தம்
பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்ட வர்த்தனம் ஆம் பண்பு
பெற்ற வெங் களிறு, கோலம் பெருகு மா நவமி முன்னாள்.

நவமிக்கு முந்தய தினத்தில் போரில் ஈடுபடும் யானைக்கு யானைப்பாகன் அலங்காரம் செய்து மரியாதை செய்ததன் விளைவாகத்தான் நாம் இன்று பயன்படுத்தும் வாகனங்களை சுத்தப் படுத்தி அலங்காரம் செய்து மரியாதை செய்யும் நிகழ்வுதான் ஆயுத பூஜை.

புறப்பொருள் வெண்பாமாலை - வாள் மங்கலப் பாடலில்,

"நால் திசையும் புகழ் பெருக
வீற்று இருந்தான் குடை புகழ்ந்தன்று.
கயக்கு அருங்கடல் தானை
வயக் களிற்றான் வாள் புகழ்ந்தன்று"   - புறப்பொருள் வெண்பாமாலை

No comments:

Post a Comment