Thursday, July 9, 2026

சங்க இலக்கியங்களில் முருகன் வழிபாடு எம். சண்முகம் பிள்ளை

 

சங்க இலக்கியங்களில் முருகன் வழிபாடு

எம். சண்முகம் பிள்ளை

எம். சண்முகம் பிள்ளை, 1998 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-30 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற ஸ்கந்த முருகன் முதலாம் கருத்தரங்கில் வெளியிட்டது இந்த அறிக்கை. இந்தக் கட்டுரை 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 'ஜர்னல் ஆப் தி இன்ஸ்டிடியூட் ஆப் ஏஷியன் ஸ்டடீஸ்' என்ற பத்திரிகையில் வெளியாயிற்று.

  1. பொருளடக்கம்
  2. முருகனின் பிறப்பு
  3. முருகனின் திருமணம்
  4. முருகனின் ஆலயங்கள்
  5. பழங்குடியினர் வழிபாட்டு முறை
  6. முருக வழிபாட்டின் பரிமாண வளர்ச்சி

சமிஸ்கிருத வழிமுறையான பிராமண வழிபாட்டு

உடலில் உடுத்திய ஈரத் துணியுடன், இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு, கும்பிட்டவாறு, ஆறு அட்ஷர மந்திரத்தை உச்சரித்தபடி வாசனை மலர்களை தூவி முருகனை பிராமணர்கள் வழிபட்டார்கள். (Muruku. 184-189). மேரு மலைப் போல உள்ள திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் பாண்டிய மன்னனும் தனது சுற்றார் மற்றும் பிற மக்களுடன் வந்து முருகனை வணங்குவார். முருகனின் ஆலயத்தைக் கோட்டம் என்று, அதாவது முருகன் கோட்டம் என்று கூறுவார்கள் (Puram. 299:6).

மதுரையில் இருந்து பரம்குன்றத்துக்குச் செல்பவர்கள் பூஜைக்கான அனைத்துப் பொருட்களையும்- சந்தனம், ஊதுபத்தி, காற்றினால் அணையாமல் இருக்கும் தீபம், மணமுள்ள மலர்கள், முளவம் , மணி , கயிறு , மயில் , கோடரி , பிணிமுகம் போன்றவற்றை தம்முடன் எடுத்துச் செல்வார்கள் (Paripatal.17:1-8). பரிபாடலில் உள்ள பதினேழாம் செய்யுள் முருகன் அமர்ந்துள்ள மரமாக கருதப்படும் கடம்பு மரத்தையும் அவர்கள் வணங்குவார்கள் என்று கூறி உள்ளது (Kurinci. 176-177). காற்றோடு சேர்ந்து வரும் ஊதுபத்தி மற்றும் மலர்களின் ரம்யமான வாசனை முருகன் எங்கெல்லாம் உள்ளாரோ அங்கெல்லாம் அவரை தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் (Paripatal.14:19-20; 18:52-53; 21:50-51). பக்தர்கள் அவருடைய பல அவதார மகிமைகளைப் போற்றிப் பாடுவார்கள். தலைக்கு மேல் கைகளைக் தூக்கி கூப்பி வணங்குவதும், குனிந்து அவர் பாதங்களைத் தொட்டும், அவருக்கு முன்னால் பூமியில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவதும், அவரை வார்த்தைகளால் போற்றி துதித்தபடிம் வணங்குவார்கள். அவர்கள் கூறும் மந்திரங்களை முருகாற்றுப் படையில் குறிப்பிட்டு உள்ளார்கள் (253-276).

பலரும் அவர் ஆலயங்களுக்கு சென்று கொண்டு இருந்தாலும், அனைவருமே முருக பக்தர்கள் என்று கூற முடியாது. கோபமுள்ளவர்கள், தீய எண்ணம் கொண்டவர்கள், நல்ல பாதையில் செல்லாதவர்கள், தம்முடைய சுகத்தையே பார்த்துக் கொள்பவர்கள், மற்றவர்களைப் பற்றிக் கவலைப் படாதவர்கள் போன்றவர்களினால் அவர் அருகில் செல்ல முடியாது. உண்மையான பக்தர்கள் அவருடைய அருளை மட்டுமே எதிர்பார்ப்பார்கள்.

முருகனின் பிறப்பு

சங்க இலக்கியத்தில் முருகன் பிறப்பைக் குறித்து சிறிதளவே செய்திகள் உள்ளன. பரிபாடல் மட்டுமே முருகனின் பிறப்பைக் குறித்து விவரமான செய்தியை வெளியிட்டு உள்ளது (Paripatal. 5:21-54). சிவபெருமான் உமையுடன் உறவு கொண்டபோது, அவரது விந்து வெளியில் விழுந்து ஆறு பொறிகளாக விழுந்து, இந்திரனின் முயற்சியினால் ஆறு முனிவர்களின் உயிர் நிலையில் சென்று கலந்து , அவர்களுடைய ஆறு மனைவிகளின் கருவில் தங்கியது. அதன் பின் அந்த ஆறு பெண்களும் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்து அவற்றை ஆறு தாமரை மலர்களில் வைத்து இமயமலையில் இருந்த தாடகத்தில் கொண்டு போய் வைத்தார்கள். இந்த செய்தியை சங்க இலக்கியங்கள் சிலவற்றில் காண முடிகின்றது (Muruku. 253-255; Puram. 458-459; Kali. 81-9).

முருகன் பிறந்த அன்றே இந்திரன் முருகனுக்கு எதிராக மாறி அவற்றைக் கொல்வதற்கு தனது வஜ்ராயுதத்தை ஏவினார். அவ்வளவுதான் அந்த ஆறு குழந்தைகளும் உடனே ஒன்றாகி ஆறு முகங்களும், பன்னிரண்டு கைகளையும் கொண்டவராகியது. இந்திரனுக்கு எதிராக ஒன்று சேர்ந்த தேவர்கள் அந்த குழந்தைக்கு தமது உடலின் ஒரு பாகத்தை எடுத்து ஆயுதமாக்கிக் கொடுத்தார்கள். அவையே ஆடு, மயில், சேவல், வில், வாள், மரன், வேல்கம்பு, கோடரி, மறு, கண்நாழி, பூக்கள், மற்றும் மணிகள் என ஆயின. அவற்றை தம்முடைய பன்னிரண்டு கைகளிலும் ஏந்திக் கொண்ட முருகன் கம்பீரமாகக் காட்சி தந்தார் (Paripatal.5:55-70).

தேவர்களின் படைத்தலைவரான முருகன், தேவர்களுக்கு தொல்லைக் கொடுத்து வந்த அனைத்து அசுரர்களையும் அழித்தார் (Kurun.1-2; Muruku. 59-60; Paripatal.1:25-28;5:7). அவர்களில் சூரனை அழித்ததையே அனைவரும் உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள். சூரன் தன்னை ஒரு மாமரமாக மாற்றிக் கொண்டு கடலுக்குள் போய் ஒளிந்து கொண்டு முருகனுடன் சண்டைப் போட்டான். ஆனால் முருகனோ அந்தக் கடலுக்குள் புகுந்து அவனை அங்கேயே அழித்தார் (Muruku.45-46; 50-60; 275). சூரனை அழித்த விவரம் புறம் (23:3-7), பட்டிருப்பட்டு (11:56), பெரும்பனாறுப்படை (456-460), குறுந்தொகை (1:2); கலித்தொகை (27:15-16; 93:25-27; 104:13-14), பரிபாடல் (1:5; 9:70; 14:18; 18:3-4; 19:101; 21:8;28-29) போன்றவற்றில் உள்ளது. அடுத்து குறிப்பிட வேண்டியது முருகன் தனது வேலினால் அழித்த குருஞ்சா எனும் மலையின் கதை ஆகும் (Muruku. 266; Paripatal.8:29; 19:29; 19:26, 102-103). அந்த காலங்களில் மலைகள் பறந்து திறந்துள்ளதாம். அப்படி பறந்து கொண்டு இருந்த இந்த மலை நாவலன்டிவு என்ற இடத்தின் மீது சென்று கொண்டு இருந்தபோது முருகன் அதை தன்னுடைய வேலினால் குத்தி கீழே விழ வைத்தார்.

