Sunday, June 24, 2018

அந்தணர்களும் வர்ணமும் மனு ஸ்மிருதியும்

மனு ஸ்ம்ருதியில் பிராமணனுக்கு உயர்ந்த இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதையும் விட உயர்ந்த இடம் க்ஷத்ரியனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது . ‘க்ஷத்ரியனை விட உயர்ந்தவன் இல்லை ; ஆகையால் ராஜசூயம் நடக்கும் பொது, பிராமணன் க்ஷத்ரியனை விட , தாழ்வான இடத்திலேயே அமர்கின்றான்.’ என்று ஸத பத பிராமணம் கூறுகிறது. பிராமணனுக்கு சொல்லாத சிறப்பை மனு நீதி , அரசனுக்கு கூறுகிறது. ‘சந்திரன், அக்னி, வாயு, சூரியன், , இந்திரன், குபேரன் , வருணன், யமன் ஆகிய எட்டு உலக நாயகர்களின் அம்சங்களைக் கொண்டவன் அரசன். ஆகையால் அரசனுக்கு அசுத்தம் என்பது கிடையாது என்று மனு நீதி சொல்கிறது.
பிராமணனுக்குப் பல சலுகைகளைக் காட்டுகிற மனுநீதி, மேலே சொன்னவாறு அரசனுக்குத் தருகிற உயர்ந்த அந்தஸ்தை, பிராமணனுக்குத் தரவில்லை. பிராமணனைக் கொல்லக் கூடாது என்றும், மரண தண்டனையிலிருந்து அவனுக்கு விலக்கு உண்டு என்றும் மனுநீதி கூறுகிறது. ஆனால், தன்னைத்தாக்க வருகிற பிராமணனை, சிறிதும் தயக்கம் இன்றி கொன்றுவிட வேண்டும் என்றும் அதே மனு நீதி சொல்கிறது.
குரும் வா பாலவ்ருத்தெள வா
ப்ராம்மணம் வா பஹுச்ருதம். 
ஆததாயினமாயாந்தம் 
ஹன்யாதேவாவிசாரயந்
குருவோ, இளைஞனோ வயோதிகனோ பிராமணனோ மெத்த கற்றவனோ ஆயினும் சரிஒருவன் வன்முறை எண்ணத்துடன் வந்தால் அவனைத்தயக்கமின்றி கொன்று விடவேண்டும்என்பது இதன் அர்த்தம் இது மனு ஸ்ம்ருதியில் வருகிறது.
அதே போல சில குறிப்பிட்ட குற்றங்களுக்கு பிராமணன் கொல்லப்படலாம் என்றும் மனு தர்மம் கூறுகிறது.
ஒரே குற்றத்திற்கு மற்றவர்களை விட பிராமணனுக்கு அதிக தண்டனை வேண்டும் என்றும் மனுநீதி வற்புறுத்துகிறது.
அஷ்டாபாத்யம் து சூத்ரஸ்ய
ஸ்தேயே பவதி கில்பிஷம்.
ஷோடசைவ து வைச்யஸ்ய 
த்வாத்ரிம்சத் க்ஷத்ரியஸ்ய ச.
ப்ராம்மனஸ்ய சது: ஷஷ்டி:
பூர்ணம் வாபிசதம் பவேத்
த்விகுணாவா சது:
ஷஷ்டி தத் தோஷகுனா வித்தி: ஸ:
அறிந்து திருட்டுக் குற்றத்தைச் செய்கிற சூத்திரனுக்கு வழக்கமான தண்டனையை விட எட்டு மடங்கு அதிகமான தண்டனையை விதிக்க வேண்டும். வைச்யனுக்கு பதினாறு மடங்கு; க்ஷத்ரியனுக்கு முப்பத்திரண்டு மடங்கு ; குற்றத்தின் தன்மையை அறிந்தவன் என்பதால் பிராமணனுக்கு அறுபத்தி நான்கு மடங்கு தண்டனை அல்லது நூறு மடங்கு அல்லது நூற்றி இருபத்தெட்டு மடங்கு தண்டனை விதிக்க வேண்டும்.
