Sunday, August 12, 2018

திருமண மந்திரங்களும் அவற்றின் அர்த்தமும்

திருமண மந்திரத்தில் சொற்பிழை, பொருட்பிழை இரண்டும் இருக்கிறது.
மந்திரங்களை மட்டந்தட்டுவதில் உள்ள உங்கள் ஆர்வம் புரிகிறது. அப்படி மட்டம் தட்டுவதற்காகவே நீங்கள் மேற்கோள் காட்டும் மந்திரங்களை முக்கால் மந்திரங்களாக எழுதமாமல் சொற்பிழை இல்லாத முழுமந்திரங்களாக எழுத முயற்சி செய்யுங்கள். :)
மேலுள்ள மந்திரத்தின் சரியான பிரதி கீழே உள்ளது (உச்சரிக்கும் வசதி கருதி ஆங்கிலத்திலே தருகிறேன்)
Somah prathamo vivide
Gandharvo vivida uttarah
Trtiyo Agnistepatih
Turiyastemanusyajah.
Somo dadad gandharvaya
Gandharvo dadadagna; ye
Rayincapputramscadad
Agnirmahyamatho imam
- Rigveda, 10. 85, 40. 41.
இதன் பொருள்:
"முதலில் சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான்
பின் கந்தர்வன் உன்னை பாதுகாத்தான்
மூன்றாவதாக அக்னி உன்னை பாதுகாத்தான்
நான்காவதாக மனிதனாகிய நான் உன் பாதுகாவலன் ஆகிறேன்"
இதன் உட்பொருள்:
1. ஒரு பெண் குழந்தை பிறந்து தானாக ஆடைகளை அணியும் பருவம் (4 - 5 வயது) வரை சந்திர ஒளியின் மென்மை, குளிர்மையை ஒத்த குணங்களை பெற்று வளர்கிறது. ஆகவே இப்பருவம் சந்திரனின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பருவம் எனப்படுகிறது
2. கந்தர்வன் என்பது இசைக்கும், கேளிக்கைக்கும் அழகியலுக்கும் அதிபதியாக சொல்லப்படும் தேவதை.
ஒரு பெண்குழந்தையின் 5 - 11 வயது காலம் என்பது குறும்பும், அழகும் நிரம்பி வழிய, கள்ளம் கபடம் இல்லாமல் துள்ளி திரியும் காலம். ஆகவே இது கந்தர்வனின் ஆதிக்கத்தில் (பாதுகாவலில்) இருக்கும் பருவம் எனப்படுகிறது
3. அதன் பின் 11 - 16 வயது பருவ காலம், உடலில் ஹோமோன்களின் மாற்றத்தால் உடலமைப்பு மெல்ல மாற உஷ்ண அழுத்த மாற்றங்கள் ஏற்பட்டு பூப்படையும் பருவம். காமவெப்பம் மெல்ல உடலில் தொற்றிக்கொள்ளும் மங்கை பருவம். ஆகவே இது அக்னி (வெப்பம்) யின் ஆதிக்கத்தின் கீழ் வரும் பருவம் எனப்படுகிறது
இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு தேவதைகளின் அருளால் பெண்மைக்குரிய அம்சங்களை எல்லாம் பெற்று மங்கையாய் அமர்ந்திருக்கும் உனக்கு குறைவிலா நலமே தர இப்போது மானிடன் நான் உன் பாதுகாவலன் ஆகிறேன். இது தான் இந்த வேதமந்திரத்தின் உட்பொருள்.
பதி என்னும் சொல்லின் பொருள் பாதுகாவலன் என்பதாகும். அதற்கு பெண்ணை புணர்பவன் என்ற அர்த்தம் இல்லை. அப்படி என்றால் பெண்ணை வன்புணர்வு செய்பவனும் பதி ஆகிவிடுவான்.
ஒரு பெண் உருவாக 3 தேவதைகளின் அருள் தேவைப்படுகிறது. 3 தேவதைகளின் அம்சமாய் விளங்கும் பெண் மானிடனான உன்னை இன்று அடைகிறாள். அத்துணை உயர்வான அவளுக்கு நீ காலம் முழுவதும் துரோகம் செய்யாது கண் போல் காக்க வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது (மணமகன் எடுக்கும் சத்தியபிரமாண மந்திரங்களிலும் இந்த உறுதிமொழி உள்ளது)
பதி என்ற சொல்லுக்கு பெண்ணை புணர்பவன் என்ற ஒரு தவறான அர்த்தத்தை தோற்றுவித்துவிட்டு, ஒரு உயர்வான அர்த்தம் தரும் மந்திரத்தின் அர்த்த்த்தை அப்படியே தலை கீழாக மாற்றுபவர்களை பார்த்து பரிதாபப்படுவதை விட வேறென்ன செய்ய முடியும்.