முருகனின் திருமணம்

தேவர்களை துன்புறத்தி வந்த சூரனையும், குருஞ்சா எனும் மலையும் முருகன் அழித்ததினால், அவருக்கு தனது மகளான தெய்வானையை இந்திரன் மணம் செய்து கொடுத்தார் (Muruku. 6,175; Paripatal. 9.9, 58). அவளை தேவசேனை என்றும் அழைத்தார்கள். ஆகவேதான் முருகனை மருவில்கர்பின் வனுடல் கணவன் (Muruku. 6) என்கிறார்கள். அதன் பின் அவர் பரம்குன்றத்தில் வள்ளிநாச்சியாரையும் மணந்து கொண்டார் (Muruku. 101-102; Paripatal. 8:69; 9:67; 14:21-22; 19:95). அந்த இரண்டுமே இரு வகைகளிலான திருமணம். முதலாவது நடந்தது சமிஸ்கிருத முறையிலான (பிராமண முறை) திருமணம். இரண்டாவதோ பண்டைய கால திராவிட இன - களவு மற்றும் கற்பு எனும் தமிழ்த் திருமணம். தமிழர்களில் களவு மற்றும் கற்பு என்பது நிலை மாற்றத்தினால் ஏற்பட்ட நிச்சயிக்கப்பட்ட திருமணத்தைக் குறிக்கின்றதோ? இங்கு குறிப்பிடப்பட்டு உள்ள களவு எனும் நிலை சற்று வித்யாசமானது. அது பற்றி சங்க இலக்கியங்களில் நிறைய விளக்கம் தரப்பட்டு உள்ளது. அந்த திருமணத்தை ஏற்க முடியாமல் போன தேவசேனை தாங்க முடியாமல் அழுதாள். அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் வெள்ளம் அப்போது மழையாக பரங்குன்றம் முழுவதும் பெய்ததாம் (Paripatal. 9:8-11).

முருகனின் ஆலயம் உள்ள இடங்கள்

சங்க இலக்கியங்களில் முருகனின் முக்கியமான ஆலயங்கள் உள்ள இடங்களும் குறிப்பிடப்பட்டு உள்ளன. அவை : திருப்பரங்குன்றம் , திருச்சிரளைவாய் , திருவாவினன்குடி , திருவேரகம் , குன்றுதோன்றல் மற்றும் பழமுதிர்சோலை போன்றவை. முருகாற்றுப்படையில் முருகனின் புகழ்பெற்ற படைவீடுகளைப் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த ஆறு படைவீடுகளில் குன்றுதோன்றல் மற்றும் பழமுதிர்சோலை என்பன எந்த இடம் எனக் கூறவில்லை. ஆனால் அவை உள்ளப் பகுதியில் உள்ள அனைத்து தோப்புக்கள் மற்றும் பாறைகள் போன்ற இடங்களில் முருகன் அமர்ந்திருந்ததாகவே குறிப்பிடுகின்றன. அந்த இரு பகுதிகளிலும் இருந்த அனைத்து இடங்களும் அவர் இருந்த இடங்களே என்று கூறி காடும் காவும் என்று அந்த இடங்களைப் பற்றிக் குறிப்பிட்டு கூறி உள்ளன (Muruku.223). இந்த இடங்களில் மலைகளில் இருந்து இயற்கையாகக் கொட்டிய நீர்வீழ்ச்சியின் சப்தத்தோடு இணைந்து குருவா இனத்துப் பெண்களுடன் முருகன் வெறியாட்டு என்ற நடனத்தை ஆடினார்.முருகன் நிரந்தரமாக உள்ள இடங்கள் முருகு அமர் மாமலை (Ain. 306:4); செய்குன்றம் (kurun.1-3); பிராங்கு மலை மிமிசைக் கடவுள் (Kurinci. 208-209) போன்றவை.

முருகாற்றுப்படயைத் தவிர திருப்பரம்குன்றம், திருச்சிரளைவாய் என்ற இரண்டையும் பற்றி பல சங்க இலக்கியங்களில் கூறப்பட்டு உள்ளன. திருப்பரம்குன்ற ஆலயம், அதன் திருவிழாக்கள் மற்றும் பிற செய்திகள் என அனைத்தும் பரிபாடலில் கூறப்பட்டு உள்ளன (Paripatal. 6:69-75; 95; 8:11-16; 21:15; Paritirattu 17:1-2;). அதை எழுதிய நலன்துவனாதர் என்ற புலவர் அந்த மலையின் பெருமையை கூறி மகிழ்கிறார் (Paripatal. 6, 8, 11 ,20).

மதுரை மருதநீலகண்டனார் கீழ் உள்ளவாறு கூறி உள்ளார் (Akan. 59: 10-12)

&சுர்மருங்கு அற்ற சுடரிலை நெடுவேல் சினம்மிகு முருகன் தன்பரன் குன்றத்து ஆண்டவன் பாடிய கண்டு கேளு நெடுவரை .

அகநானுறு (59: 10-12) மற்றும் கலித்தொகை (Kalittokai. 27:16) இதை வேலன் குன்று எனக் கூறி உள்ளன.

திருச்சிரளைவாய் பற்றியக் குறிப்பு அகநானுறு (Akam. 266:20-21) மற்றும் புறநானுறு (Puram. 55:17-21) போன்றவற்றில் உள்ளன.

சிறுபாணார்படை வேலூர் என்பது வேல் முருகன் என்பதில் இருந்தே வந்தது என்று கூறி உள்ளது.

திறல் வேல் நுடியில் கேனி
விரல் வேல் வென்றி வேலூர்
இதன் அர்த்தம்:
''ஈட்டி முனைப் போல, தாடகத்தில் மலர் இருக்க, வல்லமை வாய்ந்த ஈட்டியும் வெற்றியுமான வேலூர்'' (சிறுபாணார்படை: 172-173)

நச்சினார்கினியர் என்பவர் இந்த நகருக்கு இந்தப் பெயர் வந்ததின் காரணத்தை ஒரு கிராமியக் கதை மூலம் கூறி உள்ளார்.

முருகன் கையில் வலியுடனையாக்கிய வேலின்ஈட்டி போலே கேனி பூக்கப்பட்ட வெற்றியையுடைய வேலாலே வெற்றியையுடைய வேலூர் என்றது ; இதன் அர்த்தம்: முருகனின் கையில் உள்ள வலிமையான ஆயுதமான வேலைப் போலவே அந்த தாடகத்தில் பூத்த மலரும், அந்த ஊருக்கு வெற்றியைத் தர, அந்த வேலின் பெயராலேயே வேலூர் என்றாயிற்று.

நல்லியக்கோடன் தன் பகைமிகுடிக்கு அஞ்சி முருகனை வளிப்பட்டவழி அவன் இக்கேனியிர் புவி வங்கிப் பகைவரை எரி என்று கானநீர்குறி அதிர்ப்புவைத்தான் வேலாக நிருமிட்டதொரு கதை கூறிறு இதனாலே வேலூர் என்று பெயராயிற்று .

மேல் உள்ளத்தின் கதை இது: ஒருமுறை நல்லியக்கோடன் தனது எதிரிப் படையினரைக் கண்டு துக்கசாகரத்தில் முழுகி முருகனின் அபயக் கரத்தைக் கேட்டான். அவன் கனவில் தோன்றிய முருகன் அங்குள்ள குளத்தில் இருந்து ஒரு மலரைப் பறித்து அதை எதிரிகள் மீது வீசி அவர்களை அழிக்குமாறு கூறினார். அந்த மலரே முருகனின் வேல்கம்பாயிற்று. அதனால்தான் அந்த ஊருக்கு வேல் + ஊரு =வேலூரு என்றப பெயர் வந்தது.