பிராமணனுக்குச் சலுகையை அளிக்கிற மனு நீதிதான், மேற்கண்ட விதிமுறையையும் வற்புறுத்தி இருக்கிறது. அது மட்டுமல்ல, மனு தர்மம், எல்லா பிராமணர்களையும் – அதாவது பிராமணனாகப் பிறந்தவர்கள் அனைவரையும் – சலுகைக்கு உரியவர்களாக எடுத்துக் கொள்ளவில்லை.
கற்றறிந்து வேதம் ஒதுகிற பிராமணனுக்கு வரி விதிக்கக் கூடாது என்று மட்டுமே மனு தர்மம் சொல்கிறது. அப்படி கற்றறிந்து வேதம் ஒதாத பிராமணனுக்கு வரி விலக்கு கிடை யாது. ஆனால் ஏழை மக்களிடமும், சிறு வியாபாரங் களைச் செய்பவர்களிடமும் பெயரளவுக்கே வரி வசூல் செய்ய வேண்டும் என்றும் மனு தர்மம் சொல்கிறது. இது பிராமணனுக்காக ஏற்படுத்தப்பட்ட சலுகை அல்ல. எல்லா வர்ணங்களைச்சார்ந்தவர்களிடையிலும் உள்ள ஏழைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட சலுகை.
வேதம் ஓதி, சாஸ்திர விதிமுறைப்படி நடக்காத பிராமணனை மனு தர்மம் மிகவும் கடுமையாக அணுகுகிறது .
எப்படிப்பட்ட பிராமணர்களுக்கு தானங்களைச் செய்ய வேண்டும் என்று விவரிக்கிற மனு ஸ்ம்ருதி, இவ்வாறும் சொல்கிறது; ‘சாதுவைப் போல் வேஷம் அணிந்து கொண்டு, மற்றவர் பொருளின் மீது விருப்பம் வைத்து, பொய்யை பரப்பி, கர்வம் கொண்டு, மற்றவர்களைப் பற்றிய நல்ல வார்த்தைகளைப் பொறுக்க முடியாத பொறாமைக் காரனாகத் திகழ்பவன், பூனையின் தன்மையை உடையவன் எனப்படுகிறான். தான் தேடுகிற இரை வெளியே வருகிற வரையில், அடக்க குனம் உள்ளதுபோல் நடித்து, இரை வெளியே வந்தவுடன் பாய்ந்து பிடித்து, அதைக் கொன்று விடுகிற குணம் பூனையினுடைய குணம்…. இப்படிப்பட்ட குணமுடைய குணமுடைய பிராமணன் நரகத்தில் வீழ்கிறான்….’
மனு தர்மம் மேலும் சொல்கிறது : பூனை குணம் உடைய பிராமணனுக்கோ விரதமுடையவன் போல் வேஷம் போடுகிற பிராமணனுக்கோ, வேதங்களைக் கற்றறியாத பிராமணனுக்கோ, ஒரு சிறியதானத்தையும் கூட நன்னடத்தை உள்ள மனிதன் செய்து விடக் கூடாது. இப்படிப்பட்ட பிராமணர்களுக்கு தானம் செய்யப்பட்டால் , தானம் வாங்கியவனோடு சேர்ந்து, தானம் கொடுத்தவனும் துன்பத்தையே அனுபவிப்பான். வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் கூறப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைப் பிடிக்காத பிராமணனுக்கு சிராத்தத்தில் உணவளிக்கப் பட்டால், அந்த உணவு அரக்கர்களால் உட்கொள்ளப் பட்டதாகிறது.
இப்படி வேதம் ஒதாத பிராமணனையும், சாஸ்திர விதிமுறைப்படி நடக்காத பிராமணனையும், மனு தர்மம் பிராமணனாகவே கருதவில்லை. ஆகையால், பிராமணனுக்குப் பலவித சலுகைகளை மனுநீதி தந்து விடுகிறது என்று கூறுகிறபோது – பல சுமைகளைப் பிராமணன் மீது அதே நீதி நூல் ஏற்றுகிறது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். இன்றும் பல வகுப்பினருக்கு சலுகைகள் கோரப்படுகின்றன. சட்ட ரீதியாகச் சலுகைகள்  அளிக்கப்படுகின்றன. ஆனால் அச்சலுகைகளை பெறுபவர்கள் மீது, சட்டம் எந்தச் சுமையையும் ஏற்றவில்லை மனு தர்மமோ, சலுகைகள் உண்டு – இந்தச் சுமைகளைத் தாங்கினால் என்றுதான் கூறியிருக்கிறது.