 பாணிக்ரஹணம் எனப்படும் கைத்தலம் பற்றும் சடங்கின் போது மணப்பெண்ணை நோக்கிச் சொல்லப் படும் ஒரு மந்திரம்:

सोम: प्रथम: विविदे गन्धर्वो विविद उत्तर: ॥
तृतीयो अग्निस्ते पति: तुरीयास्ते मनुष्यजः ॥

ஸோம: ப்ரதம: விவிதே கந்தர்வோ விவித உத்தர:
த்ருதீயோ அக்னிஸ்தே பதி: துரீயாஸ்தே மனுஷ்யஜ:
(ரிக்வேதம் 10.85.40)


எல்லா வேதமந்திரங்களையும் போல, இதிலும் “தேவர்கள்” என்பவர்கள் ஆசாமிகள் அல்லர். அகமும், புறமும் உள்ள தெய்வ சக்தியின் குறியீடுகள். “சோமன்” என்பது எல்லா உயிர்களிலும் அடங்கியிருக்கும் பரம்பொருளின் ஸ்வரூபமான ஆனந்தம் என்ற தத்துவத்தைக் குறிப்பது, கந்தர்வன் என்பது மனத்தில் காமம் என்ற விதையை ஊன்றும் இச்சா தத்துவம். அக்னி என்பது தெய்வீக சக்தி ஓங்கி வளர்ந்து தன் உன்னத நிலையை எய்துவதன் குறியீடு. இந்த தெய்வ சக்தியே இகம்,பரம் என்ற இரண்டு விதமான சுகங்களையும் நோக்கி மனிதனை இட்டுச் செல்கிறது.

இதை ஒரு அழகிய கவிதையாகக் கண்டு அனுபவிக்கவும் இடமிருக்கிறது,

“சிறுமியாக இருக்கையில் முதலில் நீ நிலவைக் கண்டு மையல் கொண்டாய்
பின்னர் மேகங்களில் வழிந்தோடும் இசையில் மனம் பறிகொடுத்தாய்
பின்னர் ஆசைத் தீ உன்னைப் பற்றியது.
ஓ பெண்ணே
நான்காவதாக மனிதனாகிய நான் உன்னை வரிக்கிறேன்.
ஏற்றுக் கொள்.”

சோமன், நிலவு, மனம், ஆனந்தம் இவை அனைத்தும் வேதப் படிமத்தில் தொடர்புடையவை. கந்தர்வர்கள், இசை, கலைகள், மேகங்கள் இவையும்.

தத்துவமும், கவித்துவமும் ததும்பும் அழகிய மொழியில் சொல்லப் பட்ட இந்த மந்திரத்தில் அருவருப்பைக் காணும் திராவிட பகுத்தறிவு ஒருவிதமான மனப்பிறழ்வு நிலை என்று தான் கூற வேண்டும்.

