Tuesday, March 4, 2014

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: புலான்மறுத்தல்
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. -குறள் 259
தெய்வப் புலவர் திருவள்ளுவர் தந்தருளிய திருக்குறளில் 1330 குறட்பாவில் மிக அதிகமானமுறை பலப்பல தமிழ் அறிஞர்களால் தவறக பயன்படுத்தும் குறள், மேலுள்ளதே. நாம் இக்குறளின் பல்வேறு உரைகளைப் பார்ப்போம்.மு.வ உரை:நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.
பரிமேலழகர் உரை:அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் – தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும், ஒன்றன்உயிர் செகுத்து உண்ணாமை நன்று – ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று. (அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.).
மணக்குடவர் உரை:நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று.
Translation: Than thousand rich oblations, with libations rare,
Better the flesh of slaughtered beings not to share.
Explanation: Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc., in a thousand sacrifices.
புலான் மறுத்தல் அதிகாரத்தில் இது வந்துள்ளது. ஆயிரம் வேள்விகளை செய்வதைவிட உயிரை கொன்று புலால் சாப்பிடாதது நல்லது. இங்கு புலால் மறுத்தலை வலியுறுத்துகிறார்.
வள்ளுவப் பெருந்தகை, தான் ஏற்றுள்ள அதிகாரத்தின் கருப்பொருளை- சிறிய பொருள் கொண்டு ஆரம்பித்து உயர்ந்ததோடு முடிப்பார்.
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். குறள் 251
மு.வ உரை:தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?.
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. குறள் 255:
மு.வ உரை: உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். குறள் 260
மு.வ உரை:ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
கடைசி குறட்பாவில், கொல்லாமை – புலால் மறுத்தவரை- தெய்வத்துக்கு சமமாக அனைவரும் வணங்குவர் என்கிறார்.
ஒருவன் கடவுள் அடைய வேளிவிகளை செய்ய வேண்டும், அது உயர்ந்த மேன்மையான ஒன்று, அதிலும் மேன்மையானது கொல்லாமை- புலால் மறுத்தல் என்பதை தெளிவாக சொல்ல இவ்வழியில் சொல்கிறார்.
மனுஸ்ம்ருதியில் இதே பொருளுடன் உள்ள ஒரு அறிவுரையை மேலும் மேன்மைப் படுத்தி திருவள்ளுவர் இங்கே தந்துள்ளார்.5.53. He who during a hundred years annually offers a horse-sacrifice, and he who entirely abstains from meat,obtain the same reward for their meritorious (conduct).
வேள்வியை உயர்த்தி தான் இங்கு சொல்கிறார்.

2 comments:

  1. அருமை சார்.

    இக்குறளை அனர்த்தம் செய்து- வள்ளுவர் வேத நெறிக்கு எதிர்ப்பாளர் என உளறுபவர் என்றும் உள்ளனர்.