அப்ராம்ணாத் அத்யயனம் ஆபத்காலே விதியதே.
அனுவ்ரஜ்யா ச சுச்ரூஷா  யாவத் அத்யயனம் குரோ:
தவிர்க்க முடியாத நேரங்களில் பிராமண மாணவன்பிராமணன் அல்லாத குருவிடமிருந்து போதனை பெறலாம்; அப்படி போதனை பெறுகின்ற காலத்தில் அந்த குருவுக்கு அந்த மாணவன் பணிவிடை செய்யவேண்டும் – என்பது மேற்கண்ட மனுவாக்கியத்தின் அர்த்தம்.
அதாவது சூத்திரர்கள் வேதம் கற்கக்கூடாது என்று ஒருபுறம் கூறுகிற மனு தர்மம், பிராமணன் அல்லாதவர்களிடமிருந்து போதனை பெறும் அனுமதியையும் பிராமணனுக்கு அளிக்கிறது. பிராமணன் அல்லாதவன் எனும்போது, அதில் க்ஷத்ரிய வைச்ய, சூத்ர வர்ணத்தவர் அனைவருமே அடங்குகிறார்கள் அல்லவா ?
இந்த முரண்பாடு – அதாவது மேற்கண்ட விதிக்கும், சூத்திரர்கள் வேதம் கற்கக் கூடாது என்ற முரண்பாடு –  – மனு ஸ்ம்ருதியில் இருக்கத்தான் செய்கிறது. இதைத் தீர்ப்பதற்கு வேதங்களில்தான் ஆதாரம் தேட வேண்டும் ஏற்கெனவே நான் குறிப்பிட்ட மாதிரி, வேதங்கள் மாற்றப்பட முடியாதவை ; மனு ஸ்ம்ருதி போன்ற தர்ம சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளோ காலத்துக்கேற்றபடி மாற்றியமைக்கப்படக் கூடியவை . உபநிஷத்துக்கள், வேதங்களின் ஓர் அங்கம் முதன்மையான உப நிஷத்துக்களில் சாந்தோக்ய உபநிஷத்தும் ஒன்று. அதில் ரைக்வர் என்கிற பிராமணர் ஜனச்ருதி என்கிற சூத்திரருக்கு வேதத்தைக் கற்பிக்கிற நிகழ்ச்சி விவரிக்கப்படுகிறது.
ப்ருகு முனிவர், பரத்வாஜ முனிவரிடம் நான்கு வர்ணத்தவருக்குமே யாகங்களையும் மற்ற தெய்வ காரியங்களையும் செய்யும் உரிமை உண்டு என்று விளக்குகிறார்
இத்யேதி: கர்மபிர் வ்யஸ்தா
தீவிஜா வர்ணாந்தரம் கத :
தர்மோ யஞ்ய-க்ரியா தேஷாம்
நித்யம் ந ப்ரதிஷித்யதே.
இதன் அர்த்தம் : பிராமணர்களே தங்கள் நியமங்களைக் கை விட்டதால் வெவ்வேறு செயல் முறைகளை மேற்கொண்டுமற்ற மூன்று வர்ணங்களைச் சார்ந்தவர்களானார்கள். ஆகையால்தர்ம காரியங்களைச் செய்வதிலும் யாகங்களை நடத்துவதிலும் யாருக்கும் தடை கிடையாது.
பிராமண ,க்ஷத்ரிய , வைச்ய வகுப்பினர் அனைவரும் வேதம் கற்கலாம் என்பது எல்லா நூல்களிலும் கூறப்படுகிறது; அது தவிர சூத்திர வர்ணத்தைச் சார்ந்தவர்களும் வேதம் கற்கலாம் என்பதற்கு மேற் கூறிய ஆதாரங்கள் இருக்கின்றன.