சங்க காலத்தை சேர்ந்த மலைப்பகுதிகளில் வசித்து வந்த குறவ என்ற இனத்தவர் முருகன் என்ற பெயரே அவர்களுடைய கன்னிப் பெண்களைக் தொல்லைப்படுத்தியது (Kurinci: 174-175, Nar 288:10, Aka. 98:9-10) என்பதினால் அந்த நிலையில் இருந்து அவர்களை வெளியில் கொண்டுவர வெறியாட்டு என்ற நிகழ்ச்சி அல்லது விழா என்பதைக் கொண்டாடினார்கள். இதைப் பற்றியக் குறிப்பு அணங்குடை முருகன் (Puram: 299:6); அணங்கு பெண்கள் , நெடுவேல் அணங்குறு மகளிர் (Kurincip: 174-175) போன்ற பல இலக்கியங்களில் உள்ளன. முருகனை வேண்டி செய்யப்படும் அப்படிப்பட்ட வழிபாடுகளை முருகு ஆற்றுப்படுத்தல் (Aka. 22:11); முருகு அயர்தல் (Kurunci: 362:1); வெறி (Ain. 243:2; Nar. 273:4-5; Pari. 5:15); வெறியயார்டல் (Aka. 182:17-18); வெறியாட்டு (Tol. 63,109). என்பார்கள். ஐந்குருண்ணூறு என்பதில் நூறு செய்யுட் பத்திகளில் பத்து செய்யுட் பத்திகளில் வெறியாடலைக் குறித்து கூறப்பட்டு உள்ளது. அதைப் பற்றியும், வேலனைப் பற்றியும் நற்றிணை , குறுந்தொகை , அகநானுறு , முருகாற்றுப்படை போன்ற சங்க இலக்கியங்களிலும் கூறப்பட்டு உள்ளன.

வெறியாட்டில் ஆலய பூசாரியே வேலன் என்பவராக உள்ளார். அவர் முருகனின் வேலினை கையில் கொண்டு இருப்பார். நச்சினார்க்கினியர் என்ற பெயரில் வர்ணனை தரும் வர்ணனையாளர் கூறுவார்'' பிள்ளையின் வேலை ஒரு சின்னமாக எடுத்துக் கொண்டு வருவதினால் அவரே வேலன்''.

கழுத்தில் பச்சை நிற இலைகளினால் ஆன மாலை, நாரை, காட்டு மல்லிகை மற்றும் வெண்தழை அதாவது வெள்ளை இலைகளையும் மாலைப் போல அணிந்து கொண்டு அவர் மீது முருகன் ஆக்ரமித்துக் கொண்டு உள்ளது போல சாமியாடி நடனம் ஆடுவார். அவருடைய மார்பு முழுவதும் சந்தானம் பூசப்பட்டு இருக்கும் (Muruku. 190-193). அப்படி சாமி ஆடுபவரை படிமட்டன் என்பார்கள். அந்த விழாவைக் கொண்டாடும் இடத்தை வெறியார்களம் (Muruku. 222; Kurunci 53:3; 360:1; Aka. 98:18-19;114: 1-2) என்பார்கள். அந்த விழா நடு இரவில் வீடுகளில் உள்ள முற்றம், அதாவது வீடுகளுக்குள் உள்ள திறந்த வெளிக் கூடத்தில் நடக்கும். அதில் ஒருபுறத்தில் கடல் மண்ணைக் கொண்டு வந்து கொட்டி அலங்கரித்து இருப்பார்கள் (C Aka. 138:10; Narr. 268:8-9).

அதன் ஒரு பக்கத்தில் சேவல் கொடி நடப்பட்டு இருக்கும். அந்தக் கொடி மரத்தின் மீது மலர் மாலைகளினால் அலங்கரித்து, மணம் மிக்க ஊதுபத்திகளையும் ஏற்றி வைத்து இருப்பார்கள். அது முருகனை வரவேற்று அமரச் செய்யும் இடம் ஆகும். அவருடைய வாஹனம் மற்றும் அவரது யானையையும் சேர்த்து போற்றி புகழ்ந்து இசைகள் இசைக்கப்படும். - கடம்பு அமர் நெடுவேல் (Perum.75), புலவரை அறியட புகழ் புட்ட கடம்பு அமர்ந்து (Pari. 19.2).

அங்குள்ள மரத்தில் கட்டப்பட்டு உள்ள ஆட்டை வெட்டி அதன் ரத்தத்தை தினை என்ற தானியத்துடன் கலந்து, அதை பரப்பி வைத்து, பலி எனும் பெயரில் மாமிசத்தைப் படைப்பார்கள். பாடல்களை பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் முருகனைப் போற்றி பாடுவார்கள். மலர்களைத் தூவியும் அவரை வணங்குவார்கள் (Narr. 47:9-10: 173:1-4;322:10-12; Aka. 22:8-11; 98:18-19114:1-3; 138:7-13; 187:17-18).

குறவாப் பெண்கள் நடத்தும் வெறியாட்டு நிகழ்ச்சியைப் பற்றி விரிவாக முருகாற்றுப்படையில் கூறப்பட்டு உள்ளது. அவற்றைத் தவிர மேலும் சில விளக்கங்களும் அதில் தரப்பட்டு உள்ளன. அந்த நிகழ்ச்சி நடைபெறும் இடமோ அச்சம் தரும் வகையில் இருக்கும். முருகனை அழைக்கும்போது அந்த இடத்தை நன்கு அலங்கரித்து வைத்தும், பல விதமான உணவுகளைக் கொடுத்தும், இசைகளை இசைத்தும் வழிபாடுகள் நடைபெறுகின்றன். சம்பிரதாயமாக சேவல் கொடி ஏற்றப்படுகிறது, அதன் மீது நெய்யும், வெள்ளை எள்ளையும் கொண்டு திலகம் இடுகிறார்கள், மந்திரங்களை கூறிக் கொண்டே பூக்களால் அர்ச்சனை செய்கிறார்கள்.

ஒவ்வொருவரும் இரண்டு வண்ண உடைகளை ஒன்றன் மீது ஒன்றாக அணிந்து கொள்கிறார்கள். கை மணிக்கட்டில் காப்பு எனப்படும் சிவப்பு நூல்களை கட்டிக் கொள்வார்கள். இரண்டு கொழுத்த ஆடுகளை வெட்டிய ரத்தத்தை புதிதாக சமைத்த அரிசி உணவுடன் கலந்து அதை பலி எனும் பெயரில் படைப்பார்கள். அதைத் தவிர பல்வேறு வகைகளான அரிசி உணவையும் தருவார்கள். செய்வரளி மற்றும் நல்ல மணமுள்ள பூக்களைக் கொண்டு பின்னிய மாலையை அனைத்து இடங்களிலும் கட்டித் தொங்க விடுவார்கள். அந்த மலைப் பகுதியில் உள்ளவர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும், பசி பட்டினி இல்லாமல், எந்த விதமான நோய்களும் இல்லாமல் இருக்க வேண்டும், நல்ல மழை பெய்ய வேண்டும், நிலவளம் செழுமையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் அவரிடம் வேண்டிக் கொள்வார்கள்.

ஒரு பக்கத்தில் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே கொட்டும் நீரின் ஓசை கேட்டபடி இருக்க, இசைக் கருவிகளைக் கொண்டு இசைக்கப்படும் பாடலும் சேர்ந்து அந்த இடத்தை ரம்யமான சூழ்நிலைக்கு கொண்டு செல்லும். அவரோடு சேர்த்து பிணிமுகம் எனப்படும் யானை, மற்றும் அவருடைய வாகனமான மயிலையும் வணங்குவார்கள்.

வேலனும் அந்தக் குறவாக்கள் மற்றும் , அங்குள்ள இளம் பெண்களுடனும் சேர்ந்து நடனம் ஆடுவார். அவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு அங்குள்ள வேங்கை மர அடிக்கு அழைத்துச் சென்று, அங்கும் கள்ளைக் குடித்து விட்டு ஆடுவார். அங்குள்ள ஆண்களும் பெண்களின் கையைப் பிடித்துக் கொண்டு தோண்டக பறை என்ற மத்தள இசைக்கு ஏற்ப ஆடுவார்கள் (Muruku. 197). குரவை நடனம் குறித்து பல இடங்களிலும் கூறப்பட்டு உள்ளது (Muruku. 190-197; Malaipatu. 318-322; Narri. 276:8-10; Puram.129:1-3). அங்குள்ளப் பெண்களுடன் பாறைகள் மீது சென்று நடனம் ஆடுவது முருகனுக்கு பிடித்தமானது. (Muruku.190-217).