பெண் இழிவானவள் என்று கூறவந்தால் தேவர்கள் அவளைத் தள்ளினார்கள் என்றல்லவா இருக்கவேண்டும்? ஆனால் இங்கே ஸ்வீகரித்தார்கள் என்று வருகிறது. மேலும் இந்த ஒற்றை மந்திரத்தை வைத்து ஒன்றும் சொல்ல முடியாது. திருமணச் சடங்கில் உள்ள எல்லா மந்திரங்களும் பெண்ணை மிக உயர்வாகக் கூறுகின்றன.


“பெண்ணே, அர்யமாவும் பகனும் உன்னை ஆசிர்வதிக்கட்டும், என் குலம் விளங்க வரும் வரப்பிரசாதம் நீ”

“வேதத்தை அறிந்த பகன் முதலியோர், இல்லறம் என்ற புனிதமான விரதத்தை ஏற்றனர். உன் கரம் பிடித்த நானும், அந்த வம்சத்தைச் சேர்ந்தவனானேன்.”

“ஏழு அடிகள் என்னுடன் நடந்துவந்த நீ என் உயிர்த் தோழியாகி விட்டாய். நீ ரிக், நான் சாமம். நீ பூமி, நான் ஆகாயம். நீ சொல், நான் பொருள். நீ ஆத்மா, நான் மனம். இனிய சொற்களை உடையவளே, என்னைப் பின் தொடர்ந்து வந்த நீ என் வம்சத்தை விருத்திசெய்வாய்”

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

சில வருடங்கள் முன்பு, சேலத்தில் அதிகமாக வசிக்கும் ஒரு சமூகத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவரின் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். திருமணத்திற்கு முந்தைய நாள் நிச்சயதார்த்தத்தின் போது ஒரு சடங்கு. சமூகப் பெரியவர் நடுவில் வந்து அமர்ந்தார். மணமகன், மணமகள் வீட்டார் இருபுறமும். சடங்கு ஆரம்பித்தது. மணமகனின் தந்தை மகளின் தந்தையிடம் ஒரு ரூபாய் கொடுத்தார், அதை அவர் மகளின் தாயிடம் கொடுத்தார், பெரியவர் சொன்னர் “இது மகளைப் பெற்று வளர்த்ததற்காக”. அடுத்தது இன்னொரு ரூபாய், “இது பாலூட்டியதுக்காக”. அப்புறம் ஒரு ரூபாய் “இது சீராட்டியதற்காக”. இப்படி ஒரு பதின்மூன்று ரூபாய் வரை போயிற்று. இந்தப் பரிமாற்றம் முடிந்ததும் பத்திரிகை வாசிக்கப் பட்டது. பக்கத்தில் இருந்த பெரிசு ஒருவர் “அந்தக் காலத்தில பதிமூணு பணம் அப்படின்னு குடுப்பாங்க, பெரிய தொகை அது.. மகளைப் பெத்துத் தந்ததுக்கான கடனைத் தீர்க்கணும் இல்லையா” என்று பேசிக் கொண்டிருந்தார்.

கிறிஸ்தவ திருமண நிச்சயதார்த்தங்களில், மணப்பெண் கையில் அணியும் மோதிரம் எதைக் குறிக்கிறது? அவள் முதலில் கர்த்தருக்கு மணமுடிக்கப் பட்டு பின்பு மனிதனுக்கு மனைவியாக வருகிறாள் என்று சொல்லுவார்கள். கிறிஸ்தவ கன்யாஸ்தீரிகள் தங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளும் சடங்கின் போது ஏசுவின் மணமகள்கள் (Brides of Jesus) ஆவதாகவே கூறுவார்கள்.

இது போன்ற பல சடங்குகள் தமிழ்நாட்டின் பல சமூகங்களின் திருமணங்களில் உள்ளன. இதில் எல்லாம் எந்த அருவருப்பும் தென்படவில்லையா? ஆரிய, வந்தேறி குணங்கள் எதுவும் தென்படவில்லையா? பகுத்தறிவுப் பகலவனுக்கே வெளிச்சம்.