இவை ஒருபுறமிருக்க, மனு தர்மமே கூட யாரை பிராமணனாகக் கருதுகிறது? யாரை சூத்திரனாகக் கருதுகிறது?  ‘வேதத்தைக் கற்றறியாமல், மற்ற கல்விகளைக் கற்று, வாழ முயற்சிக்கிற பிராமணன், தன்னுடைய சந்ததியினருடன், தான் வாழும் காலத்திலேயே சூத்திரனாகிறான்’ என்று மனு ஸ்ம்ருதி சொல்கிறது.
இது மட்டுமல்ல. சூத்திரன், பிராமணனாகி விடலாம் பிராமணனும் சூத்திரனாகலாம்; அதே போல், க்ஷத்ரிய மற்றும் வைச்ய வர்ணங்களைச் சார்ந்தவர்களின் மகன்களும், வேறு வர்ணத்தை அடையலாம் என்றும் மனு ஸ்ம்ருதி சொல்கிறது.
 சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதமேவம் து  வித்யாத்வைச்யாத்ததைவ ச
– என்பது மனுவின் வார்த்தை.
 சூத்திரர்கள் வேதம் கற்கக் கூடாது என்று மனு சொல்லியிருப்பதை மட்டும் எடுத்துக் கொள்கிறவர்கள்  , மேலே குறிப்பிட்டவற்றையும் பார்க்க வேண்டும். இவற்றிற்கிடையே முரண்பாடுகள் உண்டு அதைத் தீர்க்க ஏற்கெனவே நாம் சொன்ன மாதிரி மற்ற ஆதாரங்களைப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும் பொழுது பிறப்பினால் மட்டும் எவனும் எந்த வர்ணத்தையும் சார்ந்தவனாகி விடுவ இல்லை என்பது புரியும் ஒருவன் ஒரு வர்ணத்திலிருந்து மற்றொரு வர்ணத்திற்கும் மாறவும் முடியும் என்பது தெளிவாகும்.
அது மட்டுமல்ல வேதம் பயிலக் கூடாது என்ற தடை சூத்திரர்களுக்கு மட்டுமல்ல பிராமணர்களுக்கும் உண்டு.  நியமம் தவறி, பெயரளவில் பிராமணனாக வாழ்கிறவன், பெண்கள், சூத்திரர்கள் ஆகியோர் வேதம் பயிலக் கூடாது என்கிற விதிமுறையை பாகவத புராணத்தில் வியாஸர் எடுத்துச் சொல்கிறார். இதில் ஒன்று கவனிக்கத்தக்கது. வேதம் பயிலக் கூடாது என்கிற தடை-நியமம் தவறிய பிராமணனுக்குத்தானே தவிர,அப்படிப்பட்ட தடை க்ஷத்ரியனுக்கோ, வைச்யனுக்கோ அல்ல !
சூத்திரர்கள் வேதம் கற்கக்கூடாது என்று கூறுகிற மனு ஸ்ம்ருதியே கூட அவர்களுக்கு வேறு எந்தக் கல்வியையும் தடைசெய்யவில்லை. வேறு தொழிலையும் தடுக்கவில்லை. பிராமணனுக்கு விதிக்கப்பட்ட மாதிரி வறுமையும் சூத்திரர்களுக்கு விதிக்கப்பட வில்லை. ‘ஒரு பிராமணன் வீட்டிற்கு வைச்யர்களும் சூத்திரர்களும் விருந்தாளிகளாக வந்தால், அமர்த்தி உணவளிக்க வேண்டும்’  என்று மனு ஸ்ம்ருதி சொல்கிறது.
 வைச்ய சூத்ராவபி ப்ராப்தெள குடும்பேதிதிதர்மினெள
போஜயேத்ஸஹ   ப்ருத்யை : தாவான்ருசம்ஸ்யம்  ப்ரயோஜயன்
என்று இது மனு ஸ்ம்ருதியில் சொல்லப் பட்டிருக்கிறது .