மேலே குறிப்பிட்டுள்ள முறையில் செய்யப்படும் வழிபாடு முருகனை மலைவாழ் மக்கள் வணங்கிய விதத்தை எடுத்துக் காட்டுகிறது. மற்ற சமயங்களை சேர்ந்தவர்களும் முருகனை அங்கு வந்து வணங்குவார்கள். அவர்கள் அவருக்கு தினை , மலர்கள், பலியாடுகள் போன்றவற்றைத் தந்து சேவல் கொடி ஏற்றி அதை முருகனுக்கு அற்பணிப்பார்கள்.

மூன்று நிலைகளில் வளர்ச்சியுற்ற முருக பக்தி

சங்க இலக்கியத்தில் மூன்று நிலைகளில் படிப்படியாக வளர்ச்சியுற்ற முருக வழிபாடு பற்றி விவரித்து உள்ளார்கள். அப்போது முருகனை வேலன் என அழைத்தார்கள். அவர் அசைவ உணவை உட்கொண்டவர்களின் கடவுள். ஆட்டு ரத்தத்துடன் கலந்த தினை எனப்பட்ட தானியத்தை அவருக்கு படைத்தார்கள். அவருக்கு நிலையான ஆலயமோ இல்லை வழிபாட்டு இடமோ இல்லாமல் இருந்தது. மலைகளிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அதாவது குன்று மற்றும் பழமுதிர்சோலைப் போன்ற பகுதிகளில் வசித்து வந்த குரவா எனப்பட்ட இனத்தவரின் குடும்பங்கள், தமது வயது வந்த பெண்ணின் அனக்கு என்ற காதல் எண்ணத்தினால் ஏற்படும் உடல் மெலிவு வியாதியைத் தணிக்க, வெறியாட்டு என்ற வழிபாட்டு விழாவை நடத்தி வந்தார்கள். இரண்டாவது வளர்ச்சி திருமுருகாற்றுப் படையில் கூறி உள்ளதைப் போன்ற ஆறுபடை வீடுகள் என்ற பெயரில் இருந்த ஆலயங்கள் முருகனின் தங்கும் இடமாக அமைத்தது . அப்படி அமைந்த ஆலயங்களில் பிராமணர்களும் வந்து வணங்கத் துவங்க அவர்களது செல்வாக்குகளினால் மேலும் மேலும் பலரும், பல இடங்களிலும் இருந்தும் வந்து முருகனை வழிபடத் துவங்கினார்கள். மூன்றாவது பரிமாண வளர்ச்சி பரிபாடலைப் போன்றது. அதில் வெறியாட்டு போன்ற விழாக்கள் தவிர்க்கப்பட்டு முற்றிலும் சமிஸ்கிருத்த மொழியிலான மந்திரங்களை ஓதி செய்யப்பட்ட பூஜை முறைகள் துவங்கி, முருகனை சைவ உணவு உட்கொள்ளும் பக்த நிலைக்கு ஆளாக்கியது.

ஆனால் இன்றும் தமிழ்நாட்டு கிராமப்புறங்களில் உள்ள கிராம தேவதைகளின் ஆலயங்களில் முன்னர் இருந்த வெறியாட்டு போன்ற விழாக்கள் நடைபெற்று வருகின்றன. முன்னர் ஒரு குடும்ப விழாவாக நடைபெற்ற வெறியாட்டு விழாக்கள் கிராம தேவதை விழாவாக கடைபிடிக்கப்பட்டாலும் பல இனத்தவரும் தாம் வணங்கும் தத்தம் தெய்வங்களை வழிபாட்டு அதற்கு எடுக்கும் விழாவாக அதை நடத்துகிறார்கள். அந்த கிராம தேவதை விழாக்களை நடத்துபவர்கள் பெரும்பாலும் அசைவ உணவை உண்பவர்கள் என்பதினால் அந்த விழாக்களில் ஆடு மாடுகளின் பலியும் தரப்படுகின்றது. ஆடுகளின் ரத்தம் கலந்த உணவுகளும் நெய்வித்தியமாக அங்கு படைக்கப்படுகின்றது. அந்த விழாக்களில் தேவதைகளை ஆடம்பரமாக வண்ண வண்ண உடைகளில் அலங்கரித்து, ஆலய முகப்பில் பெரிய பந்தல்களை அமைத்து, மாலைகளைப் போட்டு விழா எடுப்பார்கள். அந்த விழா வெறியாடலைப் போலவே இருக்கும். கிராமிய தேவதைகளின் கைகளில் பல விதமான ஆயுதங்கள் முக்கியமாக வேல் மற்றும் திருசூலம் போன்றவைக் காணப்படும். கொமரட்டடி எனப்படுபவர் விசேஷமான கச்சை மற்றும் மணிகளைக் கோர்த்த கலால் போன்றவற்றை உடுத்திக் கொண்டு நடனம் ஆடும்போது (Muruku. 208: Kaccinan kalalinan) சாமியாடியாகிறார். கொமரட்டடி எனப்படுபவர் வெறியாடலில் உள்ள வேலனைப் போன்றவர். சுற்றி உள்ள கூட்டத்தினர் எழுப்பும் இசைக் கருவிகள் மற்றும் அவர்கள் பாடும் பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடுவார். அப்போது சாமி ஏறும் அவர் பெரியவர், சிறியவர் என்ற பேதம் இன்றி அனைவருக்கும் ஆரூடம் கூறியும், ஆசிர்வாதம் செய்தும், திருநீறு கொடுத்தான் தமது சாமி ஏறிய நிலையைக் காட்டுகிறார்.

திருமுருகாற்றுப் படையில் கூறப்பட்டு உள்ள இரண்டாவது சடங்கு சற்று மாறுதலானது. அதை இயற்றிய நக்கீரர் புதிய இலக்கிய நடையான ஆறுபடை-திருமுருகாற்றுப் படை என்பதைக் காட்டி உள்ளார். ஆறுபடை என்பது முருகனின் ஆறு வழிபாட்டுத் தலங்கள் . ஆகவே நக்கீரர் அவரவருக்கு பிடித்த அந்த தலங்களுக்குச் செல்ல வழிகாட்டி உள்ளார். உண்மையில் முருகன் நிலையாக தங்கும் இடங்கள் அந்த ஆறு வீடுகளில் நான்கில் மட்டுமே. திருப்பரங்குன்றம் , திருச்சிரளைவாய் , திருவாவினன்குடி மற்றும் திருவேரகம் என்பன அவை. குன்றுடோரடல் மற்றும் பழமுதிர்சோலை அதாவது அந்த இரண்டு இடங்களை சுற்றி உள்ள மலையும், அதை சார்ந்த இடங்களிலும் இருந்த சோலைகள் மற்றும் பாறைப் பகுதிகள் வெறியாடல்கள் நடைப்பெற்ற இடங்கள் ஆகும். ஆராய்ச்சியாளர்கள் முருகன் எந்த இடத்தில் எப்படிப்பட்ட தன்மையில் நடனம் ஆடினார் என்பதைக் கண்டறிய முயல்கிறார்கள். அவர் ஒவ்வொரு முகபாவத்தோடும் முருகன் ஆடிய வெறியாட்டு சோலைகள், பாறைகள் என பலவும் பல இடங்களிலும் உள்ளன.

