Sunday, December 21, 2025

சங்க இலக்கியத்தில் ராவணன் கலித்தொகை- 38 -இராவண அனுக்கிரக மூர்த்தி

 இராவண அனுக்கிரக மூர்த்தி; கலித்தொகை- 38 காட்டும் உவமை செழிப்பான நாட்டைக் காட்ட உவமையாக கூறப்பட்டு உள்ளது. 

இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக
ஐ_இரு தலையின் அரக்கர் கோமான்
தொடி பொலி தட கையின் கீழ் புகுத்து அ மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல 5

இமய மலையை வில்லாக வளைத்த சிவபெருமான், ராமபிரான் முன்னோர் மோட்சத்திற்காக  கங்கை ஆறு பூமிக்கு  பாய தன் தலை மேல் ஏற்றதால் ஈரமான சடையை உடையவன். அவன் தன் மனைவி உமையாளோடு சேர்ந்து இமயமலை மேல் அமர்ந்திருந்தான். 10 தலை அரக்கர் தலைவன் இராவணன் தொடி அணிந்திருந்த தன் கையை இமய மலைக்கு அடியில் புகுத்தி அம்மலையை எடுக்க முயல; முடியாமல் துன்புற்றான். அதுபோல ஒரு நிகழ்வு. வேங்கை மரம் பூத்திருந்தது. அது புலி போல் தோன்றியது. அதன் மீது சினம் கொண்டு மதம் கொண்ட யானை வேங்கை அடிமரத்தில் குத்தியது. குத்திய கொம்பை அதனால் பிடுங்க முடியவில்லை. மலையின் குகைகளில் எதிரொலி கேட்கும்படி முழங்கியது. இப்படி யானை முழங்கும் நாட்டை உடையவன் நீ. நாட! கேள்.  

 
ராமாயண உத்திர காண்டத்தில் இந்த கதை உண்டு. தன் கை சிக்கிய போது தசக்ரீவன் பெருத்த கூச்சல் எழுப்பியதால் ராவணன்( உயர் குரலோன்) எனப் பெயர் வந்தது

திருஞானசம்பந்தர் தேவாரம், திருமறைக்காட்டுப் பதிகம்- இராவணன் கயிலாய மலையைப் பெயர்க்கையில், சிவபிரான் தம் கால் விரலால் அதை அழுத்தியதைக் கூறுகையில்,

“அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்

இரக்கம் ஒன்றிலீர் எம்பெருமானிரே” 

ராவணன் கைலாய மலை மீது தன் புஷ்பக விமான பரக்க இயலாமல் போக அங்கு இருந்த நந்தியிடம் காரணம் கேட்க சிவபெருமான் - உஅமை அம்மையோடு உள்ளதைக் கூற - ராவணன் கேலி செய்ய நந்தி குரங்குகளால் அழிவாய் எனச் சாபம் கொடுத்தார், ராவணன் கைலாயத்தையே தூக்க முயல அங்கு இருந்த உயிர்கள், குலுங உமை அம்மையும் கலங்க சிவபெருமான் தன் விரலால் அழுத்த - ராவணன் உண்மை உணர்ந்து வருந்து சிவபெருமானை வணங்கி சிவ தாண்டவ ஸ்தோத்திரம் பாடிட, சிவபெருமானிடம் தன் நித்திய வணக்கத்திற்கு ஆதம லிங்கம் தர - அதை எடுத்துச் செல்லும் வழியில் கோகர்ணத்தில் கீழே வைக்க அங்கேயே அந்த லிங்கம் உள்ளதாம்.

1. ராவண அனுக்கிரக மூர்த்தி

2.  கம்போடியாவில் பந்தியாய் சிரே 10ம்  நூற்றாண்டு  சிவாலய சிற்பம்

3 எல்லொரா சிற்பம்

4.  திருவண்ணாமலை

5. ஹொய்சாளர் அளபேடு

சங்க இலக்கியங்களில் சிவன் - முப்புரம் எரித்த திரிபுராந்தக மூர்த்தி

  முப்புரம் எரித்த  திரிபுராந்தக மூர்த்தி - சங்க இலக்கியங்களில் சிவன் 

இது பறக்கும் கோட்டைகளுடன் கூடிய மூன்று நகரங்கள் கொண்ட தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுர சகோதரர்களை (திரிபுரர்) அழிப்பதற்காக எடுத்த கோலம்.

ஓங்குமலைப் பெருவில் பாம்பு ஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற்றண்ணல் காமர் சென்னிப்
பிறை நுதல் விளங்கும் ஒருகண் போல புறம் 55

உயர்ந்த இமய மலையைப் வில்லாகவும் பாம்பை நாணாகவும் கொண்டு, ஒரே அம்பில் முப்புரங்களையும் (மூன்று அசுரர்களின் பறக்கும் கோட்டைகளையும்) அழித்து, பெரிய வலிமையுடைய தேவர்களுக்கு வெற்றியைக் கொடுத்த, கரிய நிறமுடைய கழுத்தையுடைய சிவபெருமானின் அழகிய திருமுடியின் பக்கத்தில் உள்ள பிறையணிந்த நெற்றியில் உள்ள கண்போல்

மூவேந்தர்களிலும் மேம்பட்ட மாலையணிந்த நன்மாறனே!

வடமொழி மகாபாரத்தின் அநுஷாசந பர்வதத்திலும், யஜூர் வேதத்திலும், சரபோபநிடதத்திலும், மச்சபுராணம், கந்தபுராணம், லிங்கபுராணம் ஆகியவைகளிலும் இறைவன் திரிபுரம் எரித்த புராணம் விளக்கப் பட்டிருக்கிறது.

கூவம் திரிபுராந்தகர் கோயில் (Tripuranthaka Swamy Temple) என்பது திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இச்சிவாலயத்தின் மூலவர் திரிபுராந்தகர். தாயார் திரிபுராந்தக நாயகி.

திருபுராந்தகர் சந்தனச் சிற்பம் (மைசூர்)

கலை வடிவங்களில் மாமல்லபுர சிற்பம் வடக்குச்சுவர், கொடித்தூண், காஞ்சி கைலாசநாத கோயில் சிற்பம், வடக்குச்சுவர், சோழர்கால கோயில்களின் தேவகோட்டங்கள், நாயக்கர் காலத்தில் தூண்கள் என்பவற்றில் காணலாம்.

கொடும்பாளூர் விமானத்தில் திரிபுர தகனக் காட்சி

தஞ்சைக்கோயில் கருவறையின் மேல் நிலையில் திரிபுராந்தகர் புராண வரலாற்றுத் தொடர் சிற்பம்.

சிதம்பரக் கோயில் கலைக்கோபுரங்களில் திரிபுராந்தகர் தேவியுடன் வில்லேந்தி நிற்கும் கோலம்.

திருநல்லம் கோணேரிராசபுரம் கோயிலுக்கு செம்பியன் மாதேவி திரிபுராந்தகரையும் தேவியையும் செப்புத்திருமேனியாக வழிபாட்டிற்காகத் தானமளித்திருக்கிறார்.