மேலே போவதற்கு முன்பாக, மனு ஸ்ம்ருதியைப் பற்றி ஒரு வார்த்தை அது வர்ணப் பிரிவுகளைப் பற்றி மட்டும் பேசுகிற நூல் அல்ல. கல்வி, திருமணம், குற்றங்கள், குற்ற விசாரணை, சாட்சியம் அளிப்பதற்கான வழிமுறைகள், சொத்துரிமை, அரசனின் கடமைகள், ஒற்றர்கள்…. என்று பல விஷயங்களைப் பற்றி விரிவாகக் கூறுகிற நூல் அது அதைப் படிக்கும் பொழுது, இத்தனை விஷயங்களை, இவ்வளவு நுணுக்கமாக, எவ்வளவு காலத்திற்கு முன்பாகவே சிந்தனை செய்திருக்கிறார்கள் என்ற வியப்பு மேலிடுகிறது.
இது புறமிருக்க, ஒரு வர்ணத்தவர் மற்றொரு வர்ணத்திற்கு மாறலாம் என்பதைப் பார்த்த நமது மனதில், ஏன் பலரும் பிராமணனாக மாறி விட வில்லை? என்ற கேள்வி எழலாம். எதற்காக மாற வேண்டும்? கடித்ரியனுக்கு அரசுப் பதவிகள் இருந்தன;
வைச்யனுக்கு வர்த்தகம் இருந்தது. சூத்திரனுக்கு ‘ பலவித தொழில்கள் இருந்தன. பிரமணனுக்கோ வேதம் ஓதுவது தான் முக்கிய கடமையாக இருந்தது. வறுமைதான் அவனுக்கு விதிக்கப்பட்டது. நியமம் தவறியவனாக இருந்தால், தானம் வாங்கக்கூட  அருகதையற்றவன் என்ற நிலை அவன் மீது  சுமத்தப்பட்டது.அப்படியிருக்க பிராமணனாக மாற ஒருவன் துடிக்க வேண்டிய அவசியம் எதுவும் இருக்கவில்லை என்பது கண்கூடு.
இன்று இட ஒதுக்கீடு முறை இருக்கிறது. கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சில பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் முன்னுரிமை தரப் படுகிறது. ஆனால் அவர்களுக்கு எந்தக்கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அன்று வேதம் கற்பதில் க்ஷத்ரியர்களோடும், வைச்யர்களோடும் சம உரிமையும் – வேதம் கற்பிப்பதில் தனி உரிமையும் பெற்றிருந்த பிராமணனுக்கோ, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இன்றைய சமுதாயத்தில், இடஒதுக்கீடு பெறுகிற பிரிவுகளில் ஒருவன் விரும்பி சேர்ந்து விட முடியாது அப்பிரிவுகளில் பிறந்திருந்தால்தான் உண்டு. ஆனால் அன்றோ, ஒருவன் விரும்பினால் பிராமணனும் ஆகலாம் என்ற நிலை இருந்தது. இதை மனு ஸ்ம்ருதியில் பார்த்தோம் மற்ற ஆதாரங்களிலும் கண்டோம் .
சரி, வேதம் ஓதுவதும், கற்பிப்பதும் ஏன் முக்கியத்துவம் பெற்றன? வேதங்கள் அவ்வளவு புனிதமானதாகக் கருதப்பட்டன. ஆனால் அவையோ எழுத்துவடிவத்தில் கிடையாது.வாய் மூலம் சொல்லக் கேட்டுத்தான் ஒருவன் பயில வேண்டும். அதில் எழுத்துப்பிழை வந்தாலோ, ஸ்வரம் தவறிப் போனாலோ அர்த்தம் அனர்த்தமாகி விடும். அதனால் தான் அதைக் கற்பதற்கும், போதிப்பதற்கும் பல கடுமையான விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன.
இப்படி இருந்தும் கூட, இந்த விதிமுறைகள் எல்லாம் மாறக் கூடியவையே என்றும் அப்போதே கூறப்பட்டிருக்கிறது. ‘காலத்திற்கும், இடத்திற்கும் தக்கவாறு தர்மம், அதர்மமாகிறது; அதர்மமோ தர்மமாகி விடுகிறது. காலம்,இடம் ஆகியவற்றின் வன்மை அத்தகையது’ என்று யுதிஷ்டிரனுக்கு பீஷ்மர் செய்யும் உபதேசம் மஹாபாரதத்தில் வருகிறது.