மூன்றாவது வழிபாட்டு முறை முற்றிலும் சமிஸ்கிருத மொழியில் நடைபெறுவது. தேவர்களை துன்புறுத்தி வந்த சூரனை அழித்து, பறந்து வந்து கொண்டிருந்த குறுன்ச்சா மலையையும் தனது வேலினால் உடைத்து தேவர்களை முருகன் காப்பாற்றினார். அதுவே சமிஸ்கிருத மொழியிலான வழிபாட்டு நிலைக்கு முருக வழிபாட்டு முறையைக் கொண்டு சென்றக் கட்டம். அந்த வெற்றியைக் கொண்டாட இந்திரன் தனது மகளான தெய்வானையை முருகனுக்கு மணமுடித்துத் தந்தார். அதற்குப் பின்னரே முருகனின் வாழ்வில் வள்ளி வந்தாள். ஆனால் தெய்வானையினால் வள்ளியின் திருமணத்தை ஏற்க முடியவில்லை என்பதினால் திருமண மண்டபத்தின் மேல் கூரையை கிழித்து பரம்குன்றத்தில் பெரும் மழையைப் பொழிவித்தாள். பரிபாடலில் வெறியாடலைக் குறித்து எந்த செய்தியும் இல்லை. தமிழர்கள் தெய்வானையின் திருமணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் பண்டைய தமிழர்கள் கலாச்சார முறையில் நடைபெற்ற வள்ளி- முருகனின் களவு மற்றும் கற்பு எனும் திருமணமே பெரிதும் போற்றப்பட்டு வந்துள்ளது. இன்றைக்கும் அந்த கருத்தைக் கொண்டு நடைபெறும் நாடகங்கள்- சங்கரதாஸ் ஸ்வாமிகள் என்பவர் துவக்கி வைத்தது- தமிழ்நாட்டில் பல இடங்களிலும் பெரும் வரவேற்புடன் நடைபெறுகின்றன. ஆனால் சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளதைப் போன்றக் காட்சியில் களவு காட்சிகள் அமைந்திருக்கவில்லை.

தொன்மையான தமிழ் சங்க இலக்கியத்தில் முருகன்

தொன்மையான தமிழ் சங்க  இலக்கியத்தில் முருகன்


சங்க காலத்திலேயே (கி.மு. 100 – கி.பி. 600) முருகன் தமிழர்களின் வழிபாட்டில் இருந்தார். தொல்காப்பியம் அவரை சேயோன் என்று அழைக்கிறது. குறிஞ்சி நிலத்தின் (மலை நிலம்) தலைவனாகவும், போர் மற்றும் அன்பின் கடவுளாகவும் போற்றப்பட்டார்.

சங்க இலக்கியங்களான திருமுருகாற்றுப்படை (நக்கீரர் இயற்றியது) முருகனின் அழகையும், வீரத்தையும், அருளையும் அழகாக வர்ணிக்கிறது. இது முருகன் பக்தியின் மிகப் பழைய இலக்கிய சான்று.


முருகனின் புராணப் பிறப்பு
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து பிறந்த ஆறு தீப்பொறிகள், வாயு மூலம் சரவணப் பொய்கையில் விழுந்தன. அவை ஆறு குழந்தைகளாக கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டன. அன்னை பார்வதி அவர்களை ஒருசேர அணைத்தபோது, ஆறுமுகன் (ஷண்முகன்) ஆனார்.

இவர் சூரபத்மன் போன்ற அசுரர்களை வெல்லும் வீரனாக உருவானார். தைப்பூசம் நாளில் அன்னை பார்வதி அவருக்கு ஞானவேல் அளித்தார். அதனால் அசுரர்களை வென்று தேவர்களைக் காப்பாற்றினார்.

பக்தி இயக்க காலத்தில் முருகன்
பக்தி இயக்கம் (6-9ஆம் நூற்றாண்டு) முருகன் வழிபாட்டை இன்னும் வலுப்படுத்தியது. ஆனால் முருகன் பக்தியின் உச்சம் 14-15ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதருடன் வந்தது.

அருணகிரிநாதர் (திருவண்ணாமலை) – முருகனின் தீவிர பக்தர். இவர் இயற்றிய திருப்புகழ் (16,000 பாடல்கள்) முருக பக்தியின் திருவாசகமாகப் போற்றப்படுகிறது. சிக்கலான சந்த அமைப்பு, இசை நயம், ஞானம் நிறைந்த இந்தப் பாடல்கள் இன்றும் முருகன் கோயில்களில் பாடப்படுகின்றன.

முருகன் அவருக்கு நேரில் தோன்றி “சரவணபவ” மந்திரத்தை உபதேசித்தார் என்று வரலாறு கூறுகிறது.

பின்னர் தாயுமானவர், பாம்பன் சுவாமிகள், காசி சிவாச்சாரியார் (கந்த புராணம் இயற்றியவர்) போன்றோர் முருகன் பக்தியை வளர்த்தனர். கந்த சஷ்டி கவசம் (தேவராய சுவாமிகள்) இன்றும் பக்தர்களின் அன்றாட பாராயணமாக உள்ளது.

ஆறுபடை வீடுகள் – முருக பக்தியின் மையங்கள்
தமிழ்நாட்டில் முருகனுக்கு **ஆறுபடை வீடுகள்** உள்ளன:
- திருப்பரங்குன்றம்
- திருச்செந்தூர்
- பழனி
- சுவாமிமலை
- திருத்தணி
- பழமுதிர்சோலை

இவை ஒவ்வொன்றும் முருகனின் வாழ்க்கை நிகழ்வுகளுடன் தொடர்புடையவை. பழனி முருகன் (தாய்-தந்தையிடம் கோபித்து வந்த இடம்) பக்தர்களின் மிகப் பெரிய ஈர்ப்பு மையம்.

உலகெங்கும் பரவிய முருக பக்தி
19ஆம் நூற்றாண்டில் தமிழ் தொழிலாளர்கள் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரிசியஸ் போன்ற நாடுகளுக்குச் சென்றபோது, முருகன் பக்தியும் அங்கு பரவியது.

பத்து குகைகள் (Batu Caves) தைப்பூச விழாவின் உலகப் புகழ் பெற்ற இடமாக மாறியது. இன்று உலகெங்கும் உள்ள தமிழ் சமூகம் தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களில் முருகனை வணங்குகிறது.

முருகன் பக்தியின் செய்தி
முருகன் பக்தி என்பது வெறும் வழிபாடு அல்ல. அது உள்ளார்ந்த வெற்றி, அகங்கார அழிப்பு, ஞானம் பெறுதல், சரணாகதி ஆகியவற்றின் பாதை.

“முருகா” என்று அழைத்தால் போதும் – அவர் ஓடி வருவார் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

இந்தப் புனித வரலாற்றை நினைத்து, நாமும் முருகனின் அருளை வேண்டுவோம்.

🙏 வெற்றி வேல்! முருகா! 🙏
முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!

எட்டுத்தொகை முன்னிறுத்தும் முருகன் - க. விஜய் ஆனந்த்

 எட்டுத்தொகை முன்னிறுத்தும் முருகன் -  க. விஜய் ஆனந்த்  

முன்னுரை

சங்கப் பாக்களைத் தொகுத்தார் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற பிரிப்பை அமைத்தனர். பத்துப்பாட்டில் இடம்பெறும் பாடல்கள் நூல்களில் தொகுப்பாக அமையும்.  எட்டுத்தொகைப் பாடல்கள் தனிநூலாக இல்லாது உதிரிப்பாடல்களின் தொகுப்பாக அமையும்.

நற்றிணை நல்லகுறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்குபரிபாடல் கற்றறிந்தார்
ஏத்தும் கலியொடு அகம்புறம் என்ற
இத்திறந்த எட்டுத்தொகைஎன்பதோர் நூற்பா.

அகமும், புறமுமாய் அமைகின்ற நூல்கள் இவை.  இந்த எட்டு நூல்களில் முருகனைப் பற்றிய செய்திகள் பலவகைகளில் இடம்பெற்றுள்ளன.  அவற்றை உட்தலைப்பிட்டுப் பகுத்துப் பார்த்தல் பயன்பலன்தரும்.  அதனையே இக்கட்டுரை  மேற்கொள்கிறது.