    முனுசாமி

    ReplyDelete
  2. "அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத் துண்ணாமை நன்று"
    உவமேயம், உவமை இரண்டிலே உவமையே உயர்ந்தது என்பது இலக்கணம் காட்டும் வழி. தொல்காப்பிய உவமயியலின் நூற்பா ஒன்று- "உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை"
    தொல்காப்பிய நூற்பா குறிப்பது -
    உவமைக்கு வைப்பது உயர்ந்த பொருளாக வேண்டும் என்பதே. கரிய நிறத்திற்கு உவமையாக ஓர் பூவினையோ, மேகத்தினையோ, யானையையோ காட்டலாம்; ஆனால் கரிய கழிவுநீரைக் காட்டலாகாது.
    உயர்ந்த பொருளையே ஒப்புமைப்படுத்த வேண்டும் -
    அரிமா அன்ன அணங்குடைத் துப்பு – வினை உவமம் (வலிமையில் அரிமா உயர்ந்தது)
    மாரி அம்பின் மழைத்தோல் சோழர் – பயன் உவமம் (மாரி அம்பினும் உயர்ந்தது)
    கடல் கண்டு அன்ன கண் அகன் பரப்பு – வடிவு (கடல்பரப்பு உயர்ந்தது)
    பொன்மேனி – வண்ணம் (பொன்னின் வண்ணம் மேனி வண்ணத்தினும் உயர்ந்தது)
    உயர்ந்தவற்றின் மதிப்பைச் சொல்கையில் மிக உயர்வானவற்றை இணைத்துப்பேசுவது வள்ளுவம் பேணும் மரபும்கூட; இழிவான செயல்களைக் கூறுகையில் கடுமையான வார்த்தைப் பிரயோகத்தையும் அதில் காண்கிறோம்.
    ஆ காத்து ஓம்புதல் பேரறம் என்பதால் அதைச் சொல்கிறார்-
    ஆவிற்கு நீர்என் றிரப்பினும் நாவிற்
    கிரவின் இளிவந்த தில்.
    ஆவிற்கு நீர் என்று இரப்பினும் - தண்ணீர் பெறாது இறக்கும் நிலைமைத்தாயதோர் ஆவினைக் கண்டு,
    அறம் நோக்கி இதற்குத் தண்ணீர் தரல்வேண்டும் என்று இரந்து சொல்லுங்காலும்;
    இரவின் நாவிற்கு 'இளிவந்தது இல்' - அவ்விரவுபோல ஒருவன் நாவிற்கு இளிவந்தது பிறிது இல்லை.
    (ஆகாத்தோம்பல் பேரறமாகலின், 'ஆவிற்கு நீரளித்தல்' என்று உவமை காட்டினார்)
    வேள்வி மிக உயர்ந்தது என்பதால் ‘ அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்....’ என்றார்.
    வள்ளுவத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உவமைகள் .
    நுட்பமான உண்மைகளை விளக்கப் பொருத்தமான உவமை , எ. கா -
    "இனிய உளவாக இன்னாத கூறல்
    கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று"
    "ஊடி யவரை உணராமை வாடிய
    வள்ளி முதலரிந் தற்று"
    உயர்வானவற்றுக்கு , ஏற்கத்தக்கனவற்றுக்கு உயர்ந்த உவமை; தாழ்ந்தவற்றைக் குறிக்க மிகவும் தாழ்ந்த பொருள்களோடு உவமை. இதுவே வள்ளுவம் பின்பற்றும் முறை. கைம்மாறு கருதாமல் உதவும் பண்பாளர்களுக்கு மழை உவமையாகிறது.
    காமத்துப்பாலில் இன்பத்துக்கு மாலவனின் உலகு தரும் பேரின்பம் உவமையாகிறது.
    சில பாக்களில் மலர் கண்களுக்கு உவமையாகிறது.
    (குறள் 112,119,1231, 1142)
    பொருட்பெண்டிருக்குப் பிணமும், மக்கட் பண்பற்றவருக்கு மரமும், உலோபியின் செல்வத்துக்கு நச்சு மரமும் உவமைகளாயின -
    "பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
    ஏதில் பிணந்தழீஇ யற்று"
    "அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
    மக்கட்பண்பு இல்லா தவர்."
    "நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
    நச்சு மரம்பழுத் தற்று"
    உயிர்க்கொலை மறுக்கும் பேரறத்துக்கு உயர்ந்ததான வேள்வி எடுத்துக்காட்டப்படுகிறது 'கங்கையிற் புனிதமாய காவிரி' என்பதுபோல -
    "அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத் துண்ணாமை நன்று"
    'எண்ணில் கோடி இராமர்கள் என்னினும்
    அண்ணல் நின் அருளுக்கு அருகாவரோ' எனக் கம்ப ராமாயணம் பரதாழ்வானின் உயர் தகைமைகளைக் கோடி காட்டுவதற்குக் காப்பிய நாயகனான இராமபிரானையே எடுத்துக் கழிக்கிறது.
    "செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
    ஆன்றாரோ டொப்பர் நிலத்து."
    மிக உயர்ந்ததான செவியுணவுக்கு அவியுணவு உவமையாகிறது.
    வள்ளுவர் வேள்வியை மறுக்கும் சமண சமயத்தவராக இருந்தால் இவ்வாறு கூறுவாரா ?
    வேள்விகளை வள்ளுவம் ஏற்றுக்கொண்டுள்ளதா என்னும் ஐயம் தேவையற்றது; வேள்வியில் தரப்படும் அவியுணவு, மறை ஓத்து, வேள்விகளை மையமாகக்கொண்ட அறுதொழில் இவற்றை வள்ளுவம் மறுக்கவில்லையே !

    ReplyDelete