ஒரு காலத்தில் தர்மமாக இருந்த வழிமுறை, பிற்காலத்தில் மக்களால் வெறுக்கப்படுகிற நிலையை அடைந்தால், அந்த தர்மத்தைக் கை விட வேண்டும் என்று யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதி கூறுகிறது.
ப்ரஹஸ்பதி இயற்றிய தர்ம சாத்திர நூலோ மேலும் ஒரு படி போகிறது. ‘சாத்திரத்தின்படி மட்டுமே ஒரு விஷயத்தைப் பார்க்கும் போது தவறுகள் நேர்ந்துவிடலாம் நியாயமான காரணத்திற்கு உட்படாத அம்மாதிரி முடிவு தர்மத்திற்கு இழுக்கு.
ஆகையால், நியாய சபையில் எடுக்கப்படும் முடிவுகள் சாத்திரத்தையொட்டி மட்டுமல்லாமல், நடைமுறை காரண காரியங்களை ஒட்டியும் அமைய வேண்டும் என்று அவருடைய நூல் கூறுகிறது.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது, அன்று இருந்த நியாய உணர்வுதானே பளிச்சென தெரிகிறது? இப்படிப்பட்ட அன்றைய சிந்தனைதான் பிராமணீயம் என்றால், அதை வெறுப்பானேன்?

வர்ண வேறுபாடு? - சாந்திபர்வம் 

 

The distinction between varnas! | Shanti-Parva-Section-187 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 15)

%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF
பிருகு {பரத்வாஜரிடம்}, "பிரம்மன் முதலில் பிரஜாபதிகள் {படைப்பின் தலைவர்கள்} என்றழைக்கப்பட்ட சில பிராமணர்களைப் படைத்தான். நெருப்புக்கோ, சூரியனுக்கோ ஒப்பான காந்தியைக் கொண்ட அவர்கள், முதலில் தோன்றியவனின் {பிரம்மனின்} சக்தியின் மூலம் உண்டாக்கப்பட்டார்கள்.(1) பிறகு அந்தப் பலமிக்கத் தலைவன் {பிரம்மன்}, உயிரினங்கள் சொர்க்கத்தை அடையும்பொருட்டு, வாய்மை, கடமை, தவம், அழிவில்லா வேதங்கள், அனைத்து வகைப் பக்திச் செயல்பாடுகள், தூய்மை, ஆகியவற்றை (உயிரினங்கள் பயில்வதற்காகப்) படைத்தான்.(2) ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவனே, அதன் பிறகு, தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், தைத்தியர்கள், அசுரர்கள், பெரும் நாகர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பாம்புகள், பிசாசங்கள், மனிதர்களில்(3) நான்கு பிரிவினரான பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோரும், படைப்பில் இருக்கும் பிற வகையைச் சார்ந்தவையும் படைக்கப்பட்டன.(4) பிராமணர்கள் வெண்ணிறத்தையும், க்ஷத்திரியர்கள் சிவப்பு நிறத்தையும் , வைசியர்கள் மஞ்சள் நிறத்தையும் அடைந்தனர், சூத்திரர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிறம் கருப்பாகும்[1]"என்றார் {பிருகு}.(5)
 


[1] இங்கே சொல்லப்படும் வண்ணம் அல்லது நிறம் என்பது பண்புகளையே குறிக்கும் என உரையாசிரியர் விளக்குகிறார். இங்கே சொல்லப்படும் நோக்கம் என்னவென்றால், பிராமணர்கள் நற்பண்பை (சத்வ குணத்தைக்) கொண்டனர்; இரண்டாவது வகையின் ஆசை (ரஜோ குணத்தைக்) கொண்டனர்; மூன்றாவது வகையினர் முதலிரண்டின் கலவையான, அதாவது நற்குணம் மற்றும் ஆசை குணத்தின் (சத்வ மற்றும் ரஜோ குணத்தின்) கலவையான நிறத்தை அடைந்தனர்; அதே வேளையில் எஞ்சிய பண்பான இருள் (தமோ குணத்தை) கீழ்வகை அடைந்தது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். இந்தப் பகுதியின் ஏழாம் சுலோகம் இவ்விளக்கத்தை உறுதி செய்கிறது.