சங்ககாலம் முதலே முருகன் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன.  தமிழில் கிடைத்த முதல் இலக்கண நூலாக விளங்கும் தொல்காப்பியம் முருகனைச் “சேயோன்” என்ற சொல்லால் குறிப்பிட்டுள்ளது. இதனை முருகனைப் பற்றிய முதற்பதிவாகக் கொள்ளலாம்.  சங்கப் பாக்களில் முருகப்பெருமானின் பிறப்புமுறை, தோற்றப்பொலிவு, பெயரீடுகள், ஊர்திகள், கொடிகள், ஆயுதங்கள் மற்றும் தொன்மச் செய்திகள் போன்றவை இலக்கியங்களில் எடுத்தாளப்பெற்றுள்ளமை குறித்தும், முருகனின் ஆறுபடை வீடுகளின் சிறப்புகள் பற்றியும் இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

பெயரீடுகள்

சங்க இலக்கியங்களில்  முருகனைக் குறித்து வழங்கும் பெயர்கள் மிகுதி.  இப்பெயர்கள் அனைத்தும் அவற்றின் சூழல்களின் அடிப்படையில் வெவ்வேறாக அமைந்துள்ளன.  முருகனைக் குறித்து (முருகனுக்குரிய) பெயர்களாகச் சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அணங்கு, கடவுள், மலைவான், விறல்வேள், மலைஉறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் போன்றவை சுட்டப்படுகின்றன. பதிவுகள் சில வருமாறு:

(1)   குறுந்தொகை

சேவலங் கொடியோன் (கடவுள் வாழ்த்து), சேய் (பாடல் -1), முதிர்கடவுள்(87), நெடுவேள்(111), தெய்வம் (263), முருகு (362).

(2)  நற்றிணை

முருகு(47,82,225), நெடுவேள்(173), கடவுள்(251), தெய்வம்(351),   அணங்கு(376).

(3)  ஐங்குறுநூறு

அணங்கு (28), சேய் (242), கடவுள் (243, 257), முருகு (245,247,249,308), மலைவான் (248), மலைஉறை கடவுள் (259), விறல்வேள் (250).

  • அணங்கு – முருகவேள் என்று உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(4)  அகநானூறு

முருகன் (1,59,98), கடவுள்(13,156), நெடுவேள்(22,98,120,232,382), முருகு (11,28,118,158,181,232,288), நெடியோன்(149).

(5) கலித்தொகை

தெய்வம் (39), சேய் (39,104) கடவுள் (93).

(6) பரிபாடல்

சேய் (5, 21) , செவ்வேள் (5), முருகு (5,8), முருகன் (21), கடம்பமர் செல்வன் (8), குன்றமர்ந்தாண்டான் (17), செல்வன் (18, 21), மாஅல் மருகன் (19), நெடுவேள் (21).

(7) பதிற்றுப்பத்து

முருகு (26).

(8) புறநானூறு 

சேய் (14,120,125), முருகன் (16,23,299), நெடுவேள் (55), முருகு (56,259), கடவுள் (158).

மேற்சுட்டப்பட்ட பெயர்களில் உரைகள் வாயிலாகத் தெய்வம், கடவுள், அணங்கு போன்றவை அனைத்தும் முருகனுக்குரிய பெயரீடுகளாக கொள்ளப்பெற்றிருப்பதனைக் காணவியலுகின்றது.

தோற்றப்பொலிவு

முருகப்பெருமான் ஒப்பற்ற ஆறு தலைகளையும், பன்னிரண்டு தோள்களையும் தன்னகத்தே ஒருங்கே பெற்றுள்ளதைப் பரிபாடல் 5ஆம் பாடலானது விளக்குகிறது.  மேலும் மறியும், மயிலும், சேவலும், வில்லும், மரனும், வாளும், ஈட்டியும், கோடரியும், மழுவும், கனலியும், மாலையும், மணியும் ஆகியவற்றைத் தன் பன்னிரண்டுத் திருக்கைகளிலும் கொண்டவன் என்பதை நூல்கள் பேசும். இனி இவனே நம் படைக்குத் தலைவன் என எண்ணி முருகனுக்குத் தீக்கடவுள் கோழியையும், இந்திரன் மயிலையும் தந்தனர். இயமன் வெள்ளாட்டு மறியை ஈந்தான். பிற தேவர்கள் தந்த மறியும், மயிலும், சேவலும், வில்லும், மரனும், வாளும், ஈட்டியும், கோடரியும், மழுவும், கனலியும், மாலையும், மணியும் ஆகிய இவற்றைப் பன்னிரண்டுத் திருக்கைகளிலும் கொண்டு அமரப்படைக்குச் செவ்வேள் தலைவனான செய்தியை எடுத்தியம்புகிறது சங்க இலக்கியம்.

உவமை

முருகனின் தோற்றப் பொலிவினைச் சங்கப் பாக்கள் முன்னிறுத்துகின்றன. குறுந்தொகையில் முருகனது திருவடியின் நிறத்திற்கும், அழகிற்கும் தாமரை மலர் உவமையாகச் சுட்டப்படுகிறது. முருகப்பெருமான் அணிந்துள்ள ஆடையானது சிவப்பு நிறம் பொருந்திய குன்றிமணியினை ஒத்ததாய் அமைந்துள்ளது. மேலும், அகம். 120ஆம் பாடலில் நெடுவேளின் செம்மேனிக்குச் செவ்வானமும், அவ்வானத்தையொட்டி வரிசையாகப் பறந்து செல்லும் கொக்கிற்கு முருகனது மார்பிலணிந்த முத்தாரமும் உவமையாகச் சொல்லப்பட்டுள்ளன. பரிபாடலில் மூவிரு கயந்தலை முந்நான்கு முழவுத்தோள் என்னும் வரியில் ‘சேய்’ மத்தளம் போன்ற பன்னிரண்டுத் தோள்களை உடையவன் (பரி.5) என்றும், “ஞாயிற்றேர் நிறத்தகை” (ஞாயிறு எழுச்சிக்கண் உண்டாகும் நிறத்தைப்) பெற்றவன் என்றும் பொருள்படும் சொற்கள் உள. முருகப்பெருமானின் உடையும், மாலையும் சிவந்த நிறமுடையன. வேற்படையும் பவழக்கொடியினது நிறத்தை ஒத்துள்ளதைப் பரிபாடலின் 18 ஆம் பாடல் உடையும் ஒலியலுஞ் செய்யை மற்றாங்கே”,  படையும் பவழக் கொடிநிறம் கொள்ளும் என்ற பாடல் வரிகள்  தெளிவுபடுத்தும். செந்தீயைப் போன்றதொரு நிறத்தையும், ஞாயிற்றினது மண்டிலத்தையும் ஒத்த நிறமுடையவன் என்பதை உருவும் உருவத்தீ ஒத்தி முகனும்”, “விரிகதிர் முற்றா விரிசுடர் ஏத்திஎன்ற பாடல் வரிகள் விளக்குகின்றன.

கொடிகள்

குறுந்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலில் முருகன் சேவலங் கொடியோன் என்று சிறப்பிக்கப்படும். சேவற் கொடியே மட்டுமன்றி மயிலையும் கொடியாக உடையவன் முருகன் பெருமான் என்பதை அகநானூறு (பாடல். 149) குறிப்பிடுகின்றது. பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரியஎன்ற வரியில் இதனைக் காணலாம். 8ஆம் பரிபாடலில் முருகப்பெருமானின் கொடி சேவற்கொடி என்று விளக்கப்பெறுகிறது. மயிலையும், கோழியையும் செவ்வேள் ஒருசேரக் கொடியாகக் கொண்ட செய்தியை (பரி.17) அறியமுடிகிறது. பரிபாடல் 18, 21 ஆம் பாடல்களில் செவ்வேள் மயிற்கொடியினை உடையவன் என்று வரும் செய்தியும் தெளிவுதரும்.

ஊர்திகள்

உலகில்  உள்ள  ஒவ்வோர்  இறைவனும்  தமக்கென  ஓர்   ஊர்தியினைச்   சிறப்பாகக்  கொண்டு  தம்  தொழிலினைச்  செய்வர்.  அவ்வகையில்  முருகப்பெருமானின்  ஊர்திகளாகப்  பிணிமுகம்  என்னும்  யானையும்,  மயிலும்  அமைகின்றன.