நம் ஒவ்வொரு தேஹத்திலும், அங்கங்களுக்குள்ளே அவை ஒவ்வொன்றுக்கும் அதிதேவதையாக ஒரு தேவன் இருக்கிறான். கண்ணில் ஸூரியன், கையில் இந்திரன் என்றிப்படி நமக்குள் ஆத்யாத்மிகமாக தேவ சக்திகள் இருக்கின்றன. இது தவிர ஒவ்வொரு வயோவஸ்தையிலும் (வயசுக் கட்டத்திலும்) ஒவ்வொரு தேவதைக்கு நம் மேல் ஆதிக்கம் இருக்கிறது.

இவ்விதத்திலே ஒரு பெண்ணானவள் பிறந்ததிலிருந்து வஸ்திரம் கட்டிக் கொள்ளத் தெரிகிற வரையில் ‘ஸோமன்’ என்ற தேவதையின் ஆதீனத்தில் இருக்கிறாள். (புருஷர்கள் கட்டிக்கொள்ளும் வேஷ்டிக்கே ‘சோமன்’ என்று பேர் இருக்கிறது) அதற்கப்புறம் ரிதுவாகும் வரையில் அவள் கந்தர்வனின் ஆதீனத்தில் இருக்கிறாள். வசது வந்த திலிருந்து மூன்று வருஷம் அக்னியின் ஆதிக்கத்தில் இருக்கிறாள். ஸோமன் என்றால் சந்திரன். ஸோமன் ஒரு பெண்ணை ஸ்வீகரித்துக் கொண்டிருக்கிற குழந்தைப் பிராயத்தில் அதனிடம் நிலா மாதிரியான குளிர்ச்சி இருக்கிறது. அப்புறம் கந்தர்வன் என்ற உல்லாஸ ஜீவியான, நல்ல ஸுந்தரமான தேவதையிடம் இருக்கிற சிறுமிக்கு லாவண்யம் விசேஷமாக இருக்கிறது. பிறகு அக்னியின் அதிகார காலம் உண்டான போது காமாக்னியை ஏற்படுத்தும் சக்தி உண்டாகிறது. மூன்று தேவதைகளுடைய அதிகாரத்துக்கு இப்படி லௌகீகமாக அர்த்தம் பண்ணுவதுண்டு. இது இருக்கட்டும்.


வடமொழி மந்திரங்களுக்கு நான் விளக்க எழுதுவதால் தமிழர்கள் நிச்சயம் வடமொழி மந்திரங்களை சொல்லித்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுவதாக யாரும் கருதி விடக்கூடாது.
தமிழில் திருமணங்களில் சொல்லக்கூடிய அழகிய மந்திரங்கள் நிச்சயம் இருக்கும். அது மட்டும் அல்ல இந்த வேதப் பிராமணங்களை தமிழிலேயே சொல்லும் போது எம்மக்களுக்கு இன்னும் தெளிவாகவே தெரியும்.
எனது திருமணத்தின் போது வேதமந்திரங்கள் ஓதப்படும். ஆனால் முக்கியமான பிரமாணங்களை தமிழில் தான் எடுக்க திட்டமிட்டுள்ளேன்.
அது மட்டும் அல்ல. வேதங்களே கூட மேற்சொன்ன மந்திரங்கள் ஓதாமல் திருமணம் செய்யவே கூடாது என்று சொல்லவில்லை. வேதங்களில் சொல்லப்பட்ட 8 வித திருமணங்களில் ஒன்று தான் இந்த பிரம்மமுறை திருமணம். அத்தோடு, மந்திரங்கள் ஓதி செய்யப்படும் இந்த பிரம்மமுறை திருமணங்களில் பெண்வீட்டாரிடம் இருந்து எந்த சீதனமும் பெற்றுக்கொள்ளக் கூடாது என்றே சொல்லப்பட்டுள்ளது

No comments:

Post a Comment