 
பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, "(மனிதர்களின்) நால்வகையினருக்கிடையிலான வேறுபாடு வண்ணங்களால் (பண்புகளால்) மட்டுமே உண்டானவை என்றால், நால் வகையும் ஒன்றுகலந்ததாகவே தெரிகிறது.(6) காமம், கோபம், அச்சம், பேராசை, துயரம், கவலை, பசி, களைப்பு, ஆகியன மனிதர்கள் அனைவரையும் வசப்படுத்தி அவர்களில் நீடித்திருக்கின்றன. பண்புகள் உடைமையால் எவ்வாறு மனிதர்களை வேறுபடுத்திப் பார்க்க முடியும்?(7) மனிதர்கள் அனைவரின் உடல்களும், வியர்வை, சிறுநீர், மலம், சளி, கபம், குருதி ஆகியவற்றை வெளியிடுகின்றன. பிறகு, மனிதர்களை எவ்வாறு வர்க்கங்களாகப் பிரிக்க முடியும்?(8) அசையும் பொருட்கள் முடிவிலா எண்ணிக்கையில் இருக்கின்றன; அசையாத பொருட்களைக் கொண்ட இனங்களும் எண்ணற்றவையாக இருக்கின்றன. இவ்வளவு பெரிய வேற்றுமைகளைக் கொண்ட பொருட்களை {மனிதர்களை} எவ்வாறு வர்க்கங்களாகப் பிரிக்க முடியும்?" என்று கேட்டார் {பரத்வாஜர்}.(9)
 
பிருகு {பரத்வாஜரிடம்}, "வெவ்வேறு வகைகளுக்கிடையில் உண்மையில் எந்த வேறுபாடும் கிடையாது. பிரம்மனால் (சமமாகப்) படைக்கப்பட்ட மனிதர்கள், தங்கள் செயல்பாடுகளின் விளைவால், பல்வேறு வகையினராகப் பிரிந்திருக்கிறார்கள்.(10)ஆசைகளிலும், இன்பங்களை அனுபவிப்பதிலும் ஈடுபாடுடையவர்களும், கடுமை மற்றும் கோபம் என்ற பண்புகளைக் கொண்டவர்களும், துணிவுமிக்கவர்களும், பக்தி மற்றும் வழிபாட்டுக் கடமைகளில் கவனமில்லாதவர்களும், ஆசைப் பண்பை {ரஜோ குணத்தைக்} கொண்டவர்களுமான பிராமணர்களே க்ஷத்திரியர்களானார்கள்.(11) மேலும் தங்களுக்கென விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாமல், நற்பண்பு மற்றும் ஆசைப்பண்பு ஆகிய இரண்டையும் கொண்டவர்கள், கால்நடை வளர்த்தல் மற்றும் உழவு என்ற தொழில்களை ஏற்று வைசியர்களானார்கள்.(12) பொய்மையில் விருப்பமுள்ளவர்களும், பிற உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிப்பவர்களும், பேராசை கொண்டவர்களும், வாழ்வதற்காக அனைத்து வகைச் செயல்களிலும் ஈடுபடுபவர்களும், ஒழுக்கத் தூய்மை தவறியவர்களும், இருளின் பண்பைக் கொண்டவர்களுமான பிராமணர்களே சூத்திரர்களானார்கள்.(13) இத்தொழில்களால் பிரிக்கப்பட்டவர்களும், தங்கள் வகையில் இருந்து வீழ்ந்தவர்களுமான பிராமணர்களே, மூன்று பிற வகையினரானார்கள். எனவே, பக்தி தொடர்புடைய கடமைகள் அனைத்தையும், வேள்விகளையும் செய்ய நான்கு வகையைச் சார்ந்த அனைவருக்கும் எப்போதும் உரிமையிருக்கிறது.(14) முதலில் சமமாகவே பிரம்மனால் படைக்கப்பட்டவர்களான இந்த நால்வகையைச் சேர்ந்த அனைவருக்கும், (வேதங்களில் உள்ள) பிரம்ம வார்த்தைகள் {அவற்றை அவர்கள் அனைவரும் பின்பற்ற} விதிக்கப்பட்டன. பலர் பேராசையால் மட்டுமே வீழ்ந்து, அறியாமை கொண்டவர்களானார்கள்.(15)
 