அகநானூற்றில்  முருகப்பெருமான்  களிற்றைத்  தன்  ஊர்தியாகக்  கொண்ட  செய்தியை,                                                                                                                                                                                                                                        “கடம்புங்  களிறும்  பாடித்  தொடங்குபு” (138)

என்ற பாடல்  வரி  உணர்த்துகின்றது.  மேலும்  புறம்.  56ஆம் பாடலும் இவற்றையே சுட்டுகின்றது.   5ஆம்  பரிபாடலில் முருகக் கடவுளின் வாகனமாகப் பிணிமுகம்  என்னும் யானையும் மயிலும்  ஊர்திகளாக அமைந்துள்ளன. இவற்றையே அன்றி, (பரி. 8 )  ஊர்தி –  யானை, (பரி.17) ஊர்தி – யானை, (பரி.18) ஊர்தி – மயில்,  (பரி.19)  ஊர்தி-யானை   (பரி.21)  ஊர்தி-யானை என்றவாறு செய்திகளமையக் காணலாம்.

மாலை

முருகனுக்குரிய  மாலையாகக்  கடம்ப  மாலையானது  சிறப்பிடம்  பெறுகிறது.    முருகன்  கடம்ப  மாலையைச்  சூடியவன்  என்பதைக்  குறுந்தொகை 87ஆம் பாடலானது மொழியும்.  முருகப்பெருமான்   கடம்பின்கண்  உறைகின்ற  செய்தியை  மேற்சுட்டப்பட்ட  பாடலானது  எடுத்துரைக்கிறது.  மேலும்  அகநானூறு  (பாடல்.138)  வரியில்  கடம்ப  மாலை  பற்றிய  குறிப்புகள்  இடம்பெறுகின்றன.  புறம்.23 ஆம் பாடலில்  கடம்ப  மாலை  செவ்வேளுக்குரியது  என்ற  செய்தி உள்ளது.  18, 21 ஆகிய பரிபாடல்களும் கடம்பினது  சிறப்பினை  எடுத்துரைக்கின்றன.

ஆயுதம்

முருகனுக்குரிய  ஆயுதமாக  வேல்  விளங்கியதைப்  பரிபாடல்  5ஆம்  பாடலானது குறிப்பிடுகின்றது.  விறல்வெய்யோனூர்  மயில்  வேனிழனோக்கி  (பரிபாடல்  –  21) என்ற வரியில் செவ்வேள் பகைவரைக் கொன்ற வேலினை உடையவன் என்று சுட்டப்பெறுகிறது. வேல் பற்றிய செய்திகள் குறுந்தொகை (கடவுள் வாழ்த்து), அகம்.(10), கலி. (27, 93, 104),  பரி. (19, 26) போன்றவற்றில் இடம்பெற்றுள்ளன.

தொன்மம்

புராணம்  என்பது  பழையது, பழங்கதை  என்ற  பொருளுடையது. தொன்மம்  என்பதன்  பொருளாகத்  தொல்காப்பியர்,

           தொன்மை  தானே உரையொடு   புணர்ந்த
         பழமை  மேற்றேஎனக் குறிப்பிட்டுள்ளார்.  தொன்மத்தினை  அவற்றின்  பாடுபொருளின்  அடிப்படையில்  சடங்கு  சார்ந்த   தொன்மம், சமயம், மெய்யியல், பழக்க வழக்கம் சார்ந்த தொன்மங்கள் என வகைப்படுத்துவதுண்டு.  அவ்வகையில் முருகப்பெருமானின்  பிறப்புமுறை,  உறவுமுறை மற்றும்  புராணச் செய்திகள்  அனைத்தும்   தொன்மத்தின்  பாற்படும்.

பிறப்புமுறை

செவ்வேள்  சரவணப்  பொய்கையில்  பிறந்து, அறுவகைக்   கார்த்திகை  மகளிர்பால்  வளர்க்கப்பெற்றவன்  என்பதையும், உலகத்தை  அழிக்கும்  தொழிலை உடைய  சிவபெருமானுடைய  திருமகன்  என்பதையும் 5ஆம்  பரிபாடலின் வழி  அறியமுடிகிறது.  பரிபாடலின் 8ஆம்  பாடலானது  முருகனது   பிறப்பினை  மணமிடற்றண்ணற்கு மதியாரற்  பிறந்தோய்  நீ என்னும்  அடியில்   விளக்கியமைகிறது. மேலும்  முருகப்பெருமான்  தோன்றிய  பொழுதே  இந்திரன்  முதலிய  தேவர்கள்  அப்பெருமானை  ஆற்றாது  அஞ்சிய  செய்தியினைப்   பரிபாடலின்  14ஆம்  பாடலானது  சுட்டுகிறது.  கலித்தொகையில்  (பாடல் 83) முருகன் ஆல்அமர்  செல்வன்  அணிசால்  மகன் என்ற  கருத்தும்  ஈங்குச்  சட்டப்படுகிறது.

நம்பிக்கைத் தொன்மம்

நம்பிக்கை  சார்ந்த  தொன்மங்களும்  பண்டைய இலக்கியங்களில்  இடம்பெற்றுள்ளதை அறியமுடிகிறது. அவ்வகையில் குறுந்தொகையில் முருகன் பற்றிய தொன்மக் குறிப்புகள் காணப்பெறுகின்றன.

முருகப்பெருமான் இவ்வுலகைக் காத்தலானே இவ்வுலக உயிர்கள் நிலைபெற்றன என்னும் செய்தியைக் குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலில் காணமுடிகிறது.

பண்டைத் தமிழர்கள் மரத்தின்கண் தெய்வம் உறைகின்றது என்ற நம்பிக்கை உடையோராய் விளங்கியதை இலக்கியங்கள் கூறும். அவ்வகையில் குறுந்தொகையின் 87ஆம் பாடலில் மன்ற மராஅத்த பேஎமுதிர்க் கடவுள் எனும் அடியில் முருகப் பெருமான் கடம்ப மரத்தின்கண் உறையும் செய்தியை அறிய இயலுகிறது.

சடங்கு சார்ந்த தொன்மம்

சங்க இலக்கியங்களில் சடங்கு சார்ந்த தொன்மங்களும் ஒருசேர இடம்பெற்றுள்ளன. வேலன் வெறியயர்தல் என்னும் பகுதியில் தலைமகள் உடல் மெலிவுற்றமை தெய்வத்தால் வந்தது என எண்ணி, உறவினர் முருகவேளுக்கு வெறியாட்டு நிகழ்த்திய செய்தி,

“உண்துறை அணங்கு இவள் உறைநோய் ஆயின்” எனும் ஐங்குறுநூறு நூலில் (பாடல் – 28) இடம்பெற்றுள்ளதை அறியலாம். மேலும்,

      “சேய் மலைநாடன்’ செய்த நோயே”            (ஐங். 242)

“கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி”       (ஐங். 243)

“முருகு என மொழியும் ஆயின்”               (ஐங். 245)

“அணங்கும் அணங்கும் போலும் அணங்கி ”      (நற். 376)

“அன்னை அயரும் முருகுநின்”                 (நற். 376)

“முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல”       (குறுந். 362)

“நெடுவேள் பேணத் தணிகுவள் இவளென”      (அகம். 22)

“முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்”        (அகம். 22)

“செல்வன் பெரும் பெயர் ஏத்தி வேலன்”        (அகம். 98)

போன்ற அடிகள் சடங்கு சார்ந்த தொன்மத்திற்குச் சான்றாகத் திகழ்கின்றன.

புராணச் செய்தி

புராணம் என்பதற்குப் பழங்கதை என்பது பொருளாகும். முருகனைக் குறித்த புராணச் செய்திகள் சங்க இலக்கியத்தில் மிகுதியாக இடம்பெற்றுள்ளன.

முருகன் அவுணர்களுக்குத் தலைவனாக விளங்கப்பெற்ற சூரபதுமனையும், அவனது சுற்றத்தாரையும் அழித்த செய்தி இலக்கியங்களால் புனையப்பெறும். அவ்வகையில் குறுந்தொகை (பாடல். 1) செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த செய்தியும், கடலின்கண் நடுவே மாமர வடிவாய் நின்ற சூரபதுமனை முருகவேள் அழித்தச் செய்தியும் கருதத்தக்கன. 59ஆம் அகநானூற்றுப் பாடலில் “சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேல்” என்ற குறிப்பும் காணக்கிடக்கிறது.

      “ஒன்னாதார்க் கடந்து அடூஉம் – உரவுநீர் மாகொன்ற”   (கலி. 27)

“மாகடல் கலக்குற மாகொன்ற மடங்காப்போர்”        (கலி. 104)

“சூர்கொன்ற செவ்வேலாற்பாடி பலநாளும்”            (கலி. 93)

“சுருடை முழுமுதல் தடிந்த பேர் இசை”             (பதிற். 11)

“முருகு உடன்று கறுத்த கலி அழி மூதூர்”            (பதிற். 26)

“சூர்நவை முருகன் சுற்றத்து அன்ன”                (புறம். 23)

“நோயுடை நுடங்குசூர் மாமுதல் தடிந்து”             (பரி. 5)

போன்றவரிகள் கவனத்துக்குரியவை.

மேலும் (பரி. 18), (பரி. 21) போன்ற பாடல்களும் சூரபதுமனை முருகன் வெற்றி கொண்ட சிறப்பினை எடுத்துரைக்கின்றன.

கிரௌஞ்ச மலையைப் பிளந்தமை

முருகப்பெருமான் குருகுபெயர்க்குன்றம் என அழைக்கப்படும் ஒரு மலையைத் தன் வேல்கொண்டு அழித்ததை “நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்” (குறுந்.கட.வாழ்) பாடலால் அறியமுடிகிறது. (பரி. 5, 19) பாடல்களும்  மலையைப் பிளந்த செய்தியினைக் குறிப்பிடுகின்றன. (குருகுபெயர்க் குன்றம் என்பது கிரௌஞ்ச மலையென்பது உரைச்செய்தி).

திருமண உறவு முறை

முருகவேள் வள்ளியுடன் கூடிச் சென்றதைக் குறிப்பால் “முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல” எனும் நற்றிணை 82ஆம் பாடலானது சுட்டுகிறது. வள்ளியை முருகக் கடவுள் மணந்த செய்தியை 9ஆம் பரிபாடலானது எடுத்துரைக்கிறது.

அதற்கான சான்று வருமாறு,

மையிரு நூற்றிமையுண் கண்மான்மறி தோண்மணந்த ஞான்று

முருகன் – வள்ளி ஆகிய இருவருக்கும் இடையே ஆன உறவு முறையானது இலக்கியங்களில் தெளிவுறச் சுட்டப்படும். ஆனால் முருகக் கடவுள் தேவசேனையை மணந்த செய்தியானது குறிப்பால் மட்டுமே (பரி. 9ஆம் பாடலில் காணப்படுகிறது. இவை தவிர வேறு எந்த எட்டுத்தொகை இலக்கியத்தின் கண்ணும் தெய்வானை பற்றிய குறிப்புகள் இல்லை. சங்க இலக்கியங்களில் தெய்வானை என்ற சொல் இடம்பெறவே இல்லை என்பதை அறியமுடிகிறது.

படைவீடுகளின் சிறப்புகள்

முருகனுக்குரிய படைவீடுகள் ஆறென்ப. சங்ககாலத்தில் ‘படைவீடு’ என்ற கருத்தாக்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பின்னர்வந்த படைவீடுகளின் செய்திகள் சங்க நூல்களில் பொருத்திப் பார்த்திருப்பதாகச் சிலர் கருதுவர். அவற்றை நிரல்படுத்துவது தேவை. முருகப்பெருமானின் படைவீடுகளாக திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை போன்றவை திகழ்கின்றன. ஆறுபடை வீடுகளுள் முதலாவதாக அமையும் திருப்பரங்குன்றத்தின் சிறப்புகளே மிகுதியாக இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன.

ஒன்னாதார்க் கடந்து அடூஉம். உரவுநீர் மா கொன்ற (கலி-27) ஆம் பாடலில் திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் சூரபதுமனை அழித்தச் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளதென்பர்.

  • திருமால், சிவன், பிரம்மன், பன்னிரு ஆதித்தர், அசுவனிமருத்துவர், வசுக்கள் எண்மரும், உருத்திரர், திக்குப் பாலகர், தேவர், அசுரர், முனிவர் ஆகிய அனைவரும் திருப்பரங்குன்றத்தின்கண் வந்து உறைவதால் குன்றம் இமய மலைக்கு நிகராகச் சுட்டப்பட்டுள்ளதைப் பரிபாடல் 8ஆம் பாடலானது விளக்குகிறது.
  • இமயக் குன்றினில் உள்ள ஏனைச் சுனைகளினும் சிறந்தது திருப்பரங்குன்றத்துச் சுனை என்பதும், அவை என்றும் வற்றாமல் ஒரே நிலையில் இருப்பது சிறப்பாகும் என்பதும் கூறப்பட்டுள்ளன.
  • குன்றின்கண் இசைக்கருவிகள், நறுமணப் புகைகள், வானளாவி நிற்பதைப் பரி. 17ஆம் பாடலானது விளக்குகிறது.
  • ஐந்து வகையான மலைப் பொருள்களைக் குன்று பெற்றுத் திகழ்வதைப் பரிபாடலின் 18ஆம் பாடலால் அறியமுடிகிறது.

முருகப்பெருமானின் படை வீடுகளுள் திருப்பரங்குன்றச் சிறப்புகளே எட்டுத்தொகையில் மிகுதியாக இடம்பெறுகின்றன. ஏனைய படைவீடுகளாக விளங்கப்பெறும் பழனி மற்றும் திருச்செந்தூர் ஆகியவைக் குறிப்பால் மட்டுமே சுட்டப்பட்டுள்ளன.

படைவீடு (திருச்செந்தூர்)

முருகனது ஆறுபடை வீடுகளுள் இரண்டாம் படைவீடாக விளங்கும் திருச்சீரலைவாய் எனப் பெயர்பெறும் திருச்செந்தூரின் சிறப்பைப் புறநானூற்றுப் பாடலில் காணமுடிகிறது.

வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்”  (புறம். 55)

வெண்மையான மேற்பரப்பினையுடைய அலைகள் திரியும் திருச்செந்தூர் எனச் சிறப்பிக்கப்படுகிறது. இப்பாடலில் இடம்பெறும் ‘செந்தில்’ என்ற பெயரானது முருகன் உறையும் திருச்செந்தூரையும், முருகனையும் குறித்த சொல்லாய் அமைந்துள்ளது.

படைவீடு (பழனி)

முருகக் கடவுளின் ஆறுபடை வீடுகளுள் ஒன்றாக அமையும் பழனி மலை பற்றிய குறிப்புகள் புறம். 158 ஆம் பாடலில் காணப்படுகின்றன. கடையெழு மலையில் முருகன் கோயில் கொண்டுள்ளதைக் குறிப்பால் உணர்த்துவதாகச் சில பகுதிகள் அமைகின்றன.

நிறைவுரை

தமிழரின் அக  வாழ்விலும், புற வாழ்விலும் முருகக் கடவுள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததை இலக்கியங்கள் நமக்குப் பகர்கின்றன. அவ்வகையில் முருக வழிபாடு தமிழ் மக்களின் சமய வாழ்க்கையில்  தனித்ததோர் இடத்தைப் பெற்றுள்ளதை அறியமுடிகின்றது.

பயன் நல்கிய நூல்கள்

  1. அண்ணாமலை, வே. (2000), சங்க இலக்கியத்தில் தொன்மக்களஞ்சியம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம்.
  2. இராசமாணிக்கம், தி. (1984), தமிழர்தம் தனிப்பெருங்கடவுள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
  3. சாமி, பி.எல். (1990), சங்க நூல்களில் முருகன், சேகர் பதிப்பகம், சென்னை.
  4. ஞானம், ப. (2001), தமிழ் இலக்கியத்தில் முருகன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
  5. பாலசுப்பிரமணியன், சி. (1972), முருகன் காட்சி, பாரி நிலையம், சென்னை.

*****

கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்
சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம்
புதுவைப் பல்கலைக்கழகம்
புதுச்சேரி – 149944316067

 

 

பதிவாசிரியரைப் பற்றி