பிரம்மம் குறித்த சாத்திரங்களில் எப்போதும் அர்ப்பணிப்புடையவர்களும், நோன்புகள் மற்றும் கட்டுப்பாடுகளில் எப்போதும் கவனம் கொண்டவர்களுமான பிராமணர்களே, பிரம்மம் என்ற கருத்தைப் புரிந்து கொள்ள வல்லர்களாக இருக்கிறார்கள்.(16) பிராமணர்களாக இல்லாதவர்கள், படைக்கப்பட்ட அனைத்தும் உயர்ந்த பிரம்மமே என்பதைப் புரிந்து கொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள். வீழ்ந்தவர்களான இவர்கள், பல்வேறு (தாழ்ந்த) வகைகளின் உறுப்பினர்களாகின்றனர்.(17) அறிவொளியை இழந்து, கட்டுப்பாடற்ற ஒழுக்க நடைக்குப் பழகும் இவர்கள், பிசாசங்கள், ராட்சசர்கள், பிரேதங்கள் மற்றும் பல்வேறு மிலேச்ச இனங்களில் பிறப்பை அடைகின்றனர்.(18) தொடக்கத்தில் (பிரம்மனின் மனோ விருப்பத்தால்) உயிருடன் எழுந்த பெரும் முனிவர்கள், தங்கள் தவங்களின் மூலமாக, விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதில் அர்ப்பணிப்பு கொண்டவர்களும், அழிவற்ற வேதங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளில் பற்றுடையவர்களுமான மனிதர்களை அடுத்தடுத்து உண்டாக்கினர்.(19) யோகத்தைப் புகலிடமாகக் கொண்டவனும், மனமே ஆனவனுமான ஆதி தேவனிலிருந்து {பிரம்மனில் இருந்து} எழுந்து, பிரம்மத்தையே அடிப்படையாகக் கொண்டு, அழிவற்ற, சிதைவற்ற மற்றொரு படைப்பும் இருக்கிறது[2]" என்றார் {பிருகு}.(20)
 
[2] இங்கே விதிக்கப்படும் வேறுபாடு இவ்வாறே தெரிகிறது: அழிவில்லா படைப்பானது, யோகத்தின் காரணமாகவோ, ஆதி தேவனின் மனச் செயல்பாட்டாலோ விளைந்தது. நாம் காணும் படைப்பானது, முதலில் படைக்கப்பட்ட அந்தத் தவசிகளின் விளைவால் உண்டானது. ஒருவேளை, இங்கே சொல்லப்படுவது, உயிரில் இருந்து உண்டாகும் உயிர் மற்றும் அடிப்படை பொருளுடன் கூடிய வெளி ஆகியவற்றைக் கொண்ட உயிர் கொள்கையானது தேவனின் மனோவிருப்பத்தால் விளைந்தது; அந்தக் கொள்கைகளுடைய செயல்பாட்டாலும், அடிப்படை பொருள் மற்றும் வெளியாலும் விளைந்து, புலப்படக்கூடிய பொருட்களாகத் தெரியும் அனைத்தும் அந்தத் தவசிகள் சம்பந்தப்பட்டது என்றிருக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "தர்மானுஷ்டானத்தை முக்கியகாரணமாகக் கொண்டதும், மனத்தான் செய்யப்பட்டதுமான அந்த ஸ்ருஷ்டியானது ஆதி தேவரானப்ரம்மதேவரிடிருந்து உண்டானதும், பிரம்மத்தை மூலமாகக் கொண்டதும் அழிவில்லாததும், குறைவில்லாததுமாயிருக்கிறது" என்றிருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 188ல் உள்ள சுலோகங்கள் : 20

No comments:

Post